தினமலர் விமர்சனம்
அதர்வா - கேத்தரின் தெரசா ஜோடி நடிக்க., டி.என்.சந்தோஷின் எழுத்து, இயக்கத்தில் வெற்றித் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் பேனரில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு வெற்றிப்படம் தான் கணிதன். மீடியா மனிதன் சம்பந்தப்பட்ட கதை... என்பதால் மீடியாக்களுக்கு அர்பணிக்கப்பட்டிருக்கும் கணிதன், மனிதனா.?, புனிதனா..? எனப் பார்ப்போம்...
நம் நாட்டில் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட புதுப்புது வகையான மோசடிகள்., பாரதத்தாயின் அடிமடியில் கைவைக்கும் பல்வேறு விஷயங்கள் தலைவிரித்தாடினாலும் அதை விட மிகவும் அபாயகரமானது போலி கல்விசான்றிதழ் மோசடிகள் தான், என்பதை அழகாகவும், அம்சமாகவும் படம் பிடித்து காட்டியுள்ளான் கணிதன் என்றால் அது, நூற்றுக்கு நூறு நிஜம் எனலாம்.
கணிதன் கதைப்படி., பொதிகை டி.வி.யின் நியூஸ் ரீடரான ஆடுகளம் நரேனின் வாரிசு நாயகர் அதர்வா. பர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்ற இன்ஜினியர் என்றாலும்., தன் பி.பி.சி நியூஸ் சேனலின் நிருபர் எனும் லட்சியத்திற்காக, ஸ்கை டி.வி எனும் பிரபலமாகாத தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணிபுரிகிறார். கூடவே, யதேச்சையான ஒரு சந்திப்பில் எதிர்படும் நாயகி கேத்ரின் தெரசாவின் காதலை பெற்று அவருடன் இணைந்து வாழ்வது, இது தான் அதர்வா..... என வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், பி.பி.சி நியூஸ் சேனல் நேர்முக தேர்வில் வெற்றியும் பெற்று விடுகின்ற அதர்வாவிற்கு, அவர் விரும்பிய சேனல் பணியில் சேர பாஸ்போர்ட் வழங்க சில போலீஸ் பார்மாலிட்டீஸ் உண்டல்லவா..?அது போல போலீஸ் - வெரிபிகேஷன்” நடக்கிறது அதில், அதர்வாவின டிகிரி சர்ட்டிபிகேட்டை பயன்படுத்தி,அவர் வெளிநாட்டில் படிப்பதாக வங்கிகளில் பல கோடி கல்வி கடன் பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வருகிறது. கூடவே, இன்னும் சில இளைஞர்களின் எதிர்காலமும், அதே குற்றத்திற்காக வீதிக்கு வந்து விட, போலீஸ் அதர்வா உள்ளிட்டோரை பிய்த்து பெடலெடுக்கிறது. நீதிமன்றம் அதர்வாவின் கல்வி தகுதியையே ரத்து செய்கிறது. கனிதன் படத்தின் கலரும், காட்சிகளும் மாறுகின்றன. விறுவிறுப்பும், பரபரப்பும் தொற்றி கொள்கின்றன.
தான், செய்யாத குற்றத்திற்காக தண்டனையும், அவமானமும் அடைந்த அதர்வா, தனது லட்சியமும், காதலும் பாதிக்கப்பட்ட வருத்தத்தில் கொதித்தெழுகிறார். அதன்பின், அதர்வா., தன்னையும், தன்மாதிரி நூற்றுக்கணக்கான இளைஞாகளையும் கல்வி சான்றிதழ் மோசடி வழ்க்கில் சிக்க வைத்த டாட் கன்சல்டன்சி "வில்லன் அண்ட் கோவினரை எப்படி அடையாளம் காண்கிறார்? எப்படி, விரட்டி, மிரட்டி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்? அல்லது, சாகடிக்கிறார்..? அவருக்கு காதலி கேத்தரின் தெரசாவும், போலீஸ் பாக்யராஜும், வக்கீல் நண்பர் கருணாகரன் உள்ளிட்டவர்களும் எவ்வாறு துணை நிற்கின்றனர்...? என்பது தான் கணிதன் படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம்.
ஈட்டி அதர்வா மாதிரி ஷார்ப்பான ஒரு இளம் கதாநாயகரைக் கொண்டு, கல்வி சான்றிதழில் முறைகேடு செய்து எண்ணற்ற இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் சுயநலக் கிருமிகளுக்கு சரியான பாடம் புகட்டும் விதத்தில் கலக்கலாகவும், கலர்புல்லாகவும் படம் பண்ணியிருப்பதில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர்.
இங்கிலீஸ்ங்கறது வெறும் லங்வேஜ்... அதுவே நாலட்ஜ் இல்ல... என ஸ்டைலாக இங்கிலீஷ் பேசி பி.பி.சி இண்டர்வியூ குழுவினரை அசத்துவதில் தொடங்கி, வீட்டில் உள்ளோர் திருப்பதி போயிருப்பதாக போன் போட்டு காதலி கேத்தரின் கூப்பிட்டதும், அதீத கற்பனையில் செல்லும் அதர்வா, அங்கு கேத்தரினின் பெட்ரூமில் அவர் தோழிகள்... அத்தனை பேர் ஒளிந்திருப்ப்தைப் பார்த்து, அலட்டி கொள்ளாமல் புல் மூட்டில் இத்தனை பொண்ணுங்கள எப்படி ஒரே நேரத்தில்.. தப்பா இருக்கு.... ஒவ்வொருத்தரா அப்புறம் பார்க்கலாம் .... என குறும்பு செய்வது வரை .... காட்சிக்கு காட்சி ரசிகனை வியப்பில் புருவம் உயர்த்த வைக்கிறார்.
