தினமலர் விமர்சனம் » காசேதான் கடவுளடா
தினமலர் விமர்சனம்
நான்கு ஜேப்படி, வழிப்பறி, பிக்பாக்கெட் திருடர்கள், அவர்கள் வசிக்கும் காலனியை, அந்த இடத்தின் உரிமையாளர் காலி செய்ய வலியுறுத்துகிறார். ஏரியாவாசிகளுடன் அதற்கு நோ செல்லும் இந்த நால்வரும், அந்த காலனியை காப்பாற்றி கைப்பற்றி ஏரியாவாசிகளுக்கே சொந்தமாக்க முடிவு செய்கின்றனர். அதற்கு நான்கு கோடி ரூபாய் தேவை எனும் நிலையில், ஜேப்படி, வழிப்பறியை நிறுத்திவிட்டு, பெரிய அளவில் ஒரு வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். திட்டமிட்டபடி ஒரு வங்கியில் கொள்ளை அடித்து ரூ.4 கோடி பணத்தை ஒரு இடத்தில் புதைக்கின்றனர். அப்படி புதைத்த பணம் திரும்ப கிடைப்பதில் தான் சிக்கல்! அந்த சிக்கலை முறியடித்து காலனியை கைப்பற்றினார்களா...? இல்லையா...? என்பது க்ளைமாக்ஸ்! இது தான் "காசேதான் கடவுளடா" படத்தின் மொத்த கதை, களம், கரு எல்லாம்!
இந்த கதையை ரசிகர்களின் காதில் எவ்வளவு பூ சுற்ற முடியுமோ அவ்வளவு சுற்றி வளைத்து, காமெடியை மட்டுமே கருத்தில் கொண்டு படமாக்கி இருக்கிறார் இயக்குநர் திருமலை. கருணாஸின் இசை, சேவிலோராஜாவின் ஒளிப்பதிவு, புதியவர் ஷரனின் நடிப்பு, காம்னா ஜெத்மாலனி, கருணாஸ், பாண்டியராஜன், திவ்யா, சத்யன், டெல்லி கணேஷ், சிங்கமுத்து, சிங்கம் புலி, மயில்சாமி, பாண்டு, மீரா கிருஷ்ணன், பாபிலோனா என எல்லோரும் நடித்திருக்கிறார்கள். எல்லாமும் இருக்கிறது... ஆனால் பின் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு முன்பாதியில் இல்லாதது பலவீனம்.கருணாஸின் இசையும், காமெடியுமே பலம்!
மொத்தத்தில் "காசேதான் கடவுளடா", "காமெடி படமடா!" "கடிபப்படமடா!!"
------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
காமெடிதான் ஹீரோ என்ற முடிவோடு எடுக்கப்பட்ட திருடன் - போலீஸ் கதை "காசேதான் கடவுளடா".
தெலுங்கில் வந்த ப்ளேடு பாப்ஜியின் ரீமேக். சில்லறைத் திருட்டுச் செய்யும் நான்கு நண்பர்களுக்கு திடீரென நான்கு கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி. அதற்காக அவர்கள் ஒரு வங்கியல் கொள்ளையடிக்கும் பணம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிக்கிக்கொள்ள, பணத்தைத் கைப்பற்ற நடக்கிற "ரிலே ரேஸ்தான் "காசேதான் கடவுளடா.
திருட்டுக்கும்பலை வழிநடத்துகிற சரண் அறிமுக ஹீரோ. திருட்டு, ரொமான்ஸ், எஸ்கேப் அனைத்திலும் அநியாயத்துக்கு சுறுசுறுப்புத் தெரிகிறது. பணத்தை மீட்க சப் - இன்ஸ்பெக்டராக வேஷம் போட்டாலும் நாலு நாள் தாடி, கழுத்தில் புரளும் தலைமுடி சகிதம் அவர் வலம் வருவதை காமெடியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
சப் - இன்ஸ்பெக்டரான ஹீரோவைக் காதலிக்கும் கமிஷனர் மகளாக காம்னா. வழக்கமான கிளாமர் பொம்மை வேலையைச் செய்திருக்கிறார்.
திருட்டுக்கும்பலில் சத்யன், கருணாஸ், லொள்ளு சபா ஜீவா இருந்தும் காமெடி தர்பார் காற்று வாங்குகிறது. சிரிப்பு போலீஸாக வருகிற பாண்டியராஜன், டெல்லி கணேஷ் போன்றோருக்கும் போதிய வாய்ப்பு இல்லை. பத்திரிகைகள் மூட்டை கட்டிவிட்ட போலீஸ் ஸ்டேஷன் ஜோக்குகளை வைத்துக் கொண்டு இவர்கள் சமாளிக்க வேண்டிய நிலைமை. வங்கிக் கொள்ளைக்கு திட்டம் மட்டும் போட்டுவிட்டு படாத பாடு படுகிற சிங்கமுத்து, திருடர்களிடமிருந்தே பணத்தைத் திருடிவிட்டு கடைசியில் கோட்டை விடுகிற மயில்சாமி ஆகியோர் மட்டும் எடுபடுகிறார்கள்.
முழு நீள காமெடிப் படத்துக்கான அத்தனை வாய்ப்புகள் இருந்தும், பிரியாணியில் சிக்கன் பீஸைத் தேடுவது போல காமெடியைத் தேட வைத்துவிட்டார் இயக்குநர் திருமலை.
காசேதான் கடவுளடா - காமெடிக்குப் பஞ்சமடா!