கடந்த வருடம் 'வெள்ளிமூங்கா' படத்தின் மூலம் சோலோ ஹீரோவாக வெற்றியை ருசித்த பிஜுமேனன், மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள படம் தான் 'சால்ட் மேங்கோ ட்ரீ'.
பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மெடிக்கல் ஷாப் நடத்திவருபவர் பிஜுமேனன் வெறும் டிகிரி மட்டும் முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலைபார்ப்பவர் அவரது மனைவி லட்சுமி பிரியா (மாயா படத்தில் நயன்தாராவின் தோழியாக வந்தாரே அவர் தான்). அதனால் தங்களது நான்கு வயது மகனை மிகப்பெரிய நர்சரி பள்ளியில் சேர்த்து ஆங்கிலக்கல்வி அளிக்கவேண்டும் என லட்சுமி பிரியாவுக்கு ஆசை.. கனவு, லட்சியம் எல்லாம்.
அதற்காக தனது மகனை இன்டர்வியூவிற்கு தயார் செய்யும் விதமாக ஆங்கிலத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க விதவிதமான ஏற்பாடுகளை செய்கிறார் லட்சுமி பிரியா. கணவர் பிஜுமேனனும் இவரது தடாலடிகளுக்கு வேறு வழியில்லாமல் உடன்படுகிறார். ஆனால் சில பள்ளிகளில் இவர்கள் இருவருக்கும் ஆங்கிலம் சரியாக பேசவராததால் அட்மிஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.. அதாவது அப்படி ஏற்படுவதாக லட்சுமி பிரியா நினைத்துக்கொள்கிறார்
இந்த நிலையில் சுகாசினி நடத்தும் ஷைனிங் ஸ்டார் என்கிற கோச்சிங் சென்டரில், பிள்ளைகளுடன் பெற்றோர்களையும் பள்ளி இன்டர்வியூவுக்கு தயார்செய்வதை கேள்விப்பட்டு அங்கே செல்கிறார்கள்.. ஒருவார கால பயிற்சியும் பெறுகிறார்கள். இறுதியாக தனது மகனுக்கு அட்மிஷன் கிடைக்க ஒரே வாய்ப்புள்ள பள்ளிக்கு இன்டர்வியூக்கு செல்கிறார்கள் பிஜுமேனன் - லட்சுமி பிரியா தம்பதி.
அங்கே அவர்களது மகன் ஆங்கிலத்தில் பதில் சொல்லாமல் கிராமத்தில் தனது தாத்தா தனக்கு சொன்ன புராணக்கதையை சொல்கிறான். இன்டர்வியூ நடந்து சில நாட்கள் ஆன நிலையில், இவர்களுடன் கோச்சிங்கில் கலந்துகொண்ட மற்ற சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கெல்லாம் வெவ்வேறு பள்ளிகளில் அட்மிஷன் கிடைத்துவிட்டதாக லட்சுமி பிரியாவிடம் சொல்கிறார்கள்.
இதனால் மனம் உடைந்த லட்சுமி பிரியா, மகனையும் அழைத்துக்கொண்டு ஆதங்கத்தோடு சுகாசினியை பார்க்க செல்கிறார்.. அங்கே சுகாசினியின் மகனது கடந்த காலத்தை கேட்டும் தற்போது அவனது நிலையை கண்டும் அதிர்ச்சியடைகிறார் லட்சுமி பிரியா.. கூடவே லட்சுமியின் மகனும் சின்னதாக ஒரு அதிர்ச்சி வைத்தியம் தர, அதேநேரம் பிஜுமேனனும் நல்ல செய்தியுடன் ஓடிவர, சுபமாக முடிகிறது படம்.