அதே மாதிரி, நம்ம அடையாளம் நாம படிச்சு வாங்கிய சர்ட்டிபிகேட், நம்ம அடையாளத்தை நமக்கே தெரியாது திருடி , போலி சர்ட்டிபிகேட் போட்டு விக்கிறவனை தேடிப் பிடித்து கொல்லணும்..... என உறுமுவதிலாகட்டும், பொண்ணுங்க கிட்ட எது வேணா வாங்கிடலாம், ஆனா, போன் நம்பர் வாங்க முடியாது... நீ நான் கேட்காமலேயே உன் நம்பரை கொடுத்தப்பவே... நான் முடிவு பண்ணிட்டேன், நீ தான், என் காதலி என்று... இப்படி காதலி கேத்ரினிடம் உருகுவதிலாகட்டும், எனக்கு உன்னை புடிச்சிருந்தது அதான் பொய் சொன்னேன்..., எங்க அப்பாவிக்கு பிபிசி ரிப்போர்ட்டர் ஆக ஆசை.. அது முடியாது போனதால் அவர் ஆசையை நான் நிறைவேற்றி வைக்க முயற்சிக்கிறேன்..." என உளறுவதிலாகட்டும்.. சகலத்திலும், தன் மறைந்த தந்தை நடிகரின் சாயல் துளியும் இல்லாமல் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் அதர்வாவிற்கு ஒரு சபாஷும் ., கொஞ்சம் அப்ளாஸூம் தரலாம்.
உனக்கு பெரிய கண்ணு பெரிய காது.. பெரிய மூக்கு ஆனா சின்ன லிப்... தனித் தனியா இதையெல்லாம் பார்த்தா நீ ரொம்ப சுமார். ஆனா, எல்லாவற்றையும் உன் உருவமா ஒட்டு மொத்தமா பார்த்தா நீ தான் அழகன்... " என கதாநாயகனை புதுமையாக புகழும் கதாநாயகி கேத்ரின் தெரசா, அழகு பதுமை. தெரசாவுடனான அதர்வாவின் காதலும் , காட்சிகளும் அது பொயடிக்காக., படமாக்கப்பட்டிருக்கும் விதமும் அருமை. வாவ்!
அதர்வாவின் நண்பராக, வக்கீலாக படம் முழுக்க வரும் கருணாகரனின் காமெடி டைமிங் கலக்கல்! அதே நேரம் அவருக்கு க்ளைமாக்ஸில் ஏற்படும் முடிவு பரிதாபம்!
இரக்க மனம் உள்ள போலீஸாக வரும் கே.பாக்யராஜ், பொதிகை நியூஸ் ரீடர் கம் ஹீரோவின் அப்பா ஆடுகளம் நரேன், போலி சாண்றிதழ் குறித்து பக்காவாக விளக்கும் ஒய்ஜி மகேந்திரா, ஹாட் காப்பி கப்பை வைத்து ஆள் நடமாட்டத்தை மோப்பம் பிடிக்கும் இந்தி வில்லன், அவரது முரட்டு மகன்கள் உள்ளிட்டோரில் அந்த வில்லன் செம அசால்ட்டாய் மிரட்டுகிறார்!
அரவிந்த் கிருஷ்ணாவின் அபாரமான அழகிய ஒளிப்பதிவு, புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பு, திலிப் சுப்பராயனின் சண்டை பயிற்சி உள்ளிட்டவை கணிதனின் பெரும் பலங்கள்! ஆனால், அதே நேரம், பாடல் வரிகளில், தமிழே புரியக்கூடாது... என கங்கணம் கட்டிக்கொண்டு, யப்பா சப்பா டப்பா டப்பா... என்றெல்லாம் ஒலிக்கும், தமிழை அழிக்க முயலும் இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணியின் அதிரடி டிரம்ஸ் சப்தம் சற்றே கணிதனின் பலவீனம்!
இளம் இயக்குனர் டி.என்.சந்தோஷ் எழுத்து, இயக்கத்தில், சில இடங்களில் தேவை இல்லாமல் வந்து போகும் சரக்கடிக்கும் காட்சிகள், அதர்வா உள்ளிட்ட தவறு செய்யாத இளைஞர்கள் மீது போலீஸ் காட்டும் தேவைக்கு அதிகமான மூர்க்கத்தனம்..... உள்ளிட்ட பெரிதாக தெரியாத ஒரு சில குறைகளை ஒதுக்கிவிட்டு, கொஞ்சம் பதுக்கி விட்டுப் பார்த்தால்., இந்த காலத்துல தப்பு பண்றவனக் கூட விட்டுடுவங்க... தட்டிக் கேட்கறவன விடவே மாட்டாங்க... என்பது உள்ளிட்ட டயலாக் பன்ச்களும், போலி கல்வி சான்றிதழ்களுக்கு எதிராக, அதர்வா, இப்படக் கதைப்படி எடுக்கும் அதிரடி முயற்சிகளும், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே முற்றிலும் புதுசு எனலாம். அதுதான் கணிதனின் அபார வித்தியாசம், மற்றும் விறுவிறுப்பு! கூடவே வெற்றி வாய்ப்பு ..!
தாயரிப்பாளர் தாணுவின் கணக்கில் தப்பாத ”கணிதன்”, ரசிகனின் மனதிலும் புனிதனாக போற்றப்படுவான் என நம்பலாம்!
ஆக மொத்தத்தில், கணிதன் போலி சான்றிதழுக்கு எதிரான போரில் புனிதன்!