கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் படம் 'புராஜெக்ட் கே'. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தமாகியிருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல் வெளியானது. இந்த நிலையில் படக்குழு தற்போது இந்த தகவலை உறுதி செய்துள்ளது. 'புராஜெக்ட் கே' படத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கைத்தட்டல்கள் எதிரொலிக்கும்
அதையடுத்து கமல் வெளியிட்டுள்ள செய்தியில், ''50 வருடங்களுக்கு பிறகு இப்போது நாங்கள் இருவரும் இணைகிறோம். அடுத்த தலைமுறையை சேர்ந்த ஒரு இயக்குனர் இதில் தலைமை வகிக்கிறார். என்னுடைய சக நடிகர்களாக பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே போன்ற இந்த தலைமுறையை சேர்ந்த நடிகர்களும் நடிக்கிறார்கள். இதற்கு முன்பு அமிதாப் பச்சனுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஒவ்வொரு முறையும் அவருடன் இணைவது முதல்முறை போலவே உணர்கிறேன். அமிதாப் எப்போதும் ஒவ்வொரு படத்திலும் தன்னை புதுப்பித்துக் கொண்டே வருகிறார். அவரது பாதையை தான் நானும் பின்பற்றுகிறேன்.
புராஜெக்ட் கே படத்தில் பணியாற்ற மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். மேலும் ரசிகர்கள் என்னை எந்த நிலையில் பார்த்தாலும் என்னுடைய முதன்மையான தன்மை நான் ஒரு சினிமா ஆர்வலன் என்பதுதான். எந்த ஒரு புதிய முயற்சிகளையும் ரசிகர்கள் அங்கீகரிப்பார்கள். புராஜெக்ட் கே படத்திற்கு இது என்னுடைய முதல் கைதட்டலாக இருக்கும். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியிலும் சினிமா உலகிலும் கைத்தட்டல்கள் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.