நடிகர்கள் ; திலீப், ரஜிஷா விஜயன், வினய் போர்ட், செம்பன் வினோத் ஜோஸ், ரெஞ்சி பணிக்கர் இசை ; கோபி சுந்தர் டைரக்சன் ; கே.பிஜூ
சர்ச் பாதர் ரெஞ்சி பணிக்கரின் மகனான திலீப், வேலைவெட்டி இல்லாமல் நபர்கள் மூவருடன் அருகில் உள்ள விளையாட்டு மைதானமே கதியாக கிடப்பவர்.. பல வருடங்களுக்கு முன் கபடி போட்டியில் உலக அளவில் வென்ற ஒருவருக்கு பரிசாக தரப்பட்டது அந்த மைதானம். அவரும் அந்த மைதானத்தை விளையாட்டுக்காகவே எழுதிவைத்துவிட்டு மறைந்துவிட்டார்
ஒருநாள் சர்ச்சில் பாடல் பாடும் ரஜிஷா விஜயனை பார்த்ததுமே திலீப் அவர் மேல் காதலாகிறார். கன்னியாஸ்திரியாக முயற்சி செய்யும் ரஜிஷாவை அப்படி இப்படி தனது கலகலப்பான சேட்டைகளால் மனம் மாற்ற முயற்சிக்கிறார்..
இந்தநிலையில் அந்த விளையாட்டு மைதானத்த்துக்கு சொந்தக்காரரின் மகனான செம்பான் வினோத் ஜோஸ் அந்த இடத்தை வேறு வணிக பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்த முனைகிறார்.. பிரச்சனை பஞ்சாயத்துக்கு வர, அந்த மைதானத்தை தனது தந்தையின் ஆசைப்படி யாருமே பயன்படுத்தவில்லை என்றும் மாணவர்களும் சமூக விரோதிகளும் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதாககவும் அதனால்தான் அந்த இடத்தில் கட்டம் கட்ட விரும்புவதாகவும் கூறுகிறார்.. அப்படி கட்டவேண்டாம் என்றால் அதை விளையாட்டுக்கு உபயோகப்படுத்துங்கள் என கூற, அவரது உதவியுடன் திலீப் அன் கோ ஒரு கபடி டீமை உருவாக்குகிறார்கள்..
அந்த டீமுக்கு செம்பான் வினோத்தே பயிற்சி கொடுக்கிறார்... இந்தநிலையில் திலீப்பின் மீது பாசம் கொண்ட, அந்த மைதானமே கதி என்று கிடந்த பெரியவர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைகிறார். அவரது மரணத்துக்கு காரணமே இந்த செம்பன் வினோத் தான் என்பதும் இந்த மைதானத்தை தங்களிடம் இருந்து பறித்து வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்காகவே இந்த கபடி டீம் நாடகம் என்பதும் தெரிய வருகிறது..
இதனால் கோபமான திலீப்பை தோற்கடிப்பதற்காக வேறொரு கபடி டீமை வரவழைக்கிறார் செம்பான் வினோத். கபடியில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்குத்தான் கிரவுண்ட் என்கிற டீல் போடப்படுகிறது.. திலீப் அன் கோ கபடியில் வென்றனரா, பெரியவரின் மரணத்துக்கு பழி தீர்த்தனரா என்பது க்ளைமாக்ஸ்.
இடைவேளை வரை வழவழ கொழகொழவென்று படத்தை நகர்த்தியிருக்கிறார்கள்.. திலீப்பின் வழக்கமான ஸ்டீரியோ பாணியிலான நடிப்பும் எதையும் சீரியஸாக அணுகாமல் காமெடியாகவே அணுகும் அவரது வழக்கமான கேரக்டர் உருவாக்கமும் சலிப்பையே தருகிறது.. ரஜிஷாவை காதலிக்கிறேன் என அவர் பண்ணும் கோமாளித்தனங்களும் நண்பர்களுடன் அவர் அடிக்கும் கூத்துக்களையும் பார்க்கும்போது இனிமேலாவது திலீப் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டாரா என்கிற நினைப்பு எழாமல் இல்லை.
ஆனால் இடைவேளைக்குப்பின் படம் கபடி விளையாட்டுக்கு மாறியபின் தான் ஓரளவு படமும் சரி.. திலீப்பும் சரி ஆறுதல் தருகிறார்கள்.. முதல் படத்திலேயே கேரள அரசு விருது பெற்ற நாயகி ரஜிஷா விஜயனை இந்தப்படத்தில் வீணடித்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுக்கும் செம்பான் வினோத் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திலீப்பின் நண்பர்களாக நடித்திருக்கும் மூவரும் சில சமயம் கலகலப்பூட்டுகிறார்கள். பல நேரம் எரிச்சலூட்டவே செய்கிறார்கள்..
கதையில் எந்த வித அழுத்தமோ, திரைக்கதையில் எந்தவித சுவாரஸ்யமோ இல்லாததால் எப்போது படம் முடியும் கிளம்பலாம் என்கிற மனநிலைக்கு கொண்டு வந்து விடுகிறது.. திலீப் தயவு செய்து நீங்கள் படம் தேர்ந்தெடுக்கும் விதத்தையும் ஆக்சன் ஹீரோவுக்கும் சாதாரண ஹீரோவுக்குமான ரெண்டும் கெட்டான் கேரக்டர்களில் தொடர்ந்து நடிப்பதையும் ரசிகர்களின் நலன் கருதி தவிர்க்க வேண்டுகிறோம்..
ஒகே திலீப்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..