லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 3' படம் குறித்து தற்போது பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த வருடம் வெளியான 'இந்தியன் 2' படத்தின் எதிர்பாராத படுதோல்வி அந்த தயாரிப்பு நிறுவனத்தையே தடுமாற வைத்துவிட்டது. அப்படத்தின் மூலம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
அதன்பின் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'வேட்டையன்', அஜித் நடித்து வெளிவந்த 'விடாமுயற்சி' ஆகிய படங்களும் தோல்வியைத் தழுவின. இந்நிலையில் அந்நிறுவனம் மலையாளத்தில் இணைந்து தயாரித்த 'எல் 2 எம்புரான்' படத்திலிருந்து விலகியதாக செய்திகள் வந்துள்ளன. முந்தைய படங்களின் தோல்வியால் ஏற்பட்ட நிதி நெருக்கடிதான் விலகலுக்கான காரணம் என்கிறார்கள்.
அந்நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் வேலைகள் மட்டுமே நடந்து வருகிறது.
'இந்தியன் 2' உருவாகி வரும் போதே அதன் மூன்றாவது பாகத்தையும் வெளியிட முடிவு செய்தார்கள். ஆனாலும், அதற்கான வேலைகள் இன்னும் முழுமையாக முடியவில்லையாம். சில காட்சிகளுக்கான படப்பிடிப்பும் நடத்த வேண்டி இருக்கிறது என்கிறார்கள். அதே சமயம் இயக்குனர் ஷங்கர் மூன்றாம் பாகத்திற்காக கேட்ட சம்பளம் குறித்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
இப்போதுள்ள நிதி நெருக்கடியில் அதையெல்லாம் பேசித் தீர்த்து, படப்பிடிப்பு நடத்தி முடித்து படத்தை வெளியிடுவது என்பது அவ்வளவு சீக்கிரத்தில் நடக்காது என்கிறார்கள்.