பிரபுதேவா - சிம்ரன் நடித்த ‘டைம்’ படத்தை இயக்கியவர் கீதா கிருஷ்ணா. அந்தப் படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிய கீதா கிருஷ்ணா, இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவர் இயக்கும் படம்தான் நிமிடங்கள். புளூ பாக்ஸ் சினிமா என்னும் புதுப்பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குவதோடு இசையமைப்பாளராகாவும் அறிமுகமாகிறாராம் கீதாகிருஷ்ணா.
தெலுங்கில் பெரும் வசூலை குவித்த ‘அய்த்தே’ உள்பட ஒரு டஜன் படங்களில் நடித்திருக்கும் சஷாங், நிமிடங்கள் மூலம் தமிழில் கதாநாயகன் ஆகிறார். ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ என்னும் ஸ்லோகனை சஷாங் காதிலும் யாரோ ஓதிவிடவே, தேடிவந்த பல தெலுங்குப்பட வாய்ப்புக்களையும் மறுத்துவிட்டு நிமிடங்களுக்காக கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
‘யோகி’ உள்ளிட்ட பல கன்னடப் படங்களில் நடித்துள்ள பியாங்கா தேசாய்தான் நாயகி. சிபிஐ ஆபிசராக சுமனும், பாகிஸ்தான் தீவிரவாதியாக அதுல்குல்கர்னியும் கலக்குகின்றனராம்.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் ‘நிமிடங்கள்’ சர்வதேச தீவிரவாதம் பற்றிய கதையை சொல்கிறதாம். சினிமாவின் சமீபத்திய வரப்பிரசாதமான ரெட்கேமராவை கொண்டு படப்பிடிப்பு நடத்தப்படுகிறதாம். இதற்காக அமெரிக்காவிலிருந்து பிரத்யேக ஒளிப்பதிவாளர் வரவழைக்கப்பட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.