தங்கள் குழந்தைகளுக்கான கான்வென்ட் கல்வி என்கிற இன்றைய நடுத்தர தம்பதிகளின் முக்கிய கனவான ஆங்கில கல்வி மோகத்தை மையமாக வைத்து முழுப்படமும் நகர்கிறது. பிஜுமேனன் ஒவ்வொரு காட்சியிலும் தனது நகைச்சுவையான நடிப்பை பாவனைகளில், வசனங்களில், செயல்களில் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். குறிப்பாக 'சைல்ட் லேபர்' பற்றி ஆங்கிலத்தில் பேச சொல்ல, அவரோ அதற்கான அர்த்தம் தெரியாமல் பிரசவ வலியை பற்றி அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவது சரியான கலாட்டா.
யதார்த்த குடும்பத்தலைவியாக லட்சுமி பிரியா.. அழுத்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். தனது மகனின் அட்மிஷனுக்காக அவர் பரிதவிக்கும் காட்சிகள் கொஞ்சம் அதிகப்படி தான் காட்டுவதும் என்றாலும் கான்வென்ட் பள்ளி வாசலில் அப்ளிகேஷன் வாங்க படுத்துக்கிடக்கும் பெற்றோர்களை பார்க்கும்போது அந்த யதார்த்தம் சுடவே செய்கிறது... குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்த ஆங்கிலப்பெண்ணான தனது அண்ணியிடம் தனது மகனுக்கு ஆங்கிலம் கற்றுத்தர சொல்வதும், அவரோ அவசியம் ஏற்பட்டால் தவிர ஆங்கிலத்தில் பேசுவதில்லை என மலையாளம் கற்க ஆர்வம் காட்டுவதும் 'நச்'. பெற்றோர்களுக்கு கோச்சிங் சென்டர் நடத்துபவராக வரும் சுகாசினி 'புதிய முகம்' காட்டியிருக்கிறார். இவ்வளவுக்கும் காரணமான அந்த குட்டிப்பையனின் மழலை அறிவும், நடிப்பும் அழகோ அழகு. படம் முழுவதும் ஆங்காங்கே வரும் துணை கதாபாத்திரங்கள் அனைவருமே கவனம் ஈர்க்கிறார்கள்.
குறிப்பாக, லட்சுமி பிரியாவின் தந்தைக்கும் பேரனுக்குமான ஈர்ப்பு, வெளிநாட்டு மருமகளின் மலையாள மொழிப்பாசம், ஆட்டோ ட்ரைவராக வரும் இந்திரன்ஸின் தோழமை, பிஜமேனனின் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் நபர், கார்மெண்ட்ஸ் நடத்திக்கொண்டே கமிஷன் அடிப்படையில் பள்ளிகளில் சீட் வாங்கித்தரும் சுனில் சுகாதா, கோச்சிங் கிளாசில் பிஜுமேனனுக்கும் அவரது முன்னாள் பள்ளித்தோழிக்கும் ஏற்படும் வெட்கம் கலந்த நட்பு, பள்ளிக்கு அட்மிஷனுக்கு வந்த குழந்தை சொல்லும் புராணக்கதையை ஆர்வத்துடன் கேட்கும் பள்ளி நிர்வாகிகள் என பலரையும் சொல்லிக்கொண்டே போகலாம்.
குழந்தையின் அட்மிஷன் ஒன்று மட்டுமே படத்தில் பிரதானமாக இடம்பெற்றிருப்பது ஒருகட்டத்தில் அலுப்பை தருவது உண்மைதான். ஆனால் படத்தில் தாத்தாவுக்கும் பேரனுக்குமான அன்பு அழகாக சொல்லப்பட்டிருப்பதை பாராட்டலாம். ஆனால் பின்னாளில் அந்த சிறுவனுக்கு பள்ளியில் மெரிட்டில் சீட் கிடைப்பதற்கு இந்த அன்புதான் பிரதான காரணம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருந்தால், அது பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களது தாதா, பாட்டியுடன் நெருக்கமாக பழகவிட அனுமதிப்பதற்கு தூண்டுகோலாக அமைந்திருக்கும் என்பது உறுதி..
மொத்தத்தில் குழந்தைகளை டாப் ரேங்க் பள்ளிகளில் சேர்க்க துடிக்கும் பெற்றோர்களுக்கான படத்தை, இல்லையில்லை பாடத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் நாயர்.