தினமலர் விமர்சனம் » நந்தா நந்திதா
தினமலர் விமர்சனம்
வழக்கமான ரவுடி காதல், கதை தான் நந்தா நந்திதாவும்! ஆட்டோ டிரைவர் அப்பாவின் 2ம் தாரத்தால் வீட்டை விட்டு துரத்தப்படும் அம்மாவை இழந்த ஹீரோ நந்தா, நண்பர்கள் மூலம் வட்டி பணம் வசூல் செய்யும் வேலையை பார்க்கிறார். கூடவே பணத்திற்காக யாரையும் தீர்த்துகட்டும் உத்தியோகமும் நந்தாவை வந்தடைகிறது! ஒரு பக்கம் அடிதடி, வெட்டுகுத்து என்று நந்தா ஆக்ஷன் நாயகர் அவதாரம் எடுத்திருந்தாலும், மற்றொருபக்கம் நாயகி நந்திதாவுடன் லவ் எபிசோட்டிலும் புகுந்து விளையாடுகிறார்.
நாயகர் நந்தாவை, நாயகி நந்திதா நல்லவர் என்று நம்பிக்கொண்டு லவ்-விக் கொண்டிருக்க, ஒருநாள் நந்தா இடைத்தேர்தல் வேட்பாளர் சண்முகராஜனை, காசுக்காக வெட்டி வீழ்த்துவதை கண்கூடாக பார்க்கிறார். அப்புறம்...? அப்புறமென்ன தப்பிபிழைக்கும் சண்முகராஜனிடமிருந்து நந்தா தப்பி பிழைத்தாரா...? நந்தா - நந்திதாவின் காதல் கை கூடியதா...? நாசர் ஒருபக்கம் நந்தாவை தேடக் காரணம் என்ன...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக விடையளிக்க முயற்சிக்கிறது நந்தா - நந்திதாவின் மீதிக்கதை!
நந்தாவாக ஹேமச்சந்திரன், நந்திதாவாக மேக்னாராஜ், அரசியல்வாதியாக சண்முகராஜன் அவரைப்போட்டுத்தள்ளும் கூலிப்படைத் தலைவராக நாசர் உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். ஸ்ரீ ஸ்ரீனிவாச ரெட்டியின் ஒளிப்பதிவும், எமிலின் இசையும், ராம்ஷிவாவின் இயக்கமும் "நச்" என்று இல்லை என்றாலும் "பச்" என்னும் அளவிலும் இல்லாதது ஆறுதல்!
ஆக மொத்தத்தில் "நந்தா நந்திதா" - "நன்றா நன்றில்லையா" என்பது ரசிகர்களுக்கே வெளிச்சம்...!
-----------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
* கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் நந்தா - நந்திதா. தமிழ் + தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரீ-மேக்காகியிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியதோ உண்மைதான்!
* “நந்தா’ ஹேமச்சந்திரன், “நந்திதா’ மேக்னா ராஜ் காதலின் பின்புலத்தில் ஊடுருவும் தாதாயிசமும், ரத்தச் சகதியும் கதை என்பதால்... ஏதேதோ ஞாபகப்படுத்துகிறது படம். ஏற்கனவே இதன் சாயலில் வந்த தாதாயிசப் படங்களும் வந்து போகின்றன!
* எக்கச்சக்கமான தெலுங்கு வாடை. வசனத்திலும், காட்சி அமைப்பிலும்.
* இறுக்கமும், நெருக்கமுமாக நாசர். ஒவ்வொரு அசைவிலும் அனுபவத் தெறிப்பு.
* கன்னடப் படம் என்றாலும் சென்னையில் அடையாள இடங்களிலும் படம் நகர்வது மனசைக் கவரும் ஏற்பாடு!
* க்ளைமாக்ஸில் மொத்த குடும்ப உறுப்பினர்களையும் கூலிக் கும்பல் கொன்று போடுவதில் லாஜிக் மேஜிக் ஒர்க் அவுட் ஆகலையே!
* பாட்டும் சரி இசையும் சரி ஒட்டலை... ஒட்டலை...
* இயக்குனர் ராம்ஷிவா, ரத்தத்திலிருந்து படத்தை மீட்டு திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.