தினமலர் விமர்சனம்
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய வித்தியாசமும், விறுவிறுப்பும் மிக்க வெற்றிப்படங்களை இயக்கிய மிஷ்கின், கதையின் நாயகராக நடித்து, இயக்கியும் இருக்கும் வித்தியாசமான படம்தான் நந்தலாலா. அவர் இயக்கத்தில் வெளிவந்த மற்ற படங்களைப் போன்று விறுவிறுப்பு இல்லாமல் விருது படங்களைப் போன்று வித்தியாசமான கதையும், காட்சியமைப்புகளும்தான் நந்தலாலா படத்தின் பலமும் பலவீனமும். இப்படம் வெளிவராமல் எத்தனையோ நட்கள் தாமதமானதில் இருந்தே இது எத்தனை நல்ல படம் என புரிந்திருக்கும்.
பாட்டியின் அரவணைப்பில் வளரும் சிறுவன் ஒருவன் பள்ளி சுற்றுலாவிற்கு போவதாக பாட்டியிடமும், வேலைக்கார அம்மாவிடமும் சொல்லிவிட்டு சுற்றுலாவுக்குப் போகாமல் தன் தாயை தேடி தன் தாய் இருப்பதாக பாட்டி சொல்லி வரும் கிராமத்திற்கு கிளம்புகிறான். அதேநேரம், சின்ன வயதிலேயே தன் தாயால் மனநல காப்பகத்தில் விடப்படும் மனநோயாளியான கதையின் நாயகனும் தன் தாயை தேடி காப்பக காவலாளி ஒருவரை அடித்துப் போட்டு விட்டு அவரது உடையில் தாயை தேடி கிளம்புகிறார். தாயைத் தேடி செல்லும் இந்த இருவரும் எதிர்பாராதவிதமாக ஒன்று சேர, இருவரும் சேர்ந்து தங்களது அம்மாக்களை தேடி கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் நந்தலாலா படத்தின் மொத்த கதையும்!
இத்துனோன்டு கதையை இயக்குனர் மிஷ்கின் காட்சிப் படுத்தியிருக்கும் விதம்தான் வித்தியாசமோ வித்தியாசம். அதிலும் இவரது கிராமத்து பெயர் தாய்வாசல் என்றும், அந்த சிறுவனின் பெயர் அன்னை வயல் என்றும் சென்டிமெண்ட்டால் பெயர் சூட்டியிருப்பதில் தொடங்கி, பரபரப்பான நெடுஞ்சாலைகளில் நடந்தே வரும் இருவரும் பண்ணும் சேட்டைகள் வரை சகலத்திற்கும் கோட்டை விடாமல் மிக அழகாக ஒரு படத்தை முயற்சித்திருக்கிறார் டைரக்டர் எனும் வகையில் மிஷ்கினுக்கு ஹேட்ஸ் ஆப் சொல்லத் தோன்றுகிறது.
கதையின் நாயகராக மிஷ்கின் கலக்கலாக நடித்திருக்கிறார். அதுவும் முட்ட முட்ட முழிக்கும் தனது விழிகளாலேயே தனது மன வியாதியை வெளிப்படுத்தும் இடங்கள் சூப்பர்ப். அதேநேரம் சிறுவனின் தாய் வேறு ஒருவருடன் வாழ்வதை சிறுவனிதம் மறைக்கும் அளவிற்கு விவரம் தெரிந்த மிஷ்கினுக்கு, பேண்ட்டை போட்டுக் கொள்ளத் தெரியாதது, சின்னதம்பி பிரபு மாதிரி நம்ப முடியாமல் இருக்கிறது. அதேமாதிரி அவர் கையில் பிடித்துக் கொண்டே திரியும் பேண்ட்டை பாதி படத்திற்கு மேல் ஒரு நாடா மூலம் கட்டி விடும் பள்ளி மாணவி, சைக்கிளில் போய் டிராக்டரில் திரும்பி வரும் காட்சிகள், மிலிட்டரி கெட்-அப்பில் பைக்கில் இரண்டு குண்டு ஆசாமிகள் வரும் காட்சிகளும், டிரக் - லாரி உள்ளிட்டவைகளில் மிஷ்கினும், சிறுவனும் தப்பிக்கும் இடங்களும் வேறு ஏதோ அயல்நாட்டு மொழிப்படங்களில் பார்த்த ஞாபகம். விலைமாதுவாக வரும் ஸ்னிக்தா,னும் அவரை பழங்கால காரில் துரத்தும் கிழவரும், லாரியில் ஹாரனை பிடுங்கி வந்து அதனால் மிஷ்கின் அடிபடும் இடங்களும், இளநீர் காரரிடம் இளநீர் திருடி, பின் அவரது மயக்கம் தாகத்திற்கே இளநீர் தரும் இடங்களும் மிஷ்கினின் இயக்கத்திற்கு சான்று.
