நடிகர்கள் : சோகா அலிகான், வீர் தாஸ்
இயக்கம் : சிவாஜி லோதன் பாட்டில்
முன்னாள் பிரதமர் இந்திரா, தன் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து நடந்த கலரவத்தை மையமாக வைத்து, தடைகள் பல கடந்து வெளியாகியுள்ள படம் தான் ‛‛31 அக்டோபர்'. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
படத்தின் கதை மொத்தமும் ஒரு நாளில் பயணிக்கிறது. தேவேந்தர் எனும் வீர் தாஸ், அவரது மனைவி திஜேந்தர் எனும் சோகா அலிகான் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் டில்லியில் அழகிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்தச்சூழலில் பிரதமர் இந்திரா, தன் சக பாதுகாவலர்களான பெனட் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோரால் சுட்டு கொல்லப்படுகிறார். இதையடுத்து டில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடிக்கிறது. லோக்கல் அரசியல்வாதிகள் டில்லியில் வசிக்கும் வீர்தாஸ் குடும்பத்தை கொல்ல துடிக்கிறார்கள், இவர்களிடமிருந்து வீர்தாஸ் எப்படி தன் மனைவி, மற்றும் குழந்தைகளை நண்பர்கள் உதவியுடன் காப்பாற்றுகிறார் என்பது ‛31 அக்டோபர்' படத்தின் பரபரப்பான கதை.
வீர் தாஸ், தன் மனைவி, குழந்தைகளை காப்பாற்ற போராடும் விதம் அவரை அந்த பாத்திரமாகவே வாழ வைத்திருக்கிறது. அவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
வீர் தாஸை போன்றே சோகா அலிகான், அழகிய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக திஜேந்தர் சிங் எனும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தீபராஜ், ராணா, திலக் சர்மா ஆகியோரும் தங்களது ரோலை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் சிவாஜி லோதன் பாட்டில், இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு பரபரப்பான, சென்சிட்டிவான கதையை கொஞ்சம் சினிமாட்டிக் தனமாக இயக்குநர் காண்பித்திருப்பது சற்றே பலவீனம். மேலும் படத்தின் முதல்பாதியும் மெதுவாக நகருவது ரசிகனை சலிப்படைய செய்கிறது. இருந்தாலும் படத்தின் பின்பாதி ரசிகனை சீட்டின் நுனிக்கு வரவழைத்திருப்பது பாராட்டுக்குரியது. இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.
ஒரு பரபரப்பான கதையில் ஆங்காங்கே சில குறைகளுடன், சினிமாட்டிக்தனம் கலந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக ‛31 அக்டோபர்' படத்தை பார்க்கும் போது ஏதோ ஒரு விதத்தில் மனதை தொடுவதுடன், நெகிழவும் செய்ய வைக்கிறது.