பிரபல சினிமா பாடலாசிரியரான பா.விஜய், தமிழ் சினிமாவின் மிக முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவர் ஆவார். சினிமா மட்டுமல்லாது சின்னத்திரை சீரியல்களுக்கும் மிகவும் பவர்புல்லான பாடல்களை எழுதியிருக்கிறார். இன்றைய நாளில் மக்கள் மனதில் பதிந்த பல ஹிட் தொடர்களுக்கான ஓப்பனிங் தீம் பாடலின் பாடாலாசிரியர் இவர் தான்.
ராதிகாவின் சூப்பர் ஹிட் சீரியல்களான செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி தொடர்களில் ஆரம்பித்து தற்போது வரை பாண்டவர் இல்லம், வானத்தைப் போல, பூவே உனக்காக, ப்ரியமான தோழி, ஆனந்த ராகம், புதுவந்தம் வரை கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்ட ஹிட் சீரியல்களுக்காக பாடல் எழுதி கொடுத்துள்ளார்.
இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவை விட சீரியல்களுக்காக பாடல் எழுதி கொடுப்பது தான் மிகவும் கஷ்டமான விஷயம் என கூறியுள்ளார். அந்த பேட்டியில், 'சீரியல்களுக்கு பாட்டெழுதுவது மிகப்பெரிய சவால். சினிமா பாடல்களை போல டிவி தொடர்களுக்கு எளிதாக எழுதி விட முடியாது. சினிமாவில் கதை, சிச்சுவேஷன், ஹீரோ ஹீரோயின் என குறைந்த அளவிலான காரணிகளே இருக்கும். ஆனால், சீரியலுக்கு அதில் உள்ள அனைத்து விஷயங்களும், கேரக்டர்களும் பிரதிபலிக்கும் வகையில் சீரியல் இயக்குநர்கள் பாடல்கள் கேட்பார்கள். அதுமட்டுமில்லாமல் டிவியில் அந்த பாடலை தினமும் கேட்டால் யாருக்கும் சலிப்பு வராமல் இருக்க வேண்டும். எனவே, சீரியலுக்கு பாடல் எழுதுவது தான் மிக சவாலான செயல்' என்று பா.விஜய் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.