ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'காலா' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ஹூமா குரேஷி. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து டில்லியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையில் நிறுவும் முயற்சியில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்பட அனைத்து வசதியுடன் கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் மருத்துவ உதவிகள் மற்றும் மருத்துவரின் சிகிச்சை கிடைக்கும் வகையிலும் அவர் தனது உதவியை செய்து வருகிறார். ஒவ்வொரு கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமாகும் வரை மருத்துவ உதவிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த முயற்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கான தனி வார்டு ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து ஹூமா குரேஷி கூறும்போது: “எனது தொண்டு நிறுவன அமைப்பு மூலம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொரோனாவுக்கு எதிரான யுத்தம் இன்னும் முடியவில்லை.கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது அலையை போல் நிலைமை மோசமாவது வரை பார்த்துக்கொண்டிருக்க கூடாது. டில்லியில் குழந்தைகளுக்காக 30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டை உருவாக்கி வருகிறோம்” என்றார்.