மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரித்து வழங்க, ஸ்ரீதேணான்டாள் பிலிம்ஸ் வெளியிட, விக்ரம் பிரபு - ஷாம்லி ஜோடி நடிக்க, டி.இமான் இசையில், மைனா எம்.சுகுமார் ஒளிப்பதிவில் கணேஷ் விநாயக் எழுத்து, இயக்கத்தில் வந்திருக்கும் படம் தான் "வீர சிவாஜி".
கதைப்படி, பைனான்ஸ் கம்பெனி நடத்தியும், ஒன்றுக்கு பத்தாய் பணம் தருகிறோம் என்றும், பழையதங்கத்திற்கு பல மடங்கு புதிய தங்கம் தருகிறோம்... என்றும் ஊருக்கு ஒரு பிராடுத்தனம் பண்ணி பெரும் பணக்காரனாகி அதன் மூலம் அரசியலிலும் அடியெடுத்து வைக்கத் துடிக்கும் ஜான் விஜய்யிடமும், மொட்ட ராஜேந்திரனிடமும் அக்கா பெண்ணின் ஆபரேஷனுக்கு வைத்திருந்த ஐந்து லட்சத்தை நண்பர்கள் ரோபோ சங்கர், பண்ணி மூஞ்சி வாயன் இவரது பேச்சை கேட்டு அவர்களது ஐந்து லட்சத்தோடு பத்து லட்சமாக பறிகொடுக்கும் கால் டாக்ஸி டிரைவர் சிவாஜி எனும் விக்ரம் பிரபு, வில்லன் ஜான் விஜய் அண்ட் கோவினரை தன் அதிபுத்திசாலித்தனததால் தேடிக் கண்டுபிடித்து, அடி உதைபட்டு கார் சேஸிங் உள்ளிட்ட வீர தீரமெல்லாம் செய்து ஓட்டு மொத்த பொதுமக்களின் பணத்தையும் கைப்பற்றி, அவர்களிடமே திருப்பிக் கொடுத்து, தன் அக்கா மகளின் ஆபரேஷனையும் சக்ஸஸ்புல்லாய் நடத்தி முடித்து, விக்ரம் பிரபுவை தவறாய்புரிந்து கொண்டிருக்கும் போலீஸ் இன்ஸ் மாரிமுத்துவின் மகளும், நாயகியுமான ஷாம்லியுடனான தன் காதலிலும் ஜெயிக்கும் கதை தான் "வீர சிவாஜி " படத்தின் மொத்தக் கதையும். இதைதலையைச் சுத்தி மூக்கைத் தொடும் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறது "வீர சிவாஜி" டீம்.
சிவாஜியாக வீரம் காட்ட முற்பட்டிருக்கிறார் விக்ரம் பிரபு. அவரைக் காட்டிலும் அவரது புடைத்துக் கொண்டிருக்கும் மூக்கு அதிகம் அதை காட்டியிருக்கிறது.
ஹாலிவுட் நடிகை லுக்கில் இருக்கும் ஷாம்லி பாண்டிச்சேரி பெண்ணாக ஓ.கே.மாரிமுத்துவின் மகளாகவும், விக்ரம் பிரபுவின் காதலியாகவும் ஒட்டவில்லை .
நாயகரின் காமெடி நண்பர்களாய் கடிக்கும் ரோபோ சங்கர், யோகி பாபு இருவரில் பின்னவர் ஆறுதல். அதிலும், "மேல் இடம்னா.... எந்த இடம் ?" எனக் கேட்பவரிடம்...", "4 வது மாடியில குடித்தனம் இருக்கோம் அதைத்தான் அவர் அப்படி சொல்றார்..." எனக் கலாய் பதில் யோகி பாபு மிரட்டல்.
இவர்களைத் தாண்டி காமெடி, மோசடிப் பேர்வழிகள் ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன் இருவரும். "நம்மளை நம்புறவங்களை ஏமாத்திட்டு இந்த சரக்கையும் சைடீஸையும் சாப்பிடுறது ரொம்ப வருத்தமா இருக்குண்ணே .... "எனும் மொட்ட ராஜேந்திரனிடம், "நம்புறவங்களை மட்டும் தான் ஏமாத்த முடியும். நம்பாதவங்களை எப்படி ஏமாத்த முடியும் ..?" எனும் ஜான் விஜய் வித்தியாச வில்லத்தனத்திலும் வழக்கம் போலவே கவருகிறார்.