மிஷ்கின் மாதிரியே விலைமாதராக வரும் ஸ்னிக்தா, பள்ளி மாணவி, இளநீர் வியாபாரி, மனநோயாளியாக வரும் ரோஹினி, பள்ளி சிறுவன் என சகலரும் பளிச் என்று நடித்திருக்கிறார்கள்.
விருதை மட்டுமே குறிவைத்து படம் வேகமே இல்லாமல் பயணிக்கும் விதம் வெறுப்பை ஏற்படுத்தினாலும், ரசனை மிகுந்தவர்களுக்கு லாலா கடை இனிப்பு இந்த நந்தலாலா என்றால் மிகையல்ல..!
------------------------
குமுதம் விமர்சனம்
எங்கம்மா கன்னத்துல அறை கொடுக்கணும்... என மன நல காப்பகத்திலிருந்து ஆவேசத்துடன் தப்பிக்கும் பாஸ்கரன் எங்கம்மாவுக்கு முத்தம் கொடுக்கணும் என தவிப்போடு கிளம்பும் சிறுவன் அகிலேஷ். இந்த இருவருக்கும் நடக்கும் சந்திப்பும் அதையொட்டிய நெடுஞ்சாலை பயணமும் விதவிதமான மனிதர்களுடன் ஏற்படும் அனுபவங்களும் தான் கதை.
ஜப்பானிய படமான கிகுஜிரோவின் தழுவல் தான் இந்த நந்தலாலா. சில கேரக்டர்களை தவிர முதலில் மிஷ்கின் யாரோ டி.வி.யை உடைச்சுட்டாங்க என முதல் காட்சியிலேயே மிக புத்திசாலித்தனமாக வார்டனிடம் சொல்லும் போது மனநலம் பாதித்தவருக்கான அறிகுறியே இல்லை. விழி பிதுங்குற மாதிரி முகத்தை குரூரமாக்கி காட்டுவதிலும் மென்டலா என்று கேட்டவுன் அவர் காட்டும் மூர்க்கத்திலும், பையனிடம் கோபத்தை காட்ட முடியாமல் தவியாய் தவிக்கின்ற தவிப்பும் இவன் புத்திசாலியா? புத்தி பிசகியவனா? என்ற குழப்பம் தான் மிஞ்சுகிறது.
அந்த குட்டிப் பையன் வயதுக்கு மீறிய உடலசைவுகளையும் வசனத்தையும் வெளிப்படுத்துவது படு செயற்கை போலீஸிடம் இருந்து தப்பிக்க படபடவென ஆங்கிலத்தில் பேசுவதும், அதற்கு அந்த போலீஸ்காரர் காட்டும் முக பாவனையும் ரசிக்க வைக்கிறது. அதேலோல இளநீர் திருடி மாட்டிக்கொண்டு தப்பித்து ஓடும் காட்சியில் இளநீர்க்காரருக்கே இளநீரை வெட்டிக்கொடுப்பதுமாக காட்சிகளை நகர்த்தியிருக்கும் விதம் ஊனமுற்ற வாலிபர் கேரக்டர் செம டச்சிங். மருத்துவமனையில் சேர்த்த பின்பு அவனுக்கு சிகிச்சையளித்த பெண் டாக்டரும் நொட்டிக்öõண்டே செல்வது விஷூவல் கவிதை.
