தினமலர் விமர்சனம்
நல்ல போலீசுக்கும், கெட்ட போலீசுக்கும் இடையில் நடக்கும் நல்லது - கெட்டதுகளை நக்கலும், நையாண்டியுமாக சொல்லியிருக்கும் ஆக்ஷன் -காமெடி படம் தான் "கதம் கதம்!". தாஜ்நூரின் இசை, யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, ராதாகிருஷ்ணன் - நிமேஷின் வசனம், புதியவர் பாபு தூயவனின் எழுத்து, இயக்கம் உள்ளிட்டவவைகள் இப்படத்தின் பெரும்பலம்.
எம்.பி.பெரியண்ணனின் கைக்கூலியாக இருந்துகொண்டு ஊரை அடித்து உலையில் போடும் போலிஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் எனும் நட்டி நட்ராஜ், மொத்த போலீஸ் உதவியுடன் லஞ்ச லாவண்யத்தில் திளைக்கும் பாண்டியனுக்கும், எம்.பி. பெரியண்ணனுக்கும் பரேடு நடத்தும் விதமாக அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் நேர்மையான போலீஸ் சப்-இன்ஸ் ஆன நந்தா எனும் நந்தா!.
லஞ்சப்பணம், குடி, கூத்தி எனத் திரியும் பாண்டியனும் அவருக்கு பல விதத்திலும் உதவும் எம்.பி. பெரியண்ணனும் திருந்தினார்களா? அல்லது நந்தா வருந்தினாரா? எனும் கதையுடன் நட்டி நட்ராஜ் - சாரிகா, நந்தா - ஷனம் ஷெட்டி ஜோடிகளின் காதலையும் கலந்து கட்டி கறைபடிந்த காவல்துறையில் நேர்மையான ஆபிசர்களும் நிலைக்க முடியும்! எனும் கருத்தையும் பதிவு செய்திருக்கும் படம்தான் கதம் கதம்!. பாண்டியனாக நட்டி நட்ராஜ் செய்யும் காமெடி, காமநெடி விஷயங்கள் முனபாதி ஹாஸ்யம் என்றால், நேர்மையான போலீஸ் ஆபிசராக ஆக்ஷனில் இறங்கும் நந்தா, பின்பாதி சுவாரஸ்யம்!.
சாரிகா, ஷனம் ஷெட்டி எனும் இரண்டு நாயகியரில் விலைமாதுவாக வந்து நட்டியை மட்டுமல்ல, ரசிகர்களையும் கொள்ளை கொள்ளும் சாரிகா செம கிக்கப்பா! மோனா, நிழல்கள் ரவி, சிங்கமுத்து , கிரேன் மனோகர், வினோத் உள்ளிட்டவர்களும் கச்சிதம். ஏரியாவுக்கு சம்பந்தமில்லாமல், மதுரை பாஷை பேசும் எம்.பி. பெரியண்ணன் பெரும் பலவீனம்.
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, தாஜ்நூரின் இசையில் போடா பொடிமட்ட..., வட போச்சே....லட்சரூபா..., இது என்ன மயக்கம்... உள்ளி்ட்ட பாடல்கள், இப்படத்தின் பெரும்பலம்!
மொத்தத்தில் பாபு தூயவனின் இயக்கத்தில் "கதம் கதம் - இதம் பதம்!"