தினமலர் விமர்சனம் » கருங்காலி
தினமலர் விமர்சனம்
டைரக்டர் மு.களஞ்சியம் சற்றே தாமதமாக கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும், அதுவும் ஆண்ட்டி ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் "கருங்காலி".
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கஞ்சா வியாபாரி என சகல கொடுஞ்செயல்களையும் ஒருங்கே புரிந்து, ஜெயிலில் கம்பி எண்ணும் "பொட்டலம்" ரவியை ஜாமினில் எடுத்து, விரும்பி திருமணம் செய்து கொள்கிறார் டாக்டர் கனிமொழி எனும் சுனிதா வர்மா. விபத்தொன்றில் தனது உயிரை காபந்து செய்தவன் என்பதற்காக "பொட்டலம்" ரவி எனும் மு.களஞ்சியத்துக்கு, இப்படி புனர் ஜென்மம் கொடுக்கும் டாக்டருக்கும், அவரது டாக்டர் தொழிலுக்கும், அவரது பேஷண்ட் அஞ்சலியை பகடைகாய் ஆக்கி, எப்படி எப்போதும் மாறாத தனது கருங்காலி புத்தியை காண்பிக்கிறார் களஞ்சியம் என்பது தான் "கருங்காலி" படத்தின் மொத்த கதை, களம், கரு, இத்யாதி, இத்யாதி எல்லாம்!
கருங்காலி மிகக் கொடூரமானவராக தெரிய வேண்டும்மென்பதற்காக பிரபல நடிகையின் பிணத்துடன், தன் காதலியின் கண் எதிரிலேயே உறவு கொள்வதெல்லாம் ரொம்பவும் ஓவர். களஞ்சியம், தான் கதாநாயகர், எழுதி இயக்குபவர் என்பதால் கதையில் தனக்காக ரொம்பவே காம்பரமைஸ் செய்து கொண்டு நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். இதுதான் கருங்காலி படத்தின் பலம், பலவீனம் இரண்டுமே...!
அஞ்சலி, சுனிதா வர்மா, அஸ்மிதா ஆகிய மூன்று நாயகியரில் அஞ்சலிக்கும், புதுமுகம் அஸ்மிதாவிற்கும் தான் அதிகம் நடிக்க வாய்ப்பு. அதை இருவரும் மிகச்சரியாக செய்திருக்கின்றனர். அதிலும் அஞ்சலி, ஒரு பக்கம் புருஷனிடமும், மற்றொருபக்கம் பொட்டலம் ரவியிடமும் (அதாங்க கருங்காலி களஞ்சியம்) மாட்டிக்கொண்டு படும் பாட்டில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி பேஷ், பேஷ் சொல்ல வைத்து விடுகிறார். மற்றொருநாயகர் ஸ்ரீனிவாஸ், அலெக்ஸ் உள்ளிட்டவர்களும் படத்தின் பலம்.
சிவசுந்தரின் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை இரண்டும் கருங்காலிக்கு, விருந்தாளியாக விருந்து படைத்திருக்கின்றன.
மொத்தத்தில் "கருங்காலி" - "வெறும் ஜாலி!"