தினமலர் விமர்சனம்
மணிரத்னம் தனது பழைய ஃபார்மில் இயக்கி இருக்கும் அலைபாயுதே டைப் அசத்தல், காதல் கதை தான் "ஓ காதல் கண்மணி" படமும்!. தாலி கட்டாமல் ஒரு இளைஞனும், இளைஞியும் இணைந்து வாழும் "லிவிங் டுகெதர்" வாழ்க்கை நிஜத்தில் சாத்தியமாகாது என்பதை சத்தியம் அடித்து சொல்லாத குறையாக இன்றைய இளைய சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ரியலாக, ரீலில் சொல்லியிருப்பதற்காக மணிரத்னத்தின் "ஓ காதல் கண்மணி"யை பார்க்கலாம், பாராட்டலாம்...
கதைப்படி., விதவிதமான வீடியோகேம்ஸ் சாஃப்ட்வேர்கள் உருவாக்கி அமெரிக்கா சென்று கோடீஸ்வரனாகத் துடிக்கும் நாயகர் ஆதி எனும் துல்கர் சல்மானும்., பிரபல கட்டிடகலை நிபுணராகி பாரீஸில் செட்டில் ஆகும் கனவுடன் வாழும் கதாநாயகி தாரா எனும் நித்யாமேனனும் உத்தியோக நிமித்தம் மும்பையில் வாழும் தமிழ் யுவன், யுவதி!.
கண்டவுடன் காதல் கொள்ளும் இருவரும் கல்யாணம், குழந்தை, குட்டி, குடும்ப சண்டை, சச்சரவு....என யூசுவலாக எல்லோரும் போல் வாழ பிடிக்காமல் லிவிங் டுகெதர் ஸ்டைலில் "இங்கு மும்பையில் இருக்கும் வரை சேர்ந்திருப்போம்...சேர்ந்து உண்போம், உறங்குவோம்...உறங்காது கிறங்குவோம், காமத்திலும் களிப்புற்று இறங்குவோம்...அதன்பின் உன்வழியில் நீ போ...என் வழியில் நான் போகிறேன்..." என்று எழுதப்படாத ஒப்பந்தத்துடன் துல்கரின் உடன்பிறந்த அண்ணனின் முன்னாள் அலுவலக சீனியர் கணபதி எனும் பிரகாஷ்ராஜின் மும்பை வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக ஒரே அறையில் ஒரு படுக்கையில் உண்டு உறங்கி ஒருத்தரை ஒருத்தர் கண்டு கிறங்கி காமத்தில் களிப்புற்று வாழ்கி்ன்றனர். அதேநேரம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பிரகாஷ்ராஜ்., தன் நினைவு தப்பிய நிலைக்கு தள்ளப்பட்ட, ஒருவித நோயால் பாதிக்கப்பட்ட மனைவி பவானி எனும் லீலா சாம்சன் மீது காட்டும் காதலையும், பாசத்தையும் பார்த்து நெக்குருகுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் எதிர்பார்த்த யு.எஸ்., பாரீஸ் வாழ்க்கை இருவரையும் தேடி எதிர்பார்த்தபடியே வந்துசேர்கிறது. கிடைத்த வாழ்க்கையை பிடித்துக்கொண்டு திட்டமிட்டபடியே இருவரும் பிரிந்து சென்றனரா? அல்லது ஒருத்தருக்கொடுத்தர் விட்டுக்கொடுத்து வாழும் கணபதி - பிரகாஷ்ராஜ், பவானி - லீலா சாம்சன் மாதிரி ஆதர்ஷ தம்பதிகள் ஆயினரா...? அர்த்தபுஷ்டியுடன் வாழ்ந்தனரா..? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறது ஓ காதல் கண்மணி படத்தின் மீதிக்கதை!
ஆதியாக துல்கர் சல்மான், அப்பா மம்முட்டிக்கும் சேர்த்து சிரித்தபடி நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். முந்தைய படமான வாய் மூடி பேசவும் படத்தின் தோல்விக்கும் சேர்த்து இந்த படத்தில் தன் வெற்றிக்கணக்கை தொடங்கி இருக்கிறார் துல்கர்... என்று தான் சொல்ல வேண்டும்! இரயிலில் விழுந்து சாகத்துணியும் நித்யாவை முதல் காட்சியிலேயே குரல் கொடுத்து காப்பாற்றுவதில் தொடங்கி சர்ச்சில், செய்கையாலேயே பேசி நித்யாவின் செல்ஃபோன் எண்ணை வாங்குவது., பிரகாஷ் ராஜ் - பவானி லீலாவின் கைமாறு கருதாத முதிர்ந்த காதலை பார்த்து உருகுவது ...உள்ளிட்ட ஒவ்வொரு சீனிலும் மிளிர்ந்திருக்கிறார் துல்கர்! கீப் இட் அப்!!
தாராவாக, அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக பெரிய ஆர்க்கிடெட் ஆக , பாரீஸ் கனவுகளுடன் வரும் நித்யாமேனன் "செம"த்தய்யா...என ரசிகர்களை கூச்சலிட வைக்கிறார். அதிலும் துல்கர் சல்மானுடன் அவர் வரும் அந்த படுக்கையறை காட்சியில் முகத்தை மட்டும் காட்டி முழுதும் பார்த்த திருப்தியை ரசிகனுக்கு தருவதில் நித்யாவையும் தாண்டி இயக்குநர் மணிரத்னம் ஜொலிக்கிறார் பலே, பலே!!
வயதான மும்பைவாசியாக நினைவு தப்பிய மனைவி மீது பரிவையும், பாசத்தையும் கொட்டும் கணபதியாக பிரகாஷ்ராஜைத் தவிர வேறுயாரால் அந்த பாத்திரத்தை இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியும்? நிச்சயமாக முடியாது...!பிரகாஷ்ராஜ்க்கு சிறந்த துணை நட்சத்திரத்திற்கான தேசிய விருது, இந்த பாத்திரத்திற்காக நிச்சயம் உறுதி! எழுதிவைத்துக்கொள்ளுங்கள்!! பவானியாக, நினைவு தப்பிய நோயால் பீடிக்கப்பட்ட வயசான பெண்ணாக வரும் லீலா சாம்சனுக்கும் விருதுகள் நிச்சயம்! தாராவின் காஸ்ட்லி அம்மா, துல்கரின் தோழி தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டவர்களும் கச்சிதம்!
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வைரமுத்துவின் சினாமிகா நீ பாடும் கவிதை அனாமிகா..., புத்தம்புது வேளை... உள்ளிட்ட பாடல்கள் சொக்கவைக்கும் சுப ராகங்கள்!.
பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர்பிரசாத்தின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகளுடன், மணிரத்னத்தின் எழுத்து, இயக்கத்தில் முதல் காட்சியில், ஹீரோ துல்கர் இறங்கி வரும் ரயிலில் முதல் பெட்டியிலேயே, ரிசர்வேசன் சார்ட் ஒட்டப்பட்டிருப்பது ( எல்லா இந்திய ரயில்களிலும் இஞ்ஜினையடுத்த முதல் பெட்டி முன்பதிவு இல்லாத பெட்டியாக்கும்...) உள்ளிட்ட உப்பு சப்பு பெறாத ஒருசில குறைகளைத்தவிர வேறு குறைகளே இல்லாது., "தாலி இல்லாது தாம்பத்திய வாழ்க்கை நடத்தலாம் ..." எனும் கருத்துடைய சில தலைவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சைலன்ட்டாக சம்மட்டி அடி கொடுத்திருக்கும் நிறைவான ஓ காதல் கண்மணி - ஓ.கே.கண்மணி!!