சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. அடுத்து லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வந்தார். ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செப்.,30ம் தேதி ரஜினி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் வீக்கம் இருந்தது.
இந்த வீக்கம் அறுவை சிகிச்சையின்றி அகற்றப்பட்டது. ரத்தக்குழாய் வீக்கத்திற்கான சிகிச்சைக்கு ஸ்டன்ட் (STENT) பொருத்தப்பட்டது. தொடர் சிகிச்சையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவரது உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து இன்று(அக்.,04) வீடு திரும்பினார்.
நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி
வீடு திரும்பிய நடிகர் ரஜினி வெளியிட்ட அறிக்கை : நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும் நலவிரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நான் நலம் பெற பிராத்தனைகள் செய்த மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்என் ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் அதிமுக.,வின் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் ரஜினி.