பிரபல சின்னத்திரை நட்சத்திரமான அறந்தாங்கி நிஷா ஏர்போர்ட்டில் வைத்து தனக்கு நடந்த பாடிஷேமிங் அவமானம் குறித்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ஏர்போர்ட்டில் நிஷாவிடம் பேசிய நபர் நீங்கள் விஜய் டிவி நிஷாவா என ஆச்சரியத்துடன் பலமுறை கேட்டுள்ளார். அதற்கு நிஷா ஏன் என்ன ஆச்சு? என்று கேட்க, இவ்வளவு நாளா எப்படி ஏமாந்து போயிருக்கோம். டிவியில உங்கள கலரா காட்டுறாங்க. ஆனா, நீங்க இவ்வளவு கருப்பா இருக்கீங்க என மறுபடி மறுபடி நிஷாவின் நிறத்தை வைத்தே பேசியுள்ளார். அதற்கு அந்த சமயத்தில் கருப்பா இருப்பது ஒன்றும் அசிங்கம் இல்லை என சொல்லிவிட்டு நிஷா வந்துவிட்டார்.
அதன்பின் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'உள்ளுக்குள் அதிகம் கோவம் வந்தாலும் அதை வெளிகாட்டவில்லை. அதற்கு காரணம் உணர்வு ரீதியாக யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதற்காக தான். எவ்வளவோ வளர்ச்சி வந்தாலும் இது போன்ற மக்களின் மனநிலை இன்னும் மாறவில்லை. இவ்வளவு கேவலமான மனநிலையோடு இருப்பவர்களுடன் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' என்று வருத்தத்துடன் அந்த வீடியோவில் நிஷா பேசியிருக்கிறார்.