நடிகர்கள் : ஹர்சவர்தன் கபூர், சயாமி கெர், அனுஜ் சவுத்ரி,
இயக்கம் : ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா
ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா இயக்கத்தில் ஹர்சவர்த்தன் கபூர், சயாமி கெர் நடிப்பில் வெளியாகியுள்ள முக்கோண காதல் படம் தான் ‛மிர்சியா'. இப்படம் ரசிகர்களை மெர்ச்சலாக்கியதா.... இல்லையா.... என்று இனி பார்ப்போம்...!
கதைப்படி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மொனீஷ் எனும் ஹர்சவர்தன் கபூருக்கும், சுஜித்ரா எனும் சயாமி கெருக்கும் காதல். ஒருநாள் ஆசிரியர் வீட்டு பாடம் எழுதியாச்சா என்று ஒவ்வொருவராக கேட்க மொனீஷ் எழுததால் அவன் மீதுள்ள அன்பால் தான் எழுதி வைத்த வீட்டு பாடத்தை அவனிடம் கொடுத்து, அவனை காப்பாற்றி விட்டு, தான் வீட்டு பாடம் செய்யவில்லை என்று ஆசிரியரிடம் அடி வாங்குகிறார் சுஜித்ரா. இதனால் ஆசிரியர் மீது கோபம் கொள்ளும் மொனீஷ், தன் தந்தைக்கு தெரியாமல் அவரது துப்பாக்கியை எடுத்து ஆசிரியரை சுட்டு கொன்று விடுகிறார். இதனால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார் மொனீஷ். இந்த சம்பவத்தால் உத்ய்பூரை விட்டு காலி செய்துவிட்டு ஜோத்பூர் போகிறது சுஜித்ரா குடும்பம்.
சில ஆண்டுகள் கழித்து சுஜித்ரா தன் படிப்பை எல்லாம் வெளிநாட்டில் முடித்துவிட்டு வருங்கால கணவர் ஜோத்பூர் இளவரசர் கரண் எனும் அனுஜ் சவுத்ரியை திருமணம் செய்ய வருகிறார். அதே அரண்மனையில் தான் மொனீஷ், குதிரைக்கு லாயம் அடிப்பவராக வேலை செய்கிறார். அத்துடன் சுஜித்ராவிற்கு குதிரையேற்ற பயிற்சியும் கற்று கொடுக்கிறார். தான் பயிற்சி எடுக்கும் குதிரைக்காரன் தான் தனது பள்ளிபருவத்து காதலன் மொனீஷ் என்பது தெரியாமலே பயிற்சி எடுக்கிறார் சுஜித்ரா. ஆனால் மொனீஷிற்கு, சுஜித்ராவை யார் என்று தெரியும், ஆனால் அதை வெளிக்காட்டமாலே பயிற்சி அளிக்கிறார். ஒருக்கட்டத்தில் இந்த விஷயம் சுஜித்ராவிற்கு தெரிய வருகிறது. அதன்பின்னர் என்ன நடக்கிறது, சுஜித்ரா, இளவரசன் கரணை திருமணம் செய்தாரா.?, இல்லை கரண் மற்றும் உலகத்தையே எதிர்த்து தன் காதலனான மொனீஷை கரம் பிடித்தாரா.? என்பது மிர்சியா படத்தின் சுவாரஸ்யமான மீதிக்கதை.
நடிப்பை பொறுத்தமட்டில் யாரையும் குறை சொல்லும்படி இல்லை. ஹர்சவர்தன் கபூர், சயாமி கெர், அனுஜ் சவுத்ரி, அஞ்சலி பாட்டில், ஆர்ட் மாலிக் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தாங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப ரீதியாகவும், விஷூவல் எபெக்ட்ஸ் ரீதியாகவும் தான் ஒரு கிங் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா. ஆனால் கதை, திரைக்கதை விஷயத்தை அதை முழுமையாக கோட்டை விட்டுள்ளார். படத்தின் முதற்பாதி நன்றாக இருக்கிறது. ஆனால் பிற்பாதியில் தான் சொல்ல வந்த விஷயத்தை திரைக்கதையோடு சேர்த்து குழப்பிவிட்டிருப்பது பலவீனம்.
ஆடை, அலங்காரம் எல்லாம் அருமை, ஆனால் இசையில் சுபராகம் இல்லை. ஒளிப்பதிவு ஓவியம், அந்த ஓவியம் படத்தொகுப்பில் பொருந்தவில்லை.
என்னதான் இயக்குநர் தொழில்நுட்பத்தில் தன் பிரமாண்டத்தை காட்டினாலும், அதை இயக்கத்தில் காட்ட தவறியதும், குழப்பமான திரைக்கதையும் படத்தை புரியாத புதிராகவே பிரதிபலிக்க செய்கிறது.
மொத்தத்தில், ‛‛மிர்சியா - மெர்சலாகல!''