பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவரும், எழுத்தாளருமான பாஸ்கர் சக்தி தற்போது 'வடக்கன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படம், தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வரும் வட இந்திய மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ளது.
கடந்த 24ம் தேதி படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 'வடக்கன்' என்ற தலைப்புக்கு தணிக்கை குழு அனுமதி தராததால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்திற்கு 'ரயில்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வட நாட்டு மக்கள் தமிழ்நாட்டுக்கு ரயிலில் அதிக அளவில் வருவதால் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் பாஸ்கர் சக்தி கூறியிருப்பதாவது: ஒரு குறிப்பிட்ட மக்களை இந்த தலைப்பு குறைத்து மதிப்பிடுவதாக தணிக்கை குழுவினர் கருதுகிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. என்றாலும் தணிக்கை குழுவினரின் கருத்தை ஏற்பதை தவிர வேறு வழியில்லை. படம் வட இந்திய மக்களை பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். ஒரு வடநாட்டு குடும்பத்துக்கும், தமிழ் குடும்பத்துக்குமான உறவை சொல்கிற படம். பல கலாச்சாரம் பல மொழிகள் கொண்ட நாட்டில் ஒருவருக்கொருவர் எப்படி புரிந்து கொண்டு மதிப்பளித்து வாழ வேண்டும் என்பதைத்தான் படம் சொல்கிறது என்றார்.