யாருடா மகேஷ் சந்திப்கிஷன், வழக்கு எண் ஸ்ரீ, கேடி பில்லா கில்லாடி ரங்கா ரெஜினா மூவரும் நாயகர், நாயகியாக நடிக்க, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.எஸ்.கே, இசையாளர் ஜாவிட்ரியாஸ், படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ் உள்ளிட்டோரின் வெற்றி கூட்டணியில் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வந்திருக்கும் ஆக்ஷ்ன் த்ரில்லர் படம் தான் "மாநகரம்".
ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் ரெஜினா மீது, அவருடன் படித்த சந்தீப் கிஷனுக்கு காதல். ரெஜினாவுக்கும் அவர் மீது காதல் இருந்தாலும், வேலை வெட்டி இல்லாது வீம்பாக சுற்றும் சந்தீப்பிடம் அதைக் காட்டிக் கொள்ளாது தவிர்க்கிறார் ரெஜினா. இந்நிலையில், திருச்சியில் இருந்து ரெஜினாவின் தோழி சிபாரிசில் அந்த ஐ.டி நிறுவனத்தில் இண்டர்வியூவுக்கு வரும் ஸ்ரீ, வந்த அன்றே சந்தீப் கிஷனை நையப்புடைக்க நினைக்கும் ஒரு குரூப்பால் ஆள்மாறட்டமாகி, இவர், நையப்புடைக்கப்பட்டு தன் காசு பணம், செல்போன் மற்றும் சர்ட்டிபிகேட்ஸ் உள்ளிட்டவைகளை தொலைத்து விட்டு கிடைத்த வேலையில் சேரவும் முடியாது, சேராது இருக்கவும் முடியாது அல்லாடுவதோடு, சந்தீப், தன் காதலுக்காக அவசர கதியில் செய்த ஒரு குற்ற செயலில், இவர், போலீஸிடம் சிக்கிக் கொண்டு விழியும் பிதுங்குகிறார். இதேநேரத்தில் சென்னை சிட்டியின் மிகப் பெரிய தாதா மதுசூதனனின் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன், ஸ்ரீயை தாக்கிய குரூப்பால் தவறுதலாக கடத்தப்படுகிறான் ஸ்ரீயிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போனால் அந்த விஷயத்திலும் ஸ்ரீயின் தலை உருளுகிறது.
இந்த மூன்று விவகாரத்தில் இருந்தும் ஸ்ரீ மீண்டாரா? அதற்கு ஆரம்பத்தில் ஸ்ரீயை தவறாக கருதும் சந்திப் கிஷன் எவ்வாறு உதவுகிறார். சென்னைக்கு புதிதாக வரும் கார் டிரைவர் சார்லிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஆள் கடத்தலில் புதிதாக கால் வைத்த முனிஷ் காந்த் - ராமதாஸ் அடியாள் கும்பலிடம் சிக்கிக் கொண்டு படும் பாடென்ன.? சந்திப் - ரெஜினாவின் சந்தோஷமான க்ளைமாக்ஸை எட்டியதா..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு இரவு நேர சென்னை மாநகரின் எழில் ததும்ப, ததும்ப... விபரீதமான முடிவு ஏதும் நடந்தேறி விடுமோ.? எனும் பதைபதைப்பை சீனுக்கு சீன் ஏற்படுத்தி, வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது மாநகரம் படத்தின் மீதிக் கதை.
அடாவடித்தனமான அதேநேரம், யதார்த்தமான நாயகராக யாருடா மகேஷ் சந்திப்கிஷன், சென்னை வரும் அப்பாவி முகபாவ இளைஞர்களை அப்படியே தோலுரித்துக் காட்டும் லுக்கில் வழக்கு எண் நாயகர் ஸ்ரீ, இருவரும் போட்டி போடாமல் போட்டி போட்டு நடித்திருப்பது படத்திற்கு பெரும் பலம் கூட்டுகிறது.
நாயகி கேடி பில்லா கில்லாடி ரங்கா ரெஜினாவின் குடும்பபாங்குடன் கூடிய அழகிய முகமும், இயல்பான நடிப்பும், டீம் லீடராக அவரது பாத்திரமும் கச்சிதம்.
சார்லி, முனிஷ்காந்த் ராம்தாஸ், மதுசூதனன்... மூவரது பாத்திர படைப்புகளும் அவர்களது பங்களிப்பும் கூட செம சுவாரஸ்யம். அதிலும் புதிதாக பிள்ளை கடத்த களம் இறங்கும் முனிஷ் செம.
அன்பறிவ்வின் சண்டை பயற்சியும் அசத்தல்.
ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.எஸ்.கே, படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ் ஆகியோரின் பணியும், அவர் அவரது பணியில் அவர்களது புதிய பாணியும் கிளாஸ்.
"இரவு வேட்டையாடுதே...", "ஏண்டி உன்ன பிடிக்குது...." உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் "மாயா" பட இசையாளர் ஜாவிட்ரியாஸ் இசையில் மாஸ்.
"மாயா" பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் எழுத்து, இயக்கத்தில் "எல்லோரும் இந்த ஊரை திட்டு வாங்க... ஆனா இந்த ஊரை விட்டு போக மாட்டாங்க...", "நாம கேட்டா தான் நமக்கு நடக்கும் போது நாலு பேர் கேட்பாங்க..." என்பது உள்ளிட்ட பவர்புல் டயலாக்குகள், அழகிய காதல், அசத்தல் சென்டிமென்ட், அதிரடி ஆக்ஷன், செம த்ரில் என எல்லா விதத்திலும் ஜனரஞ்சகமாக படம் பிடிக்கப்பட்டு, சென்னை மாநகரை முற்றிலும் புதிய நான்கைந்து கோணங்களில், அசத்தலாக காட்டியிருப்பதோடு, நான்கைந்து வெவ்வேறு வாழ்க்கையை கொண்ட மனிதர்கள், அவர்கள் ஒரே நாளில் சந்திக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றை கடைசியில் ஒரே புள்ளியில் இனைத்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமாக அசத்தலாக ஜெயித்திருக்கிறது "மாநகரம்".
ஆகவே, ரசிகனுக்கு "மாநகரம் - மகா சொர்க்கம்!"