தினமலர் விமர்சனம்
இராமயணத்தை எழுதிய வால்மீகி அதற்கு முன் திருட்டு தொழில் செய்து வந்ததால்., அதே தொழிலை செய்யும் கதாநாயகரையும், அவர் கூட்டாளிகளையும் பற்றிய கதை என்பதால் இந்த படத்திற்கு வால்மீகி என பெயர் சூட்டியிருக்கிறார்கள் பொருத்தமாக! அந்த வால்மீகி திருந்தி இராமாயணம் படைத்தார். இந்த வால்மீகி திருந்தி பிக்பாக்கெட், ஜேப்படி, ராப்பரி, வழிப்பறி இத்யாதி... இத்யாதி.. திருடர்களை திருத்தி நல்வழிப்படுத்தும் புதிய இராமயணம் படைத்திருக்கிறார்.
கதைப்படி பிக்பாக்கெட் பேர்வழி ஹீரோ அகில். அவரை நல்லவராக கருதும் ஹீரோயின் மீரா நந்தன் அகில் மீது காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அகில் திருடரென்று தெரிய வர... திருட்டால் பிறருக்கு ஏற்படும் தீமைகளை விளக்கி, அவரை திருத்த முற்படுகிறார் மீரா. ஒரு பக்கம் இந்த இருவரின் காதல் என்றால்... மற்றொரு பக்கம் அகிலுக்கு அடைக்கலம் கொடுக்கும் இன்னொரு நாயகி தேவிகாவிற்கும் அகில் மீது காதல்! ஆனால் அது ஒரு தலைக்காதல்! இதில் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் யார் காதலை ஜெயிக்க வைத்தது? யாரை தோற்க வைத்தது? மீரா திருத்தினாரா? அகில் வருந்தினாரா? என்பதை சூடாகவும், சுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள் மீதிக் கதையில்!!
கல்லூரி நாயகனாக முதல் படத்தில் பொருந்தாமல் நடித்த அகில், வால்மீகியில் பிக்பாக்கெட் ஆசாமியாக கேரக்டரை பிக்கப் செய்து கொண்டு சபாஷ் வாங்கி விடுகிறார். கதாநாயகியர் மீராநந்தன், தேவிகா இருவருமே புதுமுகம் என சொல்ல முடியாத அளவிற்கு பழகிய முகமாக பாவனை செய்திருக்கிறார்கள். சில இடங்களில் முதல் நாயகி மீராவை தேவிகா தூக்கி சாப்பிட்டு விடுகிறார் என்றாலும் மிகையல்ல..! இந்த மூனர் மாதிரியே அஜய், படவா கோபி, கராத்தே வெங்கடேசன் உள்ளிட்டவர்களும் பாத்திரத்திற்கு ஏற்ற பளீச் தேர்வு!
பிக்பாக்கெட் , ஜேப்படி திருடர்களின் வாழ்க்கையை சொல்வதாக படத்தை ஆரம்பித்து, அவர்கள் பார்த்தாலும் திருந்தும்படி கதையையும், கதையில் இடம்பெறும் காதலையும் நகர்த்தியிருக்கும் இயக்குனர் ஜி.அனந்தநாராயணன் கெட்டிக்காரர்தான். ஆனால் காதல், கழுத்து சங்கிலி என கதை பயணிக்கும்போது, அடுத்து காட்ட நிறைய விஷயம் இருந்தும் என்ன செய்வது? எனத்தெரியாமல் பாடல் காட்சிகளை காட்டி பரிதவிக்க விட்டிருப்பது பரிதாபம்!
எப்படி பார்த்தாலும் ஆறாயிரம் ரூபாய் பணத்திற்காகவும், பத்து பவுன் நகைக்காகவும் கொள்ளையர்களிடம் தன் குடும்பத்தையே சின்ன வயதில் பறிகொடுக்கும் கதாநாயகி மீராவும், அவர் சம்பந்தப்பட்ட பிளாஷ் பேக்கிற்காகவும் டைரக்டர் அனந்த நாராயணனுக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்!
