நடிகர்கள் : திலீப், நிகிலா விமல்
டைரக்சன் : ஸ்ரீபாலா கே.மேனன்
'பெங்களூர் டேய்ஸ்' படத்தை இயக்கிய அஞ்சலி மேனனை தொடர்ந்து இன்னொரு பெண் இயக்குனராக அறிமுகமாகும் ஸ்ரீபாலா மேனன் இயக்கியுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.. எதிர்பார்ப்பை ஈடுகட்டியுள்ளதா..? பார்க்கலாம்.
டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பவர் திலீப். அதுமட்டுமல்ல 10 மணி ஸ்பெஷல் என்கிற விவாத மேடை நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் கூட. இந்த சேனலின் எடிட்டர் சீனிவாசன். இந்நிலையில் புதிய செய்தி வாசிப்பாளராக வேலையில் சேர்கிறார் புதுமுகம் நிகிலா விமல். சில பல ஜாலியான ராக்கிங்குகளுக்கு பிறகு நட்பாகி காதலாகிறார்கள் திலீப்பும் நிகிலாவும்.
திருவனந்தபுரம் அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து எர்ணாகுளத்திற்கு வேலைக்கு வந்துள்ள நிகிலா, கணவனை இழந்த, தனியாக தங்கியிருக்கும் டாக்டரான சுகாசினியின் வீட்டில் அவருக்கு துணையாக தங்குகிறார். இதனால் சுகாசினியின் தனிமை மறைந்தாலும் வாழ்க்கையில் வெறுமை சூழ்கிறது. அந்த நேரத்தில் அவரது முன்னாள் காதலர் சதீஷ் பல வருடங்களுக்கு பிறகு சுகாசினியை தேடிவர, இருவரும் தங்களது காதலை புதுப்பிக்கின்றனர். ஆந்திராவில் உள்ள கிராமம் ஒன்றில் உருவாகியிருக்கும் இலவச மருத்துவமனையை கவனித்துக்கொண்டு மீண்டும் புதுவாழ்க்கை வாழ இருவரும் கிளம்புகின்றனர்.
இந்தநிலையில் திலீப்பும், நிகிலாவும் இணைந்து அரசியல் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி ஒன்றை சூட் செய்து ஒளிபரப்புகிறார்கள்.. இதனால் இதை ஒளிபரப்ப அனுமதித்ததற்காக சீனிவாசனின் எடிட்டர் பதவி பறிக்கப்பட்டு டம்மியக்கப்படுகிறார். புதிய எடிட்டர் வரவால் பலர் வேலையை விட்டு தூக்கப்படுகிறார்கள்.. சிலர் தாமாகவே கிளம்புகிறார்கள்.
திலீப்பும் பிரான்ஸ் சென்று வெப்சைட் பிசினஸ் தொடங்கலாம் என நிகிலாவையும் அழைக்கிறார். ஆனால் நிகிலாவோ, மீடியாவில் பணியாற்ற வேண்டும், தனியாக கிராமத்தில் இருக்கும் தனது அம்மாவை விட்டு வரமுடியாது என்று மறுக்கிறார்.. இந்த ஈகோவால் இருவருக்கும் பேச்சுவார்த்தை நிற்க, திலீப் பிரான்ஸ் கிளம்பி போகிறார். நிகிலா புதிய சேனலின் இண்டர்வியூவிற்காக பெங்களூர் கிளம்புகிறார்.. இருவரின் ஈகோ உடைந்ததா..? காதல் வெற்றி பெற்றதா என்பது க்ளைமாக்ஸ்..
சேனலின் முக்கிய தொகுப்பாளராக திலீப் கனகச்சிதமாக பொருந்துகிறார். கதாநாயகி நிகிலாவுடன் அவர் அடிக்கும் குறும்புகளில் இளமை துள்ளுகிறது. கடைசியில் தான் எடுக்கும் முடிவுக்கு உடன்படும்படி நாயகியை நிர்ப்பந்திப்பதும், அதற்கு நாயகி மறுப்பதால் அவருடன் பிணங்குவதும் தான் அவரது கதாபாத்திரத்தின் மீது கொஞ்சம் மரியாதை குறைவை ஏற்படுத்துகிறது.
கதாநாயகி நிகிலா விமல், மலையாள நடிகைகள் காவ்யா மாதவனையும் ரோமாவையும் மிக்ஸ் பண்ணினால் ஒரு உருவம் கிடைக்கும் அல்லவா..? அதேபோல அழகு கொஞ்சுகிறது முகத்தில்.. பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. இவர் வரும் காட்சிகளில் எல்லாம் அலுப்புத்தட்டாமல் பார்க்கவைப்பது இவரது முகம் தான். நடிப்பும் நன்றாகவே இருக்கிறது. அதிலும் சொந்த கிராமத்து பாஷையை அப்பாவித்தனமாக பேசி ராக்கிங்கில் சிக்குவது பரிதாபம் ப்ளஸ் கலாட்டா.
ஒரு சேனல் எடிட்டராக பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் சீனிவாசன். குறிப்பாக தனது பதவி டம்மியாக்கப்ப்படும்போது, அடுத்த சேனலுக்கு தாவுவதற்காக இவர் வகுக்கும் ராஜதந்திரம் பலே.. படத்தில் இன்னொரு காதல் ஜோடியும் உள்ளது.. ஆனால் கொஞ்சம் வயதான ஜோடி.. சுகாசினியும் அறுபது வயதான தலை நரைத்த சதீஷ்குமாரும் தான் அது. இவர்களது காதல் இடைச்செருகலாய் வருவதால் அலுப்பு தட்டுவதும் உண்மை. அதனால் திலீப்-நிகிலா காதலில் சுவராஸ்யம் குறைவதும் உண்மை. க்ளைமாக்ஸில் சுகாசினியுடன் அனைத்தையும் விட்டுவிட்டு கிளம்பும்போது அந்த பெரியவர் சபாஷ் சொல்ல வைக்கிறார்.
படம் முழுவதுமே ஒரு சேனல் ஒன்றுக்குள் நடைபெறுவதால் நாமும் அந்த சேனலில் தான் வேலை பார்க்கிறோமோ என்கிற உணர்வு நம்மையும் தொற்றிக்கொள்கிறது. இடைவேளை வரை ஜாலியாக, கலகலப்பாக ஆனால் எந்தவித திருப்பங்களும் இல்லாமல் செல்லும் படம், இடைவேளைக்கு பின்னரும் கூட சுவராஸ்யம் கூட்ட தவறி விடுகிறது..
அதையும் மீறி சில காட்சிகள் படத்துக்கு சுவராஸ்யம் கூட்டினாலும் அழுத்தமான கதையும், அதை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் திரைக்கதையும் இல்லாததால் படம் பல இடங்களில் தடுமாறுகிறது. சேனல் சம்பந்தப்பட்ட காட்சிகள் தொடர்ந்து இடம் பிடிப்பதை இயக்குனர் ஸ்ரீபாலா மேனன் தவிர்த்திருக்கலாம். திரைக்கதை அமைப்பிலும் கதை உருவாக்கத்திலும் இவர் இன்னும் வெகுதூரம் போகவேண்டும். பெண் இயக்குனர்கள் எல்லோருமே அஞ்சலி மேனன் ஆகிவிடமுடியாது என்பதுதான் படம் சொல்லும் சேதி.