நாயகன் - சுதீர் பாபு
நாயகி - வாமிகா
இயக்குனர் - ஸ்ரீராம் ஆதித்யா
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு தேசத்தில் சற்றே வித்தியாசமான கதையுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''பலே மஞ்சி ரோஜு''. மாறுபட்ட கதைகளில் நடித்துவரும் சுதீர் பாபு இம்முறையும் சற்றே சுவாரஸ்யமான கதையில் நடித்திருக்கிறார்.
சுதீர் தனது காதலியால் ஏமாற்றப்பட்டு மனம் வெதும்பி அவளுக்கு தக்க பாடம் கற்பிக்க நினைக்கிறார். அவளை சந்திக்க நினைத்து பயணத்தை தொடங்குகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சிறு விபத்து எற்பட்டு ஒரு பெரிய ரௌடியான சாய் குமாரின் காரில் லேசாக மோதிவிடுகிறார்.
இதனால் சாய் குமாரால் கடத்தப்பட்டு காரில் வைக்கப்படிருந்த வாமிகா தப்பித்து விடுகிறார். இதனால் கோபம் அடையும் சாய் குமார், சுதீரின் ஆருயிர் நண்பனை பிடித்து வைத்து கொண்டு மிரட்டுகிறார். அவனால் தப்பித்துவிட்ட பெண்ணை அவனே மீண்டும் கடத்தி கூட்டி வரவேண்டும் என்கிறார்.
வேறு வழியில்லாது சுதீர் இதற்கு சம்மதிக்கிறார். வாமிகாவை தேடி சுதீர் கடத்த முற்படும் போது அவரை வேறு ஒரு கும்பல் கடத்திவிடுகிறது.ஏன் இந்த கடத்தல் நாடகம்? இதன் பின் சுதீர் என்ன செய்தான்? காதலியுடன் இணைந்தானா? என்பதை கொஞ்சம் திரில்லாகவும் கொஞ்சம் சிரிக்கவைத்தும் சொல்லியிருக்கிறார்கள்.
இப்படி பட்ட முடிச்சுகள் நிறைந்த கதையை கையில் எடுத்து அதை சற்றும் குறைவில்லாத திரைக்கதையால் மெருகேற்றி அவ்வப்போது சில திருப்பங்களுடன் அழகாக இயக்கிய ஸ்ரீராம் ஆதித்யாவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்
சுதீர் பாபு தனி ஆளாக படத்தை இறுதிவரை சுமந்து செல்கிறார். அவரது கதாபாத்திரத்திற்கு மிகச் சரியாக பொருந்தி போகிறார். நாயகி வாமிகா தனது அறிமுக படத்திலேயே கவனிக்க வைக்கிறர். முதல் பாதி முழுவதும் புயல் வேகத்தில் செல்லும் கதை, இடைவேளையில் திடுக் திருப்பத்துடன் ஆச்சர்யப்படுத்துகிறது.
பலவீனம் என்று பார்த்தால், இரண்டாம் பாதியில் வேகம் குறைவு, என்னதான் சுவாரஸ்யமான காட்சிகள் அடுத்தடுத்து வந்தாலும் படத்தின் பிற்பாதி, முன்பாதியை விட வேகம் குறைவாகவே இருக்கிறது. பாடல்கள் நன்றாக இருந்தாலும், அடுத்தடுத்து வந்து வேகத்தடை போடுகிறது அதை தவிர்த்து இருந்தால் இன்னும் படம் வேகமெடுத்திருக்கும்.
இப்படி பட்ட படத்தில் நிறைய துரத்தால் காட்சிகள் சண்டை காட்சிகள் இருக்கும் அத்தனை காட்சிகளையும் அதன் விறுவிறுப்பு குறையாமல் படமாக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர். இதேபோல் படத்தின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரும் பலம். அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் தனது முதல் படத்திலேயே ஒரு வழக்கத்திற்கு மாறான கதையை கையில் எடுத்து அதை எல்லோரும் ரசிக்கும் வண்ணம் கொடுத்திருக்கிறார்.
பலே மஞ்சி ரோஜு - கடத்தல் காமெடி