புதியவர் எழில் துரையின் எழுத்து, இயக்கத்தில் அவரே கதாநாயகராகவும் நடித்திட, எஸ்பி எண்டர்டெயின்மென்ட் பேனரில் எஸ்.பாலசுப்ரமணியன் தயாரித்திருக்கும் படம் தான் "செஞ்சிட்டாளே என் காதல".
எழில் துரையுடன் புதுமுகங்கள் மதுமிலா, அபிநயா, வனிதா, திவ்யா, கயல் வின்சென்ட், ராகவ் உமாஸ்ரீனிவாசன், வேலன், ஷம்மி, பூஜா, மோனிஷா உள்ளிட்டோரும், பழகியமுகங்கள் மெட்ராஸ் அம்மா ரமா, மைம் கோபி, அர்ஜுனன், மகாநதி சங்கர், அஜய் ரத்னம்.... உள்ளிட்டோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, காதலனை உடை மாற்றுவது மாதிரி மாற்றிக் கொண்டே இருக்கும் இன்றைய நவீன யுவதிகளுக்கு சீன் பை சீன் சாட்டையடி தரும் வகையில் வெளிவந்திருக்கும் படமான "செஞ்சிட்டாளே என் காதல" படத்தின் கதைப்படி,
கல்லூரி படிப்பை முடித்ததும் ஏதாவதொரு பெரிய கம்பெனியில் தன் சுய கெளரவத்தை அடமானம் வைத்து, அடிமை வாழ்க்கை நடத்த பிடிக்காமல் சொந்தமாக பிஸினஸ் செய்து வளர்ந்து வரும் இளைஞர் வீராவிற்கு கல்லூரியில் படித்து வரும் அனு என்கிற அனுஷ்கா மீது கண்டவுடன் காதல். அனுவிற்கும் அப்படியே!
இவர்களது கசிந்துருகும் காதலுக்கு, அனுவினுடைய அக்காவின் காதலனை காணாமல், அடித்து அவரது காதலை முறித்த அனுவின் பெரும் தாதா அப்பா தாமோதரனான மைம் கோபியோ, இல்லை பல படங்களில் வில்லனாக முகம் காட்டி இதில் வீராவின் வக்கில் அப்பா தினகரனாக வரும் அஜய் ரத்னமோ, வில்லனாக வருவார்கள் எனப் பார்த்தால், நாயகி அனுவே அவர்களது காதலுக்கு வில்லியாகிறார். அது எப்படி? என்பதும் அதற்கு நாயகர் வீராவின் பதிலடி என்ன? என்பதும் தான் "செஞ்சிட்டாளே என் காதல" படத்தின் கதையும், களமும்!
வீராவாக, ஹீரோவாக எழில் துரை எக்கச்சக்கமாக நடித்திருக்கிறார். ஆனால், இப்பட இயக்குனராக மட்டுமே அவர் ஜெயித்திருக்கிறார்.
அனு என்கிற அனுஷ்காவாக மதுமிலா மப்பும் மந்தாரமாய் இருக்கிறார். ஆனால், ஹோம்லி லுக்கில் குல்கந்தாய் இனித்திருக்க வேண்டிய அவர், இப்பட கதைப்படி கோந்து பிஸினாக பல காதலர்களுடன் ஓட்டி உறவாடுவது நம்பும்படி இல்லை. ஆனாலும், அவரது கேரக்டர் இன்றைய நவீன யுவதிகள் பலரும் நாகரீகம் எனக் கருதும் விஷயங்கள் நாகரீகம் இல்லை என உதற வேண்டிய விஷயங்கள் என தோலுரித்துக் காட்டியிருப்பதற்காக பாராட்டுக்கள்!
மெட்ராஸ் அம்மா ரமா, இப்படத்தில் நாயகர் வீராவின் அம்மாவாக கச்சிதம். ஆனாலும், என்னுயிர் தோழன் நாயகி ரமாவா இது? என இளைத்து, களைத்து போய் ரசிகனை சந்தேகமாய் கேட்க வைக்கிறார் அம்மணி.... என்பது பரிதாபம்.
ஜிம் ஒனர் கம் மாஸ்டராக காமெடி அர்ஜுனன், அவ்வப்போது சகாக்களுடன் சிரிக்க வைக்கிறார்.
அனுவினுடைய அக்காவின் காதலனை அடித்து அவரது காதலை முறித்த அனுவின் தாதா அப்பா தாமோதரனாக மைம் கோபி, மகனை காணாததற்கு கவலைப்படாது, அவன், தன் தூப்பாக்கியை தூக்கி போய்விட்டான் என்பதற்காக டெல்லியில் இருந்து ஓடிவரும் நாயகரின் வக்கில் அப்பாவாக அஜய் ரத்னம், அன்யூனிபார்ம் போலீஸாக, ஆஸ்யூஸ்வெல் மகாநதி சங்கர் உள்ளிட்டோர் வழக்கம் போலவே மிரட்டியிருக்கின்றனர்.
மேலும், சோனாவாக வரும் அபிநயா, திவ்யா-வனிதா, நித்யா - திவ்யா, அஜய் - கயல் வின்சென்ட், ப்ரீத்- ராகவ் உமா ஸ்ரீனிவாசன், சாய்-வேலன், மஹிமா - ஷம்மி, செளம்யா-பூஜா, நந்தினி -மோனிஷா..... உள்ளிட்டோரில் சாயாக, நாயகியின மற்றொரு காதலராக வரும் இளைஞரும், அண்ணன் விழுந்து விழுந்து லவ் பண்ணும் பெண், வேறு ஒரு இளைஞருடன் டூவீலரில் நெருக்கமாக போகும் வீடியோ காட்சிகளை தன் செல்லில் இருந்து செல்ல அண்ணனின் பார்வைக்கு கடத்தும் அந்த நாயகரின் தங்கை பாத்திரமும் கவனம் ஈர்க்கின்றன. இந்த, தங்காச்சிக்கு தமிழ் சினிமாவில் நிச்சயம ,பிரைட் பியூச்சர் இருக்குங்கோ!
லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு, முன் பாதி பாடாவதி, பின் பாதி பலே பக்கா தொகுப்பு !
எம்.மணீஷ்ஷின் ஒளிப்பதிவு ஆஹா, ஓஹோ பதிவு.
எப் .ராஜ்பரத்தின் "அந்த ஆய்பையன் எங்க..?" உள்ளிட்ட பாடல்கள் பரவாயில்லை .ஆனால், பிண்ணி, பெடலெடுத்திருக்க வேண்டிய பின்னணி இசை., ரசிகனை பெண்டு நிமிர்த்தி எடுக்க முயன்றிருப்பது சற்றே பலவீனம்.
எழில் துரையின் எழுத்து, இயக்கத்தில், "உடம்பதான் ஏத்த முடியல... பிகரயாவது ஏத்தலாமேன்னு தான்...." என்பது உள்ளிட்ட டபுள் மீனிங் வசனங்களும், "எனக்கு கொஞ்சம் கூட ஈகோ கிடையாதுன்னு காலம் காலமாய் உலகத்துல இருக்கிற 500 கோடி பொம்பளைங்களும் சொல்வாங்க, அதை, 500 கோடி ஆம்பளையும் நம்புவங்க...", "ஒப்பனா பேசுற பொண்ணுங்களாம் ரொம்ப நல்ல பொண்ணுங்கன்னு நாம