மகாநதி சங்கர், மாரிமுத்து, வினோதினி... அந்தக் குழந்தை நட்சத்திரம் உள்ளிட்ட இன்னும் பிறகேரக்டர்கள் ஆர்ட்டிஸ்டுகளும் கச்சிதம்.
லால்குடி என்.இளையராஜாவின் கலை இயக்கம் கச்சிதம். ரூபனின் படத்தொகுப்பில், காமெடி எனும் பெயரில் ரோபோவும், பன்னி மூஞ்சியும் எக்கச்சக்கமாய் கடித்திருப்பதை இன்னும் கொஞ்சம் கத்திரித்திருக்கலாம். எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு பேசியிருக்கிறது இருந்தும்... டி.இமானின் இசையில், "தாறுமாறு தக்காளி சோறு ... "நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி..... " உள்ளிட்ட பாடல்கள் ரசனை. ஆனால், பின்னணி இசை அவசரகதியில் அதிரடி செய்ய முற்பட்டு தோற்றிருக்கிறது.
கணேஷ் விநாயக் எழுத்து, இயக்கத்தில், பெண் குழந்தையை "ஜொள்ளு விட்டல்ல... " என அதிகப்படியாய் அடிக்கடி பேச விடுவது... உள்ளிட்ட பல படங்களில் பார்த்து பழகிய வியாதிகள், கேட்டுப் பழகிய கதைக் களங்கள், காட்சிப்படுத்தல்கள்... எல்லாம் ரசிகனை சற்றே படுத்துகின்றன. அவ்வப்போது படக்காட்சிகளில், வெளியே வந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டால், எம்.சுகுவின் இயற்கை எழில் கொஞ்சும் ஒளிப்பதிவையும், டி.இமானின் இனிய இசையையும் பாடல் காட்சிகளில் மட்டும் ரசிக்கலாம்!
ஆகவே, வீர ‛சிவாஜி - ‛விக்ரம் பிரபு... அவ்வளவே!"
____________________________
குமுதம் விமர்சனம்
தயாரிப்பாளர்களை தவிக்க விடாத தன் மினிமம் கியாரன்டி ஃபார்முலாவில் இருந்து சற்றும் விலகாமல் இன்னொரு படம் தந்திருக்கிறார் விக்ரம் பிரபு. தன் அக்கா குழந்தையின் ஆபரேஷனுக்காக 25 லட்சம் ரூபாய் புரட்ட முயற்சிக்கும் கால் டாக்ஸி டிரைவர் விக்ரம் பிரபு. மோசடிக் கும்பலான ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் குரூப்பிடம் சிக்கி 5 லட்சம் ரூபாயை இழக்கிறார். அதன் பின்ர்ன சேஸிங், சிங்கிங், டான்ஸிங் ஃபைட்டிங் ஹேப்பி எண்டிங்!
தல மச்சினி ஷாம்லி தான் படத்தில் இருக்கும் ஒரே புது விஷயம். தன் பைக்கில் போட்டோ ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு தீவிர விஜய் ரசிகையாக வருவது, காதலுக்கு மரியாதை பி.ஜி.எம். என்று ஆரம்பத்தில் ரகளை செய்கிறார். போகப் போக எந்திரி அஞ்சலி எந்திரி என்கிற அளவுக்கு பரிதாப நிலை.
தமிழ் சினிமாவில் தற்போது காலியாக கிடக்கும் காமெடியன் சீட்டை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் டீம். அவர்கள் என்ன சொன்னாலும் ஜனங்க சிரிக்கிறார்கள். அதிலும் பாபுவும், ரோபோ சங்கரும் பேசும் அந்த 'என்குதிரை பாயுது' வசனமெல்லாம் டபுள் மீனிங் டு த கோர். பாடல்களில் சொப்பன சுந்தரியைத் தவிர மற்றவை தேறவில்லை. வாட் ஹேப்பண்ட் இமான்? கமான்.
காதல், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என்று சரிவிகிதத்தில் கலந்து கட்டி அடித்திருக்கும் அறிமுக இயக்குநர் கணேஷ் விநாயக், முதல் பாதி திரைக்கதையில் காட்டிய ஆர்வத்தை இரண்டாம் பாதியில் இழந்தது ஏனோ? வேகம் குறையும் இடத்தில் எல்லாம் பார்வையாளர்களைத் தட்டி எழுப்புகிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. ஆக்ஷனிலும் காமெடியிலும் தேறி இருக்கிறார் விக்ரம் பிரபு.
