நடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, நிக்கி கல்ராணி, அனுஸ்ரீ, ரெஞ்சி பணிக்கர், கலாபவன் ஷாஜன்
டைரக்சன் : ரகுராம் வர்மா
எந்த வேலைவெட்டிக்கும் போகாத இரண்டு இளைஞர்கள் தான் குஞ்சாக்கோ போபன் (மைக்கேல் ராஜம்மா) மற்றும் ஆசிப் அலி (விஷ்ணு யாஹூ) இருவரும். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட இருவரும் அவர்கள் விட்டுச்சென்ற தாய் தந்தை பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக்கொண்டு, மிகப்பெரிய வீட்டில் வசிக்கின்றனர். வருமானத்திற்காக அதை அவ்வப்போது உள் வாடகைக்கு விட்டு அதில் கிடைப்பதை வைத்து வண்டியை ஓட்டுகின்றனர்..
ஆசிப் அலிக்கு தனது பள்ளித்தோழியான அனுஸ்ரீ மீது காதல். அனுஸ்ரீ வேறு வீடு கட்டிகொண்டிருப்பதால், அவரை பக்கத்திலிருந்து காதலிக்க வசதியாக அவரையும் அவரது அம்மாவையும் தங்கள் வீட்டின் ஒரு பகுதியை தற்காலிகமாக வாடகைக்கு விட்டு தங்க வைக்கிறார்.. இன்னொரு போர்ஷனுக்கு நகராட்சி அதிகாரியான கலாபவன் சாஜன் வருகிறார். மாடியில் இருக்கும் போர்ஷனில் ஒற்றை ஆளான நிக்கி கல்ராணி குடிவருகிறார்.
நிக்கியின் மீது காதல் கொள்ளும் குஞ்சாக்கோ, நிக்கியின் மர்ம நடவடிக்கைகளால் குழப்பம் அடைகிறார். நிக்கி, அம்மாவை இழந்த அநாதை என்றும் தன் அம்மாவை வஞ்சித்து தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி மோசம் செய்த இந்த ஊரின் மேயர் ரெஞ்சி பணிக்கரை சந்தித்து தனக்கும் சொத்தில் ஒரு பகுதியை தரவேண்டும் என கேட்பதற்காக வந்திருக்கிறார் என்பதும் பின்னர்தான் குஞ்சாக்கோவுக்கு தெரியவருகிறது.
இதில் நிக்கிக்கு உதவி செய்வதற்காக களத்தில் இறங்குகிறார் குஞ்சாக்கோ.. ஆனால் ரெஞ்சி பணிக்கர் அடாவடி பண்ணுகிறார். இந்த சிக்கலை சகோதரர்கள் இருவரும் சிக்கலில்லாமல் எப்படி தந்திரமாக முடித்து வைக்கிறார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்..
மிகப்பெரிய டிவிஸ்ட்டுகள் இல்லை.. அண்ணன் தம்பி பங்காளி சண்டை இல்லை.. காதலுக்காக மோதல் இல்லை.. கோர்வையான கதையும் கூட இல்லை.. சின்னச்சின்ன சுவாரஸ்ய காட்சிகளை மட்டும் வைத்து ஒரு தோரணம் கட்டியுள்ளார்கள்.
குஞ்சாக்கோ போபனுக்காகவே இயக்குனர்கள் கதை பண்ணிவருகிறார்களோ என இதற்கு முந்தைய படங்களில் எழுந்த சந்தேகங்களை இந்தப்படம் உறுதிப்படுத்துகிறது.. ஒரு ஊரில் எல்லோருக்கும் எந்தவகையிலாவது உதவிசெய்யும் ஒருவன் இருந்தால் அதுதான் குஞ்சாக்கோ போபன் கேரக்டர்.. இதிலும் அதுதான். ஆனால், இதில் சோம்பேறித்தனமான ஒரு புது கதாபாத்திரத்தில் நடித்து புதுமை செய்துள்ளார்.
காதலியை தனது வீட்டிலேயே குடியமர்த்தி ரொமான்ஸ் பண்ணும் ஆசிப் அலி வழக்கம்போல குறும்பு பையன்.. ஆசிப் அலியுடனான ரொமான்ஸில் கண்டிப்பும் காமும் கட்டும் அனுஸ்ரீ வரும் காட்சிகள் ரசமானவை. நிக்கி கல்ராணி படம் முழுதும் சீரியஸாக உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டே இருக்கிறார்.. திறமைசாலியான அவரை சரியாக முழுமைப்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள்.
நிக்கியின் தந்தையாக ரெஞ்சி பணிக்கரின் காமெடி கலந்த வில்லத்தனம் ரசிக்கவைக்கிறது. கடைசியில் தனது சொத்துக்களில் ஒரு பகுதியை நிக்கிக்கு எழுதி வைக்கும் காட்சியில் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என சொல்லவைத்து விடுகிறார். லஞ்சம் வாங்காத நகராட்சி அதிகாரியாக வரும் கலாபவன் ஷாஜனுக்கு இப்படத்தில் புதுவிதமான நகைச்சுவை ஏரியாவை கொடுத்துள்ளார்கள். குஞ்சாக்கோவின் அல்லக்கையாக படம் முழுக்க வரும் நபர் சிரிக்கவைக்கிறார். கதநாயகன்களின் தந்தையாக வரும் ஷாஜு குரூப், கார்டியனாக வரும் மாமுக்கோயா இருவரின் நடிப்பும் நிறைவு..
இடைவேளை வரை எந்த திருப்பங்களும் இல்லாமல் நகரும் கதை, இடைவேளைக்கு பின்னரும் அப்படியே தான் நகர்கிறது. ஆசிப் அலி பணம் கட்டி படிப்பில் சேர்கிறாரே, அதன்பின் அதற்கு தொடர்பான அவசியமுள்ள காட்சி ஒன்று கூட இல்லையே.. யாரோ தனது வீட்டில் விட்டுவிட்டுப்போன மோட்டார் பைக்கை குஞ்சாக்கோ ஓட்டுகிறாரே, பைக்கை தொலைத்தவர் அங்கே வந்து தேடமாட்டாரா என்ன,..? இப்படி நிறைய லாஜிக் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தால் தான் அது குஞ்சாக்கோ படம். குஞ்சாக்கோ படத்திற்கென எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் தாராளமாக சிரித்துக்கொண்டே படம் பார்த்துவிட்டு, வழக்கம்போல திட்டிக்கொண்டே வெளியே வரலாம்.