'கண்ணப்பா' படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்?: பட ரிலீசுக்கு சிக்கலா? | 'கருடன்' போல வரவேற்பைப் பெறுமா : தெலுங்கு ரீமேக் 'பைரவம்' | பிளாஷ்பேக்: பாகங்களை மாற்றி திரையிட்டு, வேகமெடுத்த “மெல்லத் திறந்தது கதவு” | புதிய முயற்சியில் அமீர் கான் | அல்லு அர்ஜுன் - அட்லி பட டைட்டில்கள் என உலா வரும் பெயர்கள் | சிம்பு, தனுஷ் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்: மீண்டும் உருவாகும் போட்டி | ரெட்ரோ ரிலீஸ் தேதியில் சூர்யா 46 | பிஸியான நடிகரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் படம் தயாரித்தேன்: ஜோவிகா | பவன் கல்யாண் படத்தைத் தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை : சொல்பவர் 'தில்' ராஜு |
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில், சூரி, ஐஸ்வர்ய லட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் மே 16ம் தேதி வெளியான படம் 'மாமன்'. இப்படத்திற்கான வரவேற்பு ஆரம்பத்தில் மிதமாக இருந்தாலும் போகப் போகக் கூடுதலாகியது. அதற்குரிய விதத்தில் ஊர் ஊராகச் சென்று பல விதமான புரமோஷன்களில் சூரி உள்ளிட்ட படக்குழுவினர் செய்தனர். அதன் பலனாக இப்படத்தின் வசூல் 25 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. இப்படத்திற்கான ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவையும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதால் இந்தப் படம் லாபகரமான படமாகவே அமையும் என்கிறார்கள்.
இதனிடையே, இப்படத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து சூரி, எக்ஸ் தளத்தில் “உண்மையான வெற்றி என்றால்… உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மனதார மதிப்புக் கொடுப்பதில் தான் ஆரம்பமாகிறது. அந்த நம்பிக்கையோட மாமன் கதையை நான் தொடங்கினேன். மாமன் என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களைத் தழுவிய, ஆனால் நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும் ஒரு உணர்வுப்பூர்வமான பயணம்.
இந்த உணர்வுகளை என் இயக்குனர் மிக நுட்பமாக உணர்ந்து, ஆழ்ந்த அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்போடும் எடுத்துக் கொண்டு, அதை உயிரோட்டமுள்ள திரைப்படமாக மாற்றியதற்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் பயணத்தில், ஒவ்வொரு நடிகரும் தங்களது கதாபாத்திரங்களை மனதார உணர்ந்து, உயிரோட்டமுடன் அரங்கேற்றினார்கள்.
அதேபோல், ஒளிப்பதிவு, இசை, தொகுப்பு, ஒலி, கலைத்துறை, உடை வடிவமைப்பு, நடனம், சண்டை இயக்கம், எழுத்து, தயாரிப்பு நிர்வாகம், வாகன வசதி, ஒவ்வொரு தொழில்நுட்பக் குழுவும் தங்களின் முழு அர்ப்பணிப்போடும், நம்பிக்கையோடும் பணியாற்றினர். அவர்களது அயராத உழைப்பும், நேர்த்தியும் தான் மாமன் இன்று உங்கள் இதயங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கிய காரணம்.
இன்று மாமன் திரைப்படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்திலும் ஓடிக்கொண்டு இருக்கிறது… ஆனால் ஒலிக்கிறது திரையில் மட்டும் அல்ல, நீங்கள் அளித்த அன்பிலும், பாராட்டிலும், உற்சாக புன்னகைகளிலும்… ஒவ்வொரு குடும்பத்தின் உள்ளத்திலும் அது வாழ்கிறது.
உங்கள் அன்பும், ஆதரவும் தான் எனக்கு உண்மையான வெற்றியும் மகிழ்ச்சியும். மாமன் படத்தை உங்கள் குடும்பத்தோடு இணைந்து ரசித்து, உள்ளத்தோடு ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியும், என் வாழ்த்துகளும்!.,” என்று பதிவிட்டுள்ளார்.
இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ், இயக்குனராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்த 'ப்ரூஸ் லீ' படம் தோல்வியைத் தழுவியது. அப்படம் வெளிவந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு 'மாமன்' படத்தை இயக்கி வெற்றியைப் பெற்றுள்ளார். சூரி இதற்கு முன்பு கதையின் நாயகனாக நடித்த 'விடுதலை 1, 2' படத்தில் விஜய் சேதுபதியும், 'கருடன்' படத்தில் சசிகுமார், உன்னி கிருஷ்ணன் என மற்ற ஹீரோக்களும் நடித்திருந்தனர்.
தனி கதாநாயகனாக சூரி நடித்த 'கொட்டுக்காளி' விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது, வசூலைப் பெறவில்லை. ஆனால், இந்த 'மாமன்' அந்தக் குறையைப் போக்கியிருக்கிறது. இந்தப் படத்துடன் போட்டியாக வந்த சந்தானம் நடித்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்', யோகி பாபு நடித்த 'ஜோரா கைய தட்டுங்க' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவியது. இந்த மும்முனைப் போட்டியில் சூரி முந்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.