தினமலர் விமர்சனம் » மதிகெட்டான் சாலை
தினமலர் விமர்சனம்
"களவாணி", "முதல்இடம்", பாணியில் தஞ்சாவூர் பகுதியை கதைக்களமாக கொண்ட மற்றுமொரு படம்தான் "மதிகெட்டான் சாலை". ஆனால், இதில் காதல் மட்டும் இல்லை... காதலால் மதிகெட்டவனின் கதையும் புகுத்தப்பட்டிருப்பது புதுமை!!
வீட்டுக்கு அடங்காமல், வேலை வெட்டிஇல்லாமல், வீரமும், விளையாட்டுத்தனமாகவும் திரியும் நான்கு இளைஞர்களும், அவர்களுக்கு அடைக்கலம் தரும் ஒருகுடும்பமும் தான் "மதிகெட்டான் சாலை" படத்தின் கதைக்களம். நான்கு இளைஞர்களில் ஒருத்தனுக்கு, சின்ன வயதில் இருந்தே தங்களுக்கு அடைக்கலம் தரும் அந்த குடும்பத்தின் பெண் மீது காதல் வருகிறது. அந்த காதலால் தன் நண்பர்களையும், அந்த குடும்பத்தையும் பகைத்துக் கொண்டு பிரிந்து செல்லும் இளைஞன், சேரக்கூடாத இடத்தில் எல்லாம் சேர்ந்து சீரழிவது தான் "மதிகெட்டான் சாலை" மொத்த படமும்! அப்படி சீரழிந்த இளைஞன், படத்தின் நாயகன், இறுதியில் ஒருதலை காதலில் ஜெயித்தானா...? அல்லது காதலி முன் செத்து ஒழிந்தானா...? என்பது பரபரப்பான க்ளைமாக்ஸில் வித்தயாசமும், விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருப்பது புதுமை!
கதைநாயகனாக ஆதர்ஷ் எனும் புதுமுகம் நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார். நடிப்பை விட ஆதர்ஷூக்கு பாட்டும், ஃபைட்டும் பக்காவாக வருகிறது. கதாநாயகி திவ்யா நாகேஷ் இன்னமும் குழந்தை நட்சத்திரமாகவே தெரிவது மைனஸ்!
ஸோலோ காமெடியில் சிங்கமுத்து இளம் மனைவியை இளைஞர்களிடமிருந்து காபந்து செய்யபடும்பாடு செம சிரிப்பு! வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், நரேன், சந்தீப், தமிழ், கிருஷ்ணகுமார், லாவண்யா, ஈரோடு கோபால், சேதுபாரதி, வில்லன் அறிவு, மதன் உள்ளிட்டவர்களும் பளிச் தேர்வு! எஸ்.தாஸின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் இசையும் படத்தின் பெரும் பலம்!
மொத்தத்தில் ஜி.பட்டுராஜனின் எழுத்து-இயக்கத்தில் "மதிகெட்டான் சாலை", ரசிகர்களின் "மதிமயக்கும் சோலை!"