பொற்கோவில், வாகா எல்லை, ஜிலேபி… ஆண்ட்ரியாவின் பஞ்சாப் பயணம் | 'இந்தியன் 3' திட்டமிட்டபடி வெளியாகுமா? | பிளாஷ்பேக்: “கூண்டுக்கிளி” தந்த வேதனை; “குலேபகாவலி” தந்த சாதனை | 'ராபின்ஹூட்' படத்தில் ஆஸி., கிரிக்கெட் வீரர் வார்னரின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது | 'பெருசு' மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவையா ? | நாக சைதன்யாவுடன் சேர்ந்து போட்ட 'டாட்டூ'வை அழித்துவிட்டாரா சமந்தா ? | குடித்துவிட்டு கார் ஓட்டிய இளைஞரால் பலியான பெண் ; ஜான்வி கபூர் கடும் கண்டனம் | முதல் நாள் தாக்கிவிட்டு மறுநாள் மன்னிப்பு கேட்டார் சல்மான்கான் ; நடிகர் அதி இராணி தகவல் | கடன் வாங்கி நடுத்தெருவுக்கு வந்தேன் - நீலிமா ராணி ஓப்பன் டாக் | இதயம் சீரியலிலிருந்து விலகிய கதாநாயகி |
80 காலகட்டத்தில் மனோரமா, கோவை சரளா போல காமெடியில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ். முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவருக்கு தற்போது 76 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக உடல்நலப் பிரச்னையை எதிர்கொண்டுவந்தார்.
அவருக்கு உடலில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும் நிலையில் மருத்துவ செலவு மற்றும் சாப்பாட்டு செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவர் கஷ்டப்படுவதாக பல பேட்டிகளில் பேசியிருந்தார். அவரின் நிலையை தெரிந்து கொண்ட நடிகர் விஷால், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் கேபிஒய் பாலா, நடிகை ஷகீலா உள்ளிட்டோர் பிந்து கோஷூக்கு உதவி செய்தனர்.
இந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் அவர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனை அவரது மகன்கள் உறுதிப்படுத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பிந்துகோஷ்?
பருத்த உடலும், வித்தியாசமான குரல்வளத்துடன் வசனம் பேசும் திறன் படைத்தவருமான நடிகை பிந்துகோஷ், 1953ம் ஆண்டு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள தாம்பரத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் விமலா. சிறுவயதிலேயே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த சிறுமி விமலாவிற்கு அவரது பெற்றோர்களும் துணை நின்று, நடன குருமார்களிடம் பரதம் போன்ற பாரம்பரியமிக்க நடனக் கலைகளை முறையாக கற்றுணர
பயிற்சியும் அளித்து வந்தனர். நன்றாக நாட்டியத்தில் பயிற்சி பெற்று வந்த சிறுமி விமலாவிற்கு வெள்ளித்திரையின் வெளிச்சமும் கிடைக்கப் பெற்றார்.
1960ம் ஆண்டு இயக்குநர் ஏ பீம்சிங் இயக்கத்தில், ஏ வி எம் தயாரித்து, நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான “களத்தூர் கண்ணம்மா” என்ற திரைப்படத்தில் “உன்னைக் கண்டு மயங்காத மிருகம் உண்டோ” என்ற பாடல் காட்சியில் மிருகங்கள் வேடமிட்டு நடனமாடியிருக்கும் குழந்தைகளில் ஒருவராக நடித்து தனது கலையுலக வாழ்க்கையை துவக்கினார். குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் தடம் பதித்து, பின்னர் நடன இயக்குநர் ஹீராலால் மாஸ்டரிடம் சேர்ந்து நடன நுணுக்கங்களை நன்கு கற்றுணர்ந்து, ஒரு நடனக் குழு மங்கையாக வளர்ந்து, அதன் பின்னர் நடன அமைப்பாளராக உயர்ந்து நாட்டியத்தில் முத்திரை பதித்தவர்.
இவ்வாறு படிப்படியாக கலைத்துறையில் வளர்ந்து வந்த இவர், 1970ம் ஆண்டு சிவாஜி, ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த “எங்கமாமா” என்ற திரைப்படத்தில் “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்” என்ற பாடல் காட்சியில் ஒரு குழு நடன மங்கையாக ஏ கே சோப்ரா மற்றும் தங்கப்பன் மாஸ்டர் இணைப்பில் நடனமாடியிருப்பார். 1975ம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளிவந்த “இதயக்கனி” என்ற திரைப்படத்திலும் படத்தின் ஆரம்பப் பாடலான “நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற” என்ற பாடலில் நடன மங்கைகளில் ஒருவராக நடனமாடியிருந்தார் நடிகை பிந்துகோஷ்.
மேலும் ஹீராலால் மாஸ்டர், தங்கப்பன் மாஸ்டர் போன்ற ஜாம்பவான் நடன இயக்குனர்களிடம் உதவி நடன இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கின்றார். 1982ல் இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த “மூன்றாம் பிறை” திரைப்படத்தின் ஆரம்ப பாடலான “வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட” என்ற பாடலில் நண்பர்களில் ஒருவராக அழகுற தோன்றி நடனமாடியிருப்பார்.
இதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களுக்கு உதவி நடன இயக்குநராகவும் பணிபுரிந்து வந்த நடிகை பிந்துகோஷ், சில உடல்நல பிரச்னையால் பருமனான உடலமைப்பைப் பெற்றதனால் குழு நடனங்களில் நடனமாடுவதை தவிர்த்து, தனது உடல் பருமனையே தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, தன்னைத் தேடிவந்த திரைப்பட வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு நகைச்சுவை நாயகியாக திரைத்துறையில் ஒரு நிலையான இடத்தையும் பிடித்திருந்தார்.
1982ம் ஆண்டு இயக்குநர் கங்கை அமரன் இயக்கத்தில் நடிகர் பிரபு நடித்து வெளிவந்த “கோழி கூவுது” திரைப்படத்தில்தான் விமலா என்ற இவரது இயற்பெயர் பிந்துகோஷ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து “உருவங்கள் மாறலாம்”, “டௌரி கல்யாணம்”, “சூரக்கோட்டை சிங்கக்குட்டி”, “தூங்காதே தம்பி தூங்காதே”, “ஓசை”, “அன்பே ஓடிவா”, “கொம்பேறி மூக்கன்”, “நீதியின் நிழல்”, “குடும்பம் ஒரு கோவில்”, “நவக்கிரஹ நாயகி”, “மங்கம்மா சபதம்”, “விடுதலை”, “திருமதி ஒரு வெகுமதி” என ஏராளமான திரைப்படங்களில் ஒரு நகைச்சுவை நாயகியாக வலம் வந்து தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சம் நிறைந்திருந்தார் நடிகை பிந்துகோஷ். எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என தமிழ் திரையுலகின் அனைத்து ஜாம்பவான் நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த பெருமைமிகு திரைக்கலைஞர்தான் நடிகை பிந்துகோஷ்.