நடிகர்கள் : திலீப், அனுஸ்ரீ, நமீதா பிரமோத்
டைரக்சன் : சித்தார்த் பரதன்
திருவனந்தபுரத்தில் தலைமை செயலக பெட்டிஷன் செக்சனில் வேலைபார்ப்பவர் திலீப் (சந்திரன்).. இது தவிர நாட்டிய விழாக்களுக்கு சென்று அதுகுறித்த விமர்சனங்களாய் பத்திரிகையில் எழுதும் பணியையும் செய்து வருபவர். அவரது மனைவி சொந்த ஊரில் பி.எஸ்.என்.எல்லில் வேலைபார்த்துக்கொண்டு, மகனுடன் இருக்கிறார். அரைமணிக்கொரு தடவை போனில் கணவனை அழைத்து 'சந்திரேட்டேன் எவிடயா' (என்னங்க.. எங்க இருக்கீங்க) என கேட்டுக்கொண்டே இருப்பது அவரது உபரி வேலை.. 'ஒருபக்கம் மனைவியை தான் இருக்கும் இடத்திற்கே ட்ரான்ஸ்பர் பண்ணவைக்கும் முயற்சியில் இருக்கும் திலீப்புக்கு, மாலையில் வேலை முடிந்தால் முகேஷ், சுராஜ் வெஞ்சாரமூடு, உமேஷ் இவர்கள்தான் பொழுதுபோக்கு நண்பர்கள்.
குடும்பத்துடன் ஒருமுறை தஞ்சாவூர் சுற்றுலா செல்லும் திலீப்பிற்கு, அங்கே இருக்கும் ஜோதிடர் ஒருவர் மூலமாக ஏடு ஜோதிடம் பார்க்கிறார் அவரது மனைவி அனுஸ்ரீ.. ஜோதிடர் அவர்களது குடும்ப விபரங்களை சரியாக சொல்லிவிட்டு, திலீப்பின் வாழ்க்கையில் இன்னுமொரு பெண் குறுக்கிடுவாள் என்று சொல்லி அதிர்ச்சி தருகிறார். அதற்கு காரணம், முன் ஜென்மத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் வாழ்ந்த கவிஞர் தான் திலீப் என்றும், அங்கே அரண்மனை நாட்டிய பெண்மணியாக இருந்த நமீதா பிரமோத்தின் மீது அவர் கொண்ட காதல் கைகூடாமல் போனதால் இந்த ஜென்மத்தில் அந்த காதலியை இவர் தேடி போவார் என்றும் சொல்கிறார்.
திலீப்பின் மனைவி அனுஸ்ரீ இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ஒருமுறை நாட்டிய விழாவில் நமீதா பிரமோத்தை சந்திக்கிறார் திலீப். அவர்தான் முந்தைய ஜென்மத்தில் உனது காதலி என திலீப்பிற்கு அவரது முந்திய ஜென்ம ஆன்மா (அதுவும் திலீப் தான்) அவ்வப்போது அசரீரியாக வந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. இதனால் நமீதாவின் பால் ஈர்க்கப்படும் திலீப், அவருக்கு சின்னச்சின்ன உதவிகள் செய்து அவருடன் நட்பாகிறார். அவர் வெளிநாடு போக தடையாக, தங்களது செக்சனில் அவர் மீது அனுப்பப்பட்டுள்ள பெட்டிஷனை மறைத்து வைத்து, அவருக்கு சிக்கலின்றி விசா கிடைக்க உதவுகிறார். இவருடன் பழகுவதால் தனது மனைவியுடன் சரிவர பேசாமல் ஒதுங்கும் திலீப், அப்படி பேசும் நேரங்களிலும் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.
இதனால் அவரது மனைவி அனுஸ்ரீ தனது சொந்த முயற்சியில் ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு திருவனந்தபுரம் வருகிறார். திலீப் நமீதாவுடன் நெருக்கமாக பழகுவதையும் அதை மறைப்பதற்காக அவர் பேசும் பொய்யையும் கண்கூடாக பார்த்து அதிர்ச்சியடைகிறார். இந்த நிலையில் நமீதா வெளிநாடு கிளம்புவதற்கு முன்தினம் திலீப்பை தனது வீட்டில் தனியாக பார்ட்டிக்கு அழைக்கிறார்.
திலீப்பின் முன் ஜென்ம ஆன்மா, நமீதாவின் மீதுள்ள தனது ஆசையை இப்போதுள்ள திலீப் மூலமாக தீர்த்துக்கொள்ள வேண்டி, அவரை நமீதாவுடன் அன்றைய தினமே உறவுகொள்ள தூண்டி விடுகிறது.. திலீப் ஆன்மா சொன்னபடி செய்தாரா..? நமீதா பிரமோத் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தாரா..? இதை திலீப்பின் மனைவியால் தடுக்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.
மனைவிக்கு டேக்கா கொடுத்துவிட்டு, இன்னொரு பெண்ணுடன் ஊரைச்சுற்றும் கதை என்றால் திலீப்புக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான். இதில் மனைவி அனுஸ்ரீயிடம் அவர் போன் பண்ணும்போதேல்லாம் சலிக்காமல் எடுத்து பதில் சொல்லும் ஆதர்ச கணவனாக பம்முவதும், நமீதா பிரமோத்தை பார்த்து ரொமான்ஸில் பின்னுவதும் என ஜமாய்த்திருக்கிறார் திலீப்.
டிபிகல் நடுத்தரவர்க்கத்து மனைவியாக அனுஸ்ரீ. அவர் திலீப்புக்கு மணிக்கொரு முறை போன் பண்ணுவதை பார்க்கும்போது நமக்கே காது வலிக்கிறது. நாட்டிய தாரகையாக கேரளத்து புன்னகை இளவரசி நமீதா பிரமோத்.. திலீப்புடனான காட்சிகளில் ரொம்ப நெருங்காமல், ஆனால் அதிக நெருக்கத்தையும் ரொமான்சையும் கண்களாலேயே காட்டிவிடுகிறார்.
முகேஷும் சுராஜ் வெஞ்சாரமூடும் சில காட்சிகளில் மட்டும் வந்துபோவதால் அவர்களுக்கான வேலை குறைவுதான். நமக்கும் ஏமாற்றம் தான். திலீப்பின் அறை நண்பராக வரும் சுமேஷ் தான் படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார். கணவனை காப்பாற்ற அனுஸ்ரீக்கு ஐடியா கொடுக்கும் கேரக்டரில் கே.பி.ஏ.சி.லலிதா ( 'காதலுக்கு மரியாதை'யில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர்) பிரமாதப்படுத்துகிறார். முன் ஜென்மத்தில் ராஜராஜ சோழனாக நடித்திருக்கிறார் 'திமிரு' புகழ் விநாயகம்.
குடும்பக்கதைக்குள் ஒரு பூர்வஜென்ம கதையை நுழைத்து, அனாவசியமாக நம்மை பயப்படுத்தாமல், காமெடியாக கதை சொல்லி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சித்தார்த் பரதன். அந்த புதிய உத்திக்காக அவரை பாராட்டும் அதே வேளையில் பிளாஸ்பேக் காட்சியில் சோழ மாமன்னன் ராஜராஜ சோழனை மிக கேவலமாக சித்தரிக்கும் காட்சிகளுக்காக அவரை வன்மையாக கண்டித்தே ஆகவேண்டும்.