"நாளைய இயக்குனர்" சின்னத்திரை நிகழ்ச்சியில்தன் படைப்பின் வாயிலாக பங்கெடுத்த தியா எழுதி, இயக்கி நாயகரகவும் நடித்திட, மேஹாக் புரடக்ஷன்ஸ், எஸ்எஸ்பிக் சினிமாஸ் பட நிறுவனங்கள் சார்பில் ரூபேஷ்.பி.லோதா, ஈ.சிவசுப்பிரமணியன், கே.ஆர்.சீனிவாஸ் மூவரும் இணைந்து தயாரித்திருக்கும் படமே "கன்னா பின்னா".
சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் நாயகி அஞ்சலி ராவ். இவரைப் போன்றே, சினிமா கேமரா மேன், மியூசிக் டைரக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு அவரது நண்பர்களும் உடனிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து, எப்படியாவது ஒரு திரைப்படத்தை எடுக்கவேண்டும் என்று கடும் முயற்சி செய்து வருகிறார்கள். இத்தருணத்தில், நாயகி ஒரு தயாரிப்பாளரை பார்த்து கதை சொல்வதற்காக செல்கிறார். அப்போது, அந்ததயாரிப்பாளர், "கன்னா பின்னான்னு தியேட்டரில் ரசிகன் சிரிக்கிற மாதிரி ஒரு காமெடி கதை இருந்தால் நான் படம் எடுக்க ரெடி...." என்று சொல்ல, உஷாரான அஞ்சலி ராவும், தன்னிடம் 'கன்னா பின்னா' என்ற டைட்டிலிலேயே ஒரு காமெடி கதை இருப்பதாக உதார் விடுகிறார்.
டைட்டிலிலேயே சொக்கிப்போன அந்த புரொடியூசர் மேற்கொண்டு அவரிடம் எந்த கதையும் கேட்காது அட்வான்ஸ் தொகையாக அவருக்கும் அவரது மியூசிக், கேமிரா நண்பர்களுக்கும் தலா ஐந்து லட்சத்தை கொடுத்துவிட்டு, அவரையும், அவரது படக்குழுவையும் ஒப்பந்தம் செய்கிறார். தன் அறை திரும்பிய நாயகி, தனது நண்பர்களிடம் நடந்ததை சொல்கிறார். கதையே இல்லாமல், "கன்னா பின்னா"ன்னு ஒரு கதை இருப்பதாக பொய் சொல்லி தயாரிப்பாளரிடம் பணம் வாங்கிவிட்டு வந்திருப்பதை நாயகி, சொல்லவும், தயாரிப்பாளர். சொன்ன மாதிரி கன்னாபின்னான்னு ஒரு காமெடி கதையை தயார் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் மூன்று பேரும் அது மாதிரி, ஒரு கதையை தேடி கிளம்புகிறார்கள்.
அப்போது, நாயகன் தியாவை யதேச்சையாக பார்க்கிறார்கள். பேருந்து நிறுத்தத்தில் ஸ்வீட், சாக்லேட் கொடுத்து இளம் பெண்களை தன்னை காதலிக்கும்படி., தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கும் நாயகன் தியாவை பார்த்ததும் அவனை பின் தொடர்ந்தால் "கன்னாபின்னா"ன்னு ஒரு நல்ல காமெடி கதை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவனை குளோசாக பாலோ செய்ய முடிவு செய்கிறார்கள். இறுதியில் அவர்களுக்கு நல்ல கதை கிடைத்து, நினைத்த மாதிரி காமெடிப்படம் எடுத்தார்களா?, இல்லையா...? என்பது தான் 'கன்னா பின்னா' படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம்.
இப்படத்தின் நாயகன் தியா தான்., இப்பட இயக்குனரும் கூட. படம் முழுக்க அவர் ரொம்பவும் இன்னோசென்ட்டாக நடித்திருக்கிறார். தனது பேஸ்புக் கணக்கை தொடங்குவதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்யக்கூடிய அளவுக்கு இன்னோசென்ட் என்பதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. கட்டுமஸ்தான உடம்புடைய நாயகர் தியாவை இன்னோசென்ட்டாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் கடுமையாக உழைத்திருப்பதற்காக அவரைப் பாராட்டலாம்.
நாயகி அஞ்சலி ராவ், கன்னாபின்னா பட டைட்டிலுக்கு ஏற்றபடி படத்தில், அடிக்கடி கன்னாபின்னா என வந்து போகிறார்.
வில்லனாக வரும் சிவாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடலமைப்பு இருக்கிறது. ஆனால், இவருடைய நடிப்புக்கு ஏற்ற கதாபாத்திரம் படத்தில் இல்லாதது மைனஸ்.
கியாஸ், பட்லர் பாண்டி, அபு, பாபு, பானுப்பிரியா, கிரிஸ்டன் உள்ளிட்ட நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள், நாயகியின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் தங்கள் பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து பளிச்சிட முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அது முழுதாக முடியாது தவித்துமிருக்கிறார்கள் பாவம்.
ரோஷன் சேதுராமன் இசையில் 'ஜிங்கிலி மிட்டாய்' பாடல் கிளாமர் விரும்பும் ரசிகர்களுக்கு பெறும் ஆறுதல். "ஏ... டும்மாக்கி, டம்மாக்கி கன்னாபின்னா..., மாட்டிக்கிச்சு சூப்பர் பிகரு... இவன் மச்சம் கூட ஈஸ்ட்மென் கலரு..." உள்ளிட்ட பாடல்களிலும் குறையொன்றுமில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஜெரால்டு ராஜமாணிக்கத்தின் ஒளிப்பதிவு ஒஹோ பதிவு இல்லை என்றாலும், ஓ.கே., பதிவு.
வில்சி எனும் படத்தொகுப்பாளர் படத்தில் பணிபுரிந்து இருப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.
படத்தின் டைட்டிலுக்கேற்றவாறு கன்னா பின்னாவென்று படத்தை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் தியா. தியாவின் எழுத்து, இயக்கத்தில் 'கன்னா பின்னா-ன்னு ஒரு கரு, கதை, காட்சிப்படுத்தலை லாஜிக், மேஜிக் என "முன்ன பின்ன" பார்க்காமல் போய் ரசிகன் தியேட்டரில் பார்த்தான் என்றால், "கன்னா பின்னா" ஒரு வேளை செமயாய் அவனை திருப்தி படுத்தலாம்.
மொத்தத்தில் 'கன்னா பின்னா - 'கன்னா பின்னா அவ்வளவே!"