தினமலர் விமர்சனம்
சின்னத்திரை நடிகர் தீபக்கும், இயக்குநர் எஸ்.என்.சக்திவேலும் பெரிய திரைக்கு படையெடுத்திருக்கும் படம் தான் "இவனுக்கு தண்ணில கண்டம்".
சேலத்தில் லோக்கல் கேபிள் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலைபார்க்கும் இளைஞரான சரவணன் எனும் ஹீரோ தீபக்., தன் திறமையாலும், நண்பர்கள் உதவியாலும் சென்னையில் பெரிய டி.வி. சேனலில் தொகுப்பாளனாகிறார். ஆனால், டம்மி நிகழ்ச்சிகளையும், அர்த்த ராத்திரியில் ரிளே ஆகும் அந்த மாதிரி நிகழ்ச்சிகளையுமே தொடர்ந்து தொகுக்கும் வாய்ப்புகளே அவனுக்கு வழங்கப்படுவதால் வெக்ஸாகிறார். மேலும் தன் இந்த நிலைக்கு காரணம்., சக நிகழ்ச்சி தொகுப்பாளன் ஒருவன் தான்..என்பதை கண்டுபிடித்து கடுப்பும் ஆகிறார்.
இச்சமயத்தில் ஊரில் வசதியான வீட்டுப்பெண்ணுடன், ஹீரோவுக்கு திருமணம் பேசப்படுகிறது. அந்த பெண்ணை கட்டிக்கொண்டு சொந்தமாக ஒரு டி.வி. சேனலையே ஆரம்பித்து அசத்தலாம்..என ஊருக்கு கிளம்பும் சரவணன் - தீபக்., கல்யாண செலவுக்காக, கந்துவட்டி பார்ட்டி சூடு பாஸ்கரிடம் ஐந்து லட்சம் பணத்தை, வட்டிக்கு வாங்கி கிளம்புகிறார். கல்யாணத்தன்று அந்த பணக்கார வீட்டுப்பெண், வேறு ஒருத்தருடன் ஓடிப்போக திருமணம் தடைபடுகிறது. விரக்தியுடன் சென்னை திரும்பும் சரவணன் - தீபக்கை பேருந்தில் உடன் பயணிக்கு தீபிகா எனும் நாயகி நேகா தேற்றுகிறார். அடுத்தடுத்த சந்திப்புகளில் பேருந்து நட்பு காதலாகிறது!.
இந்நிலையில், தீபக்கிற்கு தொல்லை கொடுத்து வந்த கந்துவட்டி சூடு பாஸ்கரும், போட்டி நிகழ்ச்சி தொகுப்பாளனும் எதிர்பாராமல் மரணத்தை தழுவ., அந்த கொலைகளுக்கு தான் காரணம் என குற்றம் சாட்டி விடுவார்களோ? என பயந்துகொண்டிருக்கும் வேளையில் சரவணன் - தீபக்கிற்கு ஒரு ஃபோன் கால் வருகிறது. அதில் நீ...சொன்ன மாதிரியே அவர்களை கொலை செய்துவிட்டேன்...என்று எதிராளி பேசுகிறான். இதில் மேலும் பயங்கொள்ளும் தீபக்கிற்கு அந்த மர்ம கொலையாளியின் கொலைப்பட்டியலில் அடுத்து தன் காதலி இருப்பதும் தெரியவருகிறது.
மேற்படி இருவரது கொலையிலும், கொலைப்பழி தன் மேல் விழாமலும்., தன் காதலி தீபிகா - நேகா கொலை செய்யப்படாமலும் எப்படி? ஹீரோ தீபக்., தன் காதலியையும் காப்பாற்றி தானும் தப்பிக்கிறார்? எனும் வித்தியாசமும், விறுவிறுப்புமான கதைக்கு விடை சொல்கிறது இவனுக்கு தண்ணில கண்டம் படத்தின் மீதிக்கதை!...
சரவணனாக ஹீரோவாக தீபக் நன்றாக நடித்திருக்கிறார். வள வள...என பேசுவதை குறைத்தால், பெரிய திரையிலும் பெரிதாக வலம் வரலாம்.
தீபிகாவாக, அறிமுக நாயகி நேகா, ஓஹோ இல்லை என்றாலும்., ஆஹா சொல்ல வைக்கிறார். நடிப்பிலும், இளமை துடிப்பிலும் நான் கடவுள் ராஜேந்திரன், குமரவேல், சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், சுவாமிநாதன், டி.எம்.கார்த்திக், டான்ஸ் சாண்டி, மோசஸ், பாக்யா ஆறுமுகம், ஆர்.பாண்டியராஜன், சுப்பு பஞ்சு, கானா பாலா, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தில் நாயகன், நாயகியையும் தாண்டி இப்படத்தில்ர ரசிகர்களை கவர்வது கூலிக்கு கொலை செய்யும் மார்க்காக வரும் நான் கடவுள் ராஜேந்திரன் தான். முன்பாதி படத்தை காட்டிலும் பின்பாதி படத்தை பிரமாதமாக எடுத்து சொல்வது ராஜேந்திரனின் காமெடி வில்லத்தனங்கள் தான் என்றால் மிகையல்ல!
ஒய். கார்த்திக்கின் வசன வரிகள், ஆர்.வெங்கடேசனின் ஒளிப்பதிவு, ஏ7 பேண்டின் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள், நான் கடவுள் ராஜேந்திரனின் நடிப்பு மாதிரியே, எஸ்.என். சக்திவேலின் எழுத்து, இயக்கத்திற்கு பக்கபலமாக இருந்து இவனுக்கு தண்ணில கண்டம் படத்தை பல கண்டங்களில் இருந்து காப்பாற்றி இருக்கின்றன!.
மொத்தத்தில், இவனுக்கு தண்ணில கண்டம் - காமெடி தாண்டவம்!....