நாயகன் - ராஜ் தருண்
நாயகி - ஹீபா பட்டேல்
இயக்குனர் - சூர்ய பிரதாப்
தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான சுகுமார் தயாரிப்பாளராக மாறியிருக்கும் படம் தான் குமாரி 21F. இப்போதும் தான் இயக்கும் படங்களில் வித்தியாசமான கதைச் சூழலை தேர்ந்தெடுக்கும் இவரின் முதல் தயாரிப்பான இப்படத்திலும் ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எவ்விதம் இந்த திரைப்படம் பூர்த்தி செய்துள்ளது என பார்ப்போம்.
இப்படத்தின் கதை என்னவென்றால், குமாரி(ஹீபா பட்டேல்) ஒரு மாடல் நடிகை. விளம்பரப்படங்களிளும், திரைப்படங்களிலும் நடித்து வரும் ஒரு தைரியமான பெண். தனது வயதான தாத்தாவுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். ஒரு நடுத்தர வர்க்க வாழ்கை வாழ்கிறார். அதேபகுதியை சார்ந்த சித்துவை(ராஜ் தருண்) ஓர் இரவில் பார்க்கிறாள். சித்து சமையல் கலையில் டிப்ளமோ படித்துவிட்டு சிங்கப்பூர் செல்லும் ஆசையுடன் இருக்கிறார், தனது தாயுடன் வசித்து வருகிறார்.
அவரை பார்த்த அந்த இரவின் பொழுதிலேயே அவரிடம் தன் காதலைச் சொல்கிறார். மேலும் குமாரி சித்துவை முத்தமிடவும் செய்கிறார்.ஆரம்பத்தில் குமாரியின் தைரியம் பிடித்திருந்தாலும் அவர் கடந்த காலம் மீது சந்தேகம் கொள்கிறார் நாயகன் சித்து. இந்த சந்தேகத்திற்கு காரணம் அவரது வேலை வெட்டியில்லாத நண்பர்கள்.
தைரியமான பெண் தன் கற்பை இழக்காமல் இருந்திருக்கிலாம், ஆனாலும் காதல் கொள்ளாமலா இருந்திருக்க முடியும் என சந்தேகம் கொள்கிறார். சித்துவிற்கு தன் காதலை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை என முடிவு செய்து குமாரி, தனது காதலை முறித்துக் கொண்டு அவரிடமிருந்து பிரிந்து விடுகிறார்.அதன் பின் என்ன நடந்தது? இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை.
எப்போதும் வழக்கத்திற்கு மாறான கதையைத் தான் சுகுமார் இயக்குவார். இந்த படத்திலும் அதேதான். ஆனால் ஒரு கதாசிரியராக பலர் சொல்ல தயங்கும் கதையை கையில் எடுத்து அதை தைரியமாகவும் சொல்லியிருக்கிறார்.பெருவாரியான ஆண்களின் பிரதி நிதியாகத்தான் சித்துவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவர் தன் காதலி கற்புடையவளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இரண்டு முரண்பாடான கதாபாத்திரங்களை கொண்டு நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் சுகுமார்.
தற்கால இளைஞர்களின் காதல் கதை போல் ஆரம்பிக்கிறது. அதற்கு ஏற்றார் போல் பெண்களை வர்ணிக்கும் விதமான வசனங்களும் அப்படியே இருக்கிறது. இடைவேளைக்கு பின்னர் மூலக்கதையை நெருங்கி பக்குவப்பட்ட கதையாக திரைப்படம் நிறைவடைகிறது. ஆரம்பத்தில் இடம்பெறும் குமாரியின் செயல்பாடுகளுக்கு, போகப்போக காரணம் சொல்கிறார்கள். இயக்குனர் சூர்ய பிரதாப் கொடுப்பட்ட திரைக்கதையை அழகாக காட்சிகளாக்கியிருக்கிறார். இயக்குனர் சூர்ய பிரதாப் என்னதான் இப்படத்தை இயக்கினாலும் சுகுமாரின் முத்திரையை தவிர்க்க முடியவில்லை.
முதல் பாதியில் கதை நகரும் இடமானது ஒரு நடுத்தரவர்க்க மக்கள் வாழும் காலணி, அங்கே தான் காதலும் நிகழ்கிறது அதை சுற்றி பல பிரச்சனைகளும் நிகழ்கிறது. மகிழ்ச்சியாக கடக்கும் முன்பாதி, முக்கிய விசயமானது இரண்டாம் பாதியில் தான் வருகிறது. கிளைமேக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்றுதான். ஆனாலும் அது ஒருவகையில் பலவீனமாகிவிடுகிறது. படம் சில இடங்களில் Adult Content ஆக இருக்கிறது. இதை மட்டும் தான் படத்தின் பலவீனமாக சொல்லலாம். மற்றபடி நேர்த்தியான படைப்பு. முக்கிய காதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் இருவரும் அழகாக நடித்திருக்கிறார்கள். ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் பினன்ணி இசையும் படத்திற்கு பெரும் பலம். மொத்தமாக குமாரி 21F - அக்கட தேசத்தில் ஒரு வித்தியாசமான படம் தான்.
குமாரி 21F - தைரியமான முயற்சி