திருட்டுக்கும், ஜேப்படிக்கும், வழிப்பறிக்கும் பின் பொருளை பறிகொடுத்தவர்களின் நிலையை ஒவ்வொரு திருடர்களும் உணர்ந்தால் திருட்டு, களவு எனும் கதையே இருக்காது என்ற உண்மையை உரக்கச் சொல்லி இருக்கும் இயக்குனருக்கு ஒளிப்பதிவாளர் என்.அழகப்பன் எழுபத்தைந்து சதவீதம் உதவியிருக்கிறார் என்றால் இசையமைப்பாளர் இளையராஜாவின் நூறு சதவிகிதம் உறுதுணையாக இருந்திருக்கிறார். காமெடியும், கவர்ச்சியும், கமர்ஷியல் அயிட்டங்களும் இல்லாத வால்மீகி படத்தை இளையராஜாவின் இசையே தூக்கி நிறுத்துகிறது.
விகடன் டாக்கீஸ் வால்மீகி படத்தை எடுத்து கலாச்சார காவலனாக உயர்ந்து நிற்கிறது என்றே சொல்ல வேண்டும்!
வால்மீகி : திரையரங்குகளில் வாழ வேண்டிய நல்யோகி!
-----------------------------------
விகடன் விமர்சனம்
----------------------------------
குமுதம் விமர்சனம்
அழகான ஹீரோயின் திருத்தி, திருட்டு ஹீரோ திருந்துகிற வால்மீகி காலத்து கதைதான். ஆனால் ஒவ்வொரு மோசடிக்குப் பின்னாலும் ஒளிந்திருக்கும் யாரோ ஒருவருடைய வேதனைகளை சூடு போட்டது போல அழுத்தமாய் சொல்ல முயன்றிருப்பதில்தான் "வால்மீகி' வித்தியாசப்படுகிறான்.
சிட்டி பஸ் கூட்டத்தில் பிளேடு போடுகிற 420 கேரக்டர் "கல்லூரி' அகிலுக்கு பொருந்துகிறது சில சமயங்களில் மட்டும். திருடினாலும் திருந்தினாலும், அவரது பாடி லாங்வேஜில் ஒட்டிக்கொண்டே இருக்கும் தயக்கம் வெளிப்படையாய் தெரிகிற மைனஸ். கேரளத்து வரவான மீரா நந்தன் திருடனிடமும், பைத்தியத்திடமும் மனிதனைப் பார்க்கிற பாஸிட்டிவ் பொண்ணு கேரக்டருக்கு செம பொருத்தம். ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய அகிலை மீரா அடுத்த சில காட்சிகளிலேயே ரொமான்ஸ் பார்வை பார்ப்பது தொட்டுத்தொடரும் சினிமாத்தனம். அகிலை ஒரு தலையாய் காதலிக்கும் கனகா கேரக்டரும் அப்படியே.
ஸ்ரீபெரும்புதூரில் திருடு போன மீராவின் பணத்தை வடசென்னையில் உள்ள ஒரு சொர்ணக்கா செல்போனில் விசாரணை நடத்தி மீட்டுத் தருகிற காட்சி, திருட்டு உலகின் நெட்வொர்க்கிற்கு பிரமிப்பூட்டுகிற பதிவு. பிக்பாக்கெட் கும்பலில் ஆண்களோடு ஆணாக அலைகிற அந்த பெண் கேரக்டர் கவனத்தை நிறையவே ஈர்க்கிறது. என்.அழகப்பனின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் யாதார்த்தம் தவறாத அழகு. திருட்டுப் பழக்கத்தை ஜாலியாய் அலசுகிற "அச்சடிச்ச காசை' பாடலிலும், அதே விஷயத்தை கூர்மையாய் நக்கல் பண்ணுகிற "என்னடா பாண்டி' பாடலிலும் பளிச்சிடுவது இளையராஜா, வாலி கூட்டணியின் சீனியாரிட்டி.
ஏதோ ஃப்ளாஷ் பேக்குக்கு கூட்டிச் செல்லும் இசையோடு அகிலை ஒரு என்.ஜி.ஓ. நபராக அறிமுகப்படுத்தும் ஆரம்பக்காட்சியிலேயே வால்மீகியின் முழு வாழ்க்கையும் தெரிந்துவிடுவதுதான் படத்தின் பெரும் பலவீனம்.
குத்துப் பாடல்கள், அடிதடிகள், இரட்டை அர்த்த வசனங்கள் ஏதுமின்றி குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை எடுத்திருக்கிறார் அறிமுக டைரக்டர் அனந்த நாராயணன். ஆனால் குடும்பங்களை நச்சென்று தியேட்டருக்குள் இழுக்கும்படி புதிதாய் ஏதாவது சொல்லியிருந்தால் வால்மீகி வெற்றிகரமாய் ராமாயணம் எழுதியிருப்பான்.