புதுமுகங்கள் கே.ஜி, அதுல்யா, அனிரூத் ஆகியோருடன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்து, புதியவர் ஷிவராஜ்.ஆர் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கி, படத்தொகுப்பும் செய்து, தன் நண்பர் தேவாவுடன் இணைந்து தயாரிக்கவும் செய்திருக்கும் படம் தான் "காதல் கண்கட்டுதே". காதல் ஜோடி இடையே எழும் சந்தேகத்தால் வரும் பிரச்சினைகளையும், அந்த சந்தேகம் களையப்பட்டதிற்கு பிறகான சந்தோஷத்தையும் சொல்லும் படம்.
கதைப்படி, நாயகர் கே.ஜி படித்து விட்டு வேலை தேடி வருகிறார். கதாநாயகி அதுல்யா ஒரு பத்திரிகை நிருபர். நண்பர்களான இருவருக்குமிடையே மெல்ல காதல் மலருகிறது. இந்நிலையில் அதுல்யாவின் அலுவலகத்தில் அவருடன் பணிபுரியும் புகைப்பட கலைஞர் அனிருத், அதுல்யாவிடம் தன் காதலை தெரிவிக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் அதுல்யா, ஆனாலும் அவருடன் தொழில் நிமித்த நட்போடு பழகுகிறார். அவரிடம் நட்போடு பழகுவதை தன் காதலரிடமும் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்.
சதா சர்வகாலமும் தன் அலுவலக நண்பர் பற்றியே அதுல்யா கூறுவது கேட்டு வெக்ஸாகும் கே.ஜிக்கு, நாயகி மீது சந்தேகம் கலந்த சலிப்பும், வெறுப்பும் ஏற்படுகிறது. இதனால் காதலில் ஊடல் ஏற்படுகிறது. அந்த ஊடல் இறுதி வரை நீடித்ததா? அல்லது இறுதியில், சந்தேகம் தீர்ந்து இருவரும் மீண்டும் இணைந்தனரா..? என்பதே "காதல் கண்கட்டுதே" திரைப்படத்தின் கதையும், காட்சிப்படுத்தலும்.
நாயகன் கே.ஜி, புதுமுகம் என்பது தெரியாத அளவிற்கு இயல்பாக நடித்து எக்கச்சக்கமாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகி அதுல்யாவும் அழகிய ஹோம்லி லுக்கில் கச்சிதமாக கலக்கியிருக்கிறார்.
நாயகியின் அலுவலக நண்பர் அனிரூத், நாயகரின் நண்பரும் இயக்குனருமான ஷிவராஜ்.ஆர் உள்ளிட்டவர்களும், அவர்களது நடிப்பும் கச்சிதம்.
வழக்கமான காதல், மோதல்... கதை தான் என்றாலும் அதை கலர்புல்லாக படமாக்கியிருக்கும் விதத்தில் பெரிதாக கவருகின்றனர் இப்படக் இளைஞர் குழுவினர். பாராட்டுக்கள்.
பவனின் இசையில், "உன் நினைவுகள் எதுவோ அதுதான்...", "காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ...", "நீ அல்ல தூரம் தான்..." உள்ளிட்ட பாடலாசிரியர் மோகன்ராஜாவின் மோகன வரிகளுடன் கூடிய பாடல்களும் பின்னணி இசையும் பிரமாதம்.
புதியவர் ஷிவராஜ்.ஆர் முழுக்க, முழுக்க கோயமுத்தூர் பின்னணியில் எழுதி, ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பும் செய்து, இயக்கியும் இருக்கும் "காதல் கண்கட்டுதே" படத்தில் இடம் பெற்று இருக்கும், "அம்மா தானே....கேர்ள் ப்ரண்ட்டா என்ன?", "ரொம்ப சந்தோஷமாக இருக்க ரொம்ப காசு தேவை இல்ல திவ்யா..." , "சிரிப்பை விட திமிர்ல ரொம்ப அழகா இருக்கீங்க..", "இந்த பொண்ணுங்களே டோனி மாதிரி இருந்தா, கோலி மாதிரி வேணும்பாங்க கோலி மாதிரி இருந்தா டோனி மாதிரி வேணும் பாங்க, கோலி ,டோனி 2 பேர் மாதிரியும் இருந்தா, சச்சின் மாதிரி வேண்டும் என்பார்கள்...." உள்ளிட்ட வசீகர வசனங்களும், அவை இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சூழ்நிலைகளும் செம கச்சிதம். அதேமாதிரி, இயக்குனர் மணிரத்னம், கெளதம் மேனன்.. டைப் பெரிய இயக்குனர்களின் படைப்புகளுக்கு நிகரான ரிச் லுக்கும் இப்படத்தில் உள்ள ஒரு சில சிறு குறைகளை மறந்து கை தட்டி ரசிக்க வைக்கின்றன.
மொத்தத்தில், "காதல் கண்கட்டுதே - ரசிகனின் கை தட்டுதே!"