வீரசிவாஜி: ஓ... கே... ஜி..
கல்கி சினி விமர்சனம்
சிவாஜியின் பேரன் நடித்த படம். படத்தின் பெயரிலும் சிவாஜி என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பேராசையை எப்படித் தனி மனிதர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைக் கதையோடு குழதை்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பக் காட்சியில் காவல்துறை அதிகாரி, தற்கொலை செய்துகொள்ளும் காட்சியிலேயே படம் வேகம் எடுத்துவிடுகிறது.
விக்ரம் பிரபு சண்டைக் காட்சிகளில் உக்கிரம் பிரபுவாக மிரட்டுகிறார். சாக்கெட் ஐஸ் என்ற சாமுத்ரிகா லட்சணத்தோடு, நடுத்தர வயது மாதுவின் முக அமைப்பு கொண்ட கதாநாயகி ஷாம்லிக்கு அதிகமாக வேலை இல்லை. வந்து போகிறார் அவ்வளவுதான்!
ரோபோ சங்கர் மற்றும் யோகி பாபு படம் நெடுகிலும் வித்தியாசமாய் கெட் அப்பில் வருகிறார்கள். நகைச்சுவைக்கு கூடுதல் இடம் இருந்தும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று ஆதங்கம் ஏற்படுகிறது. அவன் கேடி நம்பர் ஒன் அப்படின்னு எப்படி சொல்றே? என்று ஒருவர் கேட்கும்போது, அவ்ன டி ஷர்ட்ல இருக்கே என்று அப்பாவியாக இன்னொருவர் சொல்வது பலே.
ரோபோ சங்கரின் செல்ஃபோன் ரிங் டோனாக (இமிடேஷன்) ஹரஹர மகாதேவ ஒலிக்கவிட்டிருப்பது குறும்பு.
தலையில் அடிபட்டு பழக மறந்துபோகும் ஒருவருக்குத் தமிழ் திரைப்படங்களில் மறுபடியும் எப்படி ஞாபகத்துக்கு வரும்? இதுகூத் தெரியாதா? கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து பார்த்துத் தேய்ந்ததுதானே என்கிறீர்களா? ஆமாம்! இதிலும் மறுபடி தலையில் அடிபட்டு பழை ஞாபகம் திரும்பிவிடுகிறது.
வாட்ஸ் அப் காலத்தில், வாழ்வே மாயம் கமல் போல ஓவரா ஃபீல் பண்றியே? போன்ற பூத் தூவல்கள் ஆங்காங்கே! ஒரே மாற்றம் - முன்னேற்றம் என்ற நையாண்டிகளும் உண்டு!
தனது வாகனத்தில் தரகர்கள் விட்டுச்சென்ற இரண்டு லட்சம் ரூபாயைப் பொறுப்பாகத் திருப்பித் தரும் நாணயஸ்தரான விக்ரம்பிரபு, கதாநாயகியின் ஸ்கூட்டர் விஷயத்தில் ஏமாற்றுப் பேர்வழியாய் இருப்பது முரண். படம் நெடுகிலும் மதுவருந்தும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.
தாறுமாறு தக்காளிச் சோறு என்ற யோகேஷின் பாடல் எறுமாறாக ஏற்கெனவே பண்பலை வானொலிகளில் பட்டையைக் கிளப்பியிருந்தது அல்லவா? திரையரங்கிலும் ரசிகர்கள் கொண்டாடி, ரசித்து மகிழ்கிறார்கள். அந்தப் பாடல் காட்சியில் கோரியோ கிராஃபி பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். கிட்டத்தட்ட 16 துணை நடனக் கலைஞர்கள் துளிகூட லயம் தவறாமல் ஆடியிருப்பது அம்சம்.
வைக்கோம் விஜயலட்சுமியின் வித்தியாசமான குரலில் சொப்பன சுந்தரி மயக்குகிறாள். புதுச்சேரி அழகைப் பக்குவமாகத் தந்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு!
வீரசிவாஜி - தைரியமாகப் பார்க்கலாம்.
திரையரங்கில் ரசிகர் கோவிலம்பாக்கம் சதீஷின் கருத்து: நல்ல மெசேஜ் கொடுத்திருக்காங்க, படம் பிடிச்சிருக்கு.