தீபாவளி பண்டிகை நாட்களில் ஒவ்வொரு வருடமும் வெளிவரும் படங்கள் மழைக் காலத்து சங்கடங்களையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். சில வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் நவம்பர் மாத துவக்கத்திலேயே தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
பல மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ள. கடும் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தியேட்டர்களுக்கு வருவது சந்தேகம்தான்.
தமிழகத்தில் 'அண்ணாத்த' படம் சுமார் 700 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகி உள்ளது. தற்போது மிக பலத்த மழை பெய்து வரும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இப்படம் 125 தியேட்டர்கள் வரை வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் 250 தியேட்டர்கள் வரை வெளியாகி உள்ள 'எனிமி' படம் இந்த மாவட்டங்களில் 50 தியேட்டர்கள் வரை வெளியாகி உள்ளது. இந்த மாவட்டங்களில் மக்கள் நேற்றும், இன்றும் தியேட்டர்கள் பக்கம் வருவதைத் தவிர்த்து உள்ளனர். அடுத்த சில நாட்களுக்கும் கன மழை நீடிக்கும் என்பதால் இப்படங்களின் வசூல் பாதிப்படையும் சூழல் உருவாகி உள்ளது.
மற்ற மாவட்டங்களில் இதே போன்ற மழை நீடிக்குமானால் வசூல் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்கிறார்கள்.