தினமலர் விமர்சனம் » கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
தினமலர் விமர்சனம்
பாடலாசிரியர் ஏகாதசி, இயக்குநர் அவதாரம் எடுத்து, எதிர்நாயகர் அவதாரமும் எடுத்திருக்கும் கிராமிய மணம் கமழும் திரைப்படம் தான் "கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை".
கதைப்படி கிராமத்து பள்ளிக்கூடத்தில் சிறுவயது முதல் ஒன்றாய் படிக்கும் நாயகனும், நாயகியும் சுள்ளி பொருக்குவதில் தொடங்கி ஆடு, மாடு மேய்க்கும் இடங்கள் வரை காதலித்து களிப்புறுகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரியும் அவர்கள், மீண்டும் சந்திக்க நேர்ந்தால்... என்னாகும்? சமூகம் அதனை எவ்வாறு பார்க்கும்...? என்பதை அழகாக சொல்லி இருக்கும் படம்தான் "கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை" மொத்தமும்!
நாயகன் தேஜைக் காட்டிலும், நாயகி கீத்திகாவும், அவரது கணவராக வரும் எதிர் நாயகர் ஏகாதசியும் நடிப்பில் பிச்சி உதறி, பின்னி பெடலெடுத்திருக்கின்றனர். க்ளைமாக்ஸ் மட்டும்தான் உறுத்தல்!
நாயகன் தேஜ், அவரது தாய் "பசங்க" செந்தில் குமாரியிடம் பாசம் காட்டும் இடத்திலும், நாயகி கீத்திகாவுடன் சின்னவயது காதல் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார் என்றால், எதிர்நாயகர் ஏகாதசி கீத்திகாவின் சந்தேக புருஷனாக, குடிகார கணவராக, "கக்கூஸ்" காண்டிராக்டராக வாழ்ந்தே இருக்கிறார். அதிலும் பொது கழிப்பிட வாசலில், தலைவாழை இலைபோட்டு, புதுப் பொண்டாட்டி கைகளால் பரிமாற சொல்லி, உணவருந்தியபடியே பாத்ரூம் போய் வருபவர்களிடம் காசு வாங்கி போடுவதிலும், தன் சந்தேக கேரக்டரை பிரதிபலித்தபடியே வந்து க்ளைமாக்ஸில் வில்லானிக்கி, ஹீரோவாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார் ஏகாதசி! வாவ்!!
பின்னணி இசையிலும், பாடல்கள் இசையிலும் கிராமத்தையும், கிராமியத்தையும் நம் கண்முன் நிறுத்தும் பரணியும், "மைனா" புகழ் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் படத்தின் பலம்!
சினிமாவில் எதை, எப்படி சொல்ல வேண்டும் என சரியாக புரிந்து கொண்டு, மிகச்சரியாக படம் பண்ணியிருக்கும் ஏகாதசியின் எழுத்து, இயக்கத்தில், "கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை", "நிஜமான காதல் நியாயமான வசூல்" என்று வெற்றி பெறுவது உறுதி!!