நகப்பூச்சு, முகப்பூச்சு தொடங்கி, ஏன் இதயத்துக்கே செயற்கை மூலாம் பூசும் எந்திர வாழ்க்கை மனிதர்களிடம் இருந்து விலகி நிற்கும் கதையம்சத்துடன் உருவாகி வரும் புதிய படம் குறுநில மன்னன். இது காதலே இல்லாத படம். ர.முருகையா இப்படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார். நிஷா கென்னடி தயாரித்துள்ளார். படத்தின் நாயகனாக நடித்திருப்பவர் பிரதீப். இசையருவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இவர் நாயகனாக அறிமுகமாகிறார். படத்துக்காக கூத்துப்பட்டறையில் 2 மாதம் பயிற்சி பெற்றிருக்கிறார். நாயகியாக வித்யா என்ற சேர நாட்டு நாயகி அறிமுகமாகிறார். இவர்கள் தவிர பசங்க பட அண்ணி செந்தி முக்கிய வேடமேற்றிருக்கிறார். காரைக்குடி அருகில் உள்ள பகுதிகளில் நடக்கிற கதை. இதன் படப்பிடிப்பு காரைக்குடி, சிவகங்கையை சுற்றி 35 கி.மீ. சுற்று வட்டாரத்தில் நடைபெற்றுள்ளது.
மனதளவில் ராஜாவாக - சுற்றத்தை ஒரு ராஜ்ஜியமாக நினைத்து வாழும் ஒருவனின் கதைதான் படம். அதனால்தான் படத்தின் தலைப்பை குறுநில மன்னன் என வைத்திருக்கிறார்களாம். மருதுபாண்டியர் வாழ்ந்த மண்ணில் நடக்கும் கதை என்பதால் மருதுபாண்டியர் பற்றி ஒரு கூத்தாடும் கலைஞர் கதை சொல்வதாக ஒரு பாடல் இடம் பெறுகிறது.
மருதுபாண்டி வீரத்தோட கதையைக் கொஞ்சம் கேளுங்க
பெரிய மருது சின்ன மருது அண்ணன் தம்பி தானுங்க!
முன்னவரோ வேட்டையில் வேங்கை புலிதானுங்க
பின்னவரோ நாட்டையாளும் சூரப்புலிதானுங்க!! எனத் தொடங்கி தொடரும் பாடலை கவிஞர் நா.முத்துகுமார் எழுதியுள்ளார். படத்திற்கு இசை ஜோஹன் என்ற புதுமுகம். ஒளிப்பதிவு இராசாமதி.
குறுநில மன்னன் குறித்து டைரக்டர் முருகையா கூறுகையில், இந்த படத்தில் ஆசாபாசங்கள் உண்டு. ஆபாசமில்லை. ரத்தபாசம் புரிய வைக்கும். ரத்த வாசகம் தெரிய வைக்காது. இயல்பான காமெடி உண்டு. இயல்பு மீறும் காமநெடி இருக்காது, என்றார்.