தன் அம்மாவை அடிக்க கிளம்பிய மிஷ்கின். எதிர்பாராவிதமாக அந்த சிறுவனின் அம்மா நடத்தையை கண்டு செவிட்டில் அடிக்கும் காட்சியில் தியேட்டரில் செம கைத்தட்டல் . ஸ்னிக்தாவுக்காக நடக்கும் சண்டை. ஸ்னிக்தா பேசும் செயற்கையான வசனங்கள் எல்லாமே போர். மகேஷ் முத்துச்சுவாமியின் கேமரா தான் படத்துக்கு முக்கிய ஜீவன். ராஜாவின் பின்னணி இசையும். பாடல்களும் சிலிர்ப்பை ண்டு பண்ணுகிறது. வசனங்களே இல்லாமல் காட்சிகள் மூலம் கதை சொல்வதில் மிஷ்கின் நிறையவே மெனக்கெட்டிருப்பது புது முயற்சி. ஆனால் சராசரி ரசிகனின் சூழல், அவனின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல் தமிழர்கள் நடித்த ஜப்பானிய படம் போல இருப்பதால் சில இடங்களில் மனம் லயிக்கவில்லை என்பது நிஜம்.
நந்தலாலா - துன்பியல் கவிதை. குமுதம் ரேட்டிங் - ஓ.கே.
----------------------------
கல்கி விமர்சனம்
அம்மாவை அறைய வேண்டும் என்று மனநிலை முதிராத ஒருவனும், அம்மாவுக்கு முத்தம் தர வேண்டும் என்று பள்ளிச் சிறுவனும் அவரவர் அம்மாவைப் தேடிப் பயணமாவதுதான் கதை. (இருவரும் சிறுவயதில் அம்மாவைப் பிரிந்தவர்கள்) ஆனால், இருவருக்கும் காலம் அறை கொடுக்கிறது. என்பது க்ளைமாக்ஸ். அவர்கள் வழியில் சந்திக்கும் நபர்களின் தோள்களில் தொத்திக் கொண்டு பயணிக்கும் கதையில், நெகிழ்வும், கண்ணீரும், ரத்தமும், வெக்கையும் கலந்து வியாபிக்கின்றன. மனநிலை முதிராத பாஸ்கரமணி பாத்திரம் மிஷ்கினுக்கு என்றே உருவானதோ... அத்தனை கச்சிதம். சிறுவன் "அகியும் ஏக்கத்தை முகத்தில் துõக்கி அலைகளில் மனசுக்குள் என்னவோ பிசைகிறது! கூடவே தொற்றிக் கொள்கிற ஸ்னிக்தாவும் நடிக்கத் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
கதையின் மொத்தச் சுமையையும் தம் பின்னணி இசையால் இளைய ராஜா நீவிக் கொடுப்பதால் அத்தனை சுமையும் பார்வையாளர் மனத்துக்குள் இறங்கி விடுகிறது. "ஒண்ணுக்கொண்ணு துணை இருக்கு உலகத்துல பாடல் ஜேசுதாஸின் குரலில் ஒலிக்கையில் ராஜாவின் ராஜபாட்டை விரிகிறது! மகேஷ் முத்துசாமியின் கேமராவில் அத்தனை இயல்பு. ஆற்றின் போக்கில் நெளியும் நாணலைப் படம் பிடித்திருப்பது அட்சர லட்சம். ஆனால், காட்சிக்குக் காட்சி இத்தனை ஸ்லோ ஏன்...? உண்மையிலேயே பாஸ்கரமணி பாத்திரம் மனநிலை பிறழ்ந்ததா? "அகி அவன் அம்மாவைப் பார்ப்பதோடு கதை முடிந்துவிடுகிறதே. அப்புறம் ஏன் நீள்கிறது...? இதுபோன்ற கேள்விகள் தொக்கி நிற்கத்தான் செய்கின்றன.
நந்தலாலா - செல்லுலாய்டு கவிதை.