நடிகர்கள் : மோகன்லால், ஆண்ட்ரியா
டைரக்சன் : ரஞ்சித்
தேசிய விருதுபெற்ற 'ஸ்பிரிட்' படத்துக்குப்பிறகு மூன்று வருடங்கள் கழித்து மோகன்லால் - ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புகளுக்கு தீனி போட்டிருக்கிறதா..? பார்க்கலாம்.
வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்துவதை மிகவும் அதிர்ச்சிகரமான முறையில் செய்கிறது கோழிக்கோட்டில் உள்ள ஒரு கும்பல். இதற்கு உடந்தையாக இருக்குமாறு ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவரை மிரட்டி தங்கத்தை வெளிக்கொண்டு வருகிறார்கள்.. ஆனால் பின்னர்தான் வரும் வழியில் தங்கம் மிஸ்ஸான விபரம் தெரியவருகிறது.
இந்தநிலையில் நான்கு நாட்களாக திடீரென மாயமான கஸ்டம்ஸ் அதிகாரியான தனது கணவரை தேடி, மும்பையில் இருந்து கோழிக்கோடு வருகிறார் ஆண்ட்ரியா.. வந்து இறங்கியதிலிருந்து மோகன்லாலின் கால்டாக்சியில் ஏறி, பல இடங்களிலும் சுற்றி விசாரிக்கிறார். ஆனால் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், திடீரென அவரது கணவர் போன்செய்து தான் திருவனந்தபுரத்தில் பத்திரமாக இருப்பதாகவும், மறுநாள் மும்பை வந்துவிடுவதாகவும் கூறி ஆண்ட்ரியாவை மும்பைக்கு கிளம்ப சொல்கிறார்.
ஆனால் ஒரு தெரிந்த போலீஸ் அதிகாரி மூலம், ஆண்ட்ரியாவின் கணவர் போனில் பேசிய சிக்னலை வைத்து அவரும் அதே கோழிக்கோட்டில் இருப்பதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் மோகன்லாலுடன் காரில் செல்லும் ஆண்ட்ரியாவை ஒரு கும்பல் தாக்குகிறது. அவர்களிடமிருந்து தன்னை காப்பற்றும் மோகன்லால், உண்மையில் ட்ரைவர் அல்ல என்பதும் மோகன்லாலும் தன் பரிவாரங்களுடன் தனது கணவரை தேடிவந்த விஷயம் ஆண்ட்ரியாவுக்கு தெரியவருகிறது.
இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ஆண்ட்ரியாவின் கணவரை கண்டுபிடிக்கும் மோகன்லால், அவரது தலைமறைவுக்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய தங்க கடத்தல் கும்பலை கண்டுபிடித்து, அவர்களிடம் இருந்து தங்கத்தையும் ஆண்ட்ரியாவின் கணவரையும் மீட்கிறார். இந்த நேரத்தில் சந்தேகத்தில் மோகன்லால் & கோவை கைது செய்யும் உள்ளூர் போலீஸ், அவர் உளவுத்துறை அதிகாரி என தெரிந்ததும் விடுவித்து அவர்களை பத்திரமாக பிளைட் ஏற்றிவைக்கிறது.
ஆனால் இறுதியில் திடீரென கிடைக்கும் செய்தியால் அவரது பயணத்தை தடுத்து நிறுத்த முயல்கிறது போலீஸ்.. போலீசார் திடீரென ஏன் மோகன்லாலின் பயணத்தை தடுக்கவேண்டும்..? அவர்களால் மோகன்லாலை பிடிக்க முடிந்ததா..? அப்படியானால் உண்மையில் மோகன்லால் யார்..? அவர் கோழிக்கோட்டிற்கு வந்த காரியம் என்ன என்பதை ஐந்து நிமிட க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் வைத்து முடிக்கிறார்கள்.
தங்க கடத்தல் என்கிற கதைக்களத்தை வைத்து தாயம் விளையாட முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.. இதற்கு முந்தைய சில படங்களை விட மோகன்லால் இதில் படு ஹேண்ட்சம் ஆக இருக்கிறார். அதிலும் மோகன்லால் தனது மீசையை முறுக்கும் அழகே தனி.. ஆனால் மோகன்லாலின் ரசிகனுக்கு அதுமட்டும் போதுமா..? எந்தவித ஆக்சன் காட்சிகளும் சுவராஸ்ய முடிச்சுக்களும் இல்லாமல் இடைவேளை வரை ஆண்ட்ரியாவின் கார் ட்ரைவராகவே மோகன்லாலை அன்டர்பிளே செய்யவிட்டு கதையை நகர்த்தி இருப்பது, பிரியாணி சாப்பிட வந்த ரசிகனுக்கு தக்காளி சாதம் போட்ட கதைதான்.
இடைவேளைக்குப்பின் கதை கொஞ்சம் வேகம் பிடித்தாலும் படத்தில் தங்க கடத்தல், அதை மீட்பது என எந்த இடத்திலும் இன்றைய டெக்னாலஜி எதுவும் கடைபிடிக்கப்படாதால் 90களில் வந்த கடத்தல் படங்களை பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது. பெருச்சாழி, மிஸ்டர் பிராடு, ரன் பேபி ரன், கிராண்ட் மாஸ்டர் என தனது முந்தைய படங்களில் டெக்னாலஜியை பயன்படுத்துவதில் உச்சம் தொட்ட மோகன்லாலை, இதில் கிட்டத்தட்ட நிராயுதபாணியாகவே உலாவிட்டிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.
இடைவேளை வரை ஆண்ட்ரியாவின் ஆக்கிரமிப்புதான்.. மோகன்லாலுக்கும் அவருக்குமான மெல்லிய நட்பு ரசிக்கவைக்கிறது. இவர் தவிர இரண்டு காட்சிகளில் வரும் மைதிலி, ஒரே ஒரு திருமண காட்சியில் வரும் சிருந்தா ஆஷப், என மூன்று ஹீரோயின்கள் இருந்தும் கூட படத்தில் மோகன்லாலுக்கு ஜோடி இல்லை என்பது ஒருபக்கம் வருத்தம்.. இன்னொரு பக்கம் சந்தோசம்.. சித்திக்கின் கெட்டப்பும் இழுத்திழுத்து பேசும் கோழிக்கோடு பாஷையும் எப்போதும் பெட் கட்டி விளையாடும் அவரது கேரக்டரும் ரசிக்கும்படியாக இருந்தாலும் படத்திற்கு எந்தவிதத்திலும் சப்போர்ட் பண்ணவில்லை.
இளம் அரசியல்வாதியாக வரும் அஜ்மல், மூன்று காட்சிகளில் வந்தாலும், அதில் எதிலுமே காமெடிக்கு வாய்ப்பு இல்லாத அஜு வர்கீஸ், படம் முழுதும் செல்போனிலேயே மோகன்லாலை டார்ச்சர் செய்யும் குடிகாரனாக வந்து க்ளைமாக்ஸில் முப்பது செகன்ட் மட்டும் முகம் காட்டும் டினி டாம், மோகன்லாலின் பாடிகார்டாக வரும் அபுசலீம், மிகப்பெரிய பில்டப்புடன் மோகன்லாலின் டீமில் வலம் வரும் ரெஞ்சி பணிக்கர் என எல்லோருக்குமே குறைந்த வாய்ப்பே வழங்கப்பட்டுள்ளதும் கூடுதல் ஏமாற்றத்தையே அளிக்கிறது.
தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கடத்துவதற்காக அங்கே வேலைபார்க்கும் ஒரு ஆளையே கொல்வது, மோகன்லால் யார் என்கிற டிவிஸ்ட்டை கடைசிவரை மெயிண்டன் பண்ணியிருப்பது மட்டும் சுவாரஸ்யம் சேர்க்கின்றன.
கடத்தல் என்று வரும்போது அதில் புதுமையும், தந்திரமும், சவாலும், தொழில் நுட்பமும் போட்டிபோட்டு பயன்படுத்தபட்டிருக்கவேண்டும்.. ஆனால் ரஞ்சித்துக்கு இந்த ஏரியா புதுசு என்பதால் நிறையவே தடுமாறியிருக்கிறார். அதனால் பசியுடன் வந்த மோகன்லாலின் ரசிகனையும் அரைவயிற்று பட்டினிபோட்டே வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.