கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும், திரும்பி வரும் பயணிகளுக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஒவ்வொரு நாட்டிற்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்படி வரும் பயணிகளுக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். முடிவுகள் வரும் வரை பயணிகள் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் விமான நிலையத்திலேயே இருப்பார்கள். கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வந்தால் அந்தப் பயணி மருத்துவமனையில் சேர்க்கப்படுவார். தொற்று இல்லை என்றால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவர். அதே சமயம், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜார்ஜியா நாட்டில் தனது படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பினார். ஆனால், இன்று காலை அவர் மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வந்த பின் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இன்றே அவர் சென்றது ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, நடிகர் விவேக்கின் அகால மரணத்தால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் இருக்கும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்ததும் மறுநாளே செல்ல வேண்டுமா என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
விவேக் இறந்து பத்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் விஜய் தரப்பிலிருந்து ஒரு இரங்கல் அறிக்கை கூட வரவில்லை. அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு, அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி ஒரு வாரம் கழித்து கூட அவர் விவேக் வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொல்லியிருக்கலாமே என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
கொரானோ விதிமுறைகளை பின்பற்றுவதில் சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டுமென பெரும்பாலோர் கருத்து தெரிவிக்கிறார்கள்.