லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த 'இந்தியன் 2' படம் தோல்வியைத் தழுவியது. இரண்டாம் பாகம் எடுத்து வந்த போதே அதை மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டார்கள். 'இந்தியன் 3' படம் இந்த வருடத்தில் வெளியாகும் என்றும் தகவல் வந்தது.
ஆனால், 'இந்தியன் 2' தோல்வியால் 'இந்தியன் 3' குறித்து பல வதந்திகள் வெளிவந்தன. படம் வரவே வராது என்றும், அப்படியே வந்தாலும் நேரடி ஓடிடி வெளியீடு என்றும் செய்திகள் வெளிவந்தது.
கடந்த வாரம் வெளியான 'எல் 2 எம்புரான்' படத்திலிருந்தும் லைகா நிறுவனம் வெளியே வந்தது. அந்தப் படத்தின் லைக்காவின் பங்குகள் அனைத்தையும் கோகுலம் நிறுவனம் பெற்றதாகச் சொன்னார்கள். அதனால், லைகா நிறுவனம் மூடப்பட உள்ளதாக கோலிவுட்டில் தகவல் பரவியது.
அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளது. 'இந்தியன் 3' படத்தை 'தக் லைப்' படத்திற்குப் பிறகு வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். அந்நிறுவனம் தயாரித்து முடித்துள்ள 'லாக்டவுன்' படத்தையும் விரைவில் வெளியிட உள்ளார்களாம். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இவற்றோடு புதிதாக இரண்டு பெரிய படங்களை தயாரிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். லைகா நிறுவனம் மூடப்படுவதாக வரும் தகவல்கள் அனைத்துமே பொய்யானவை என்கிறார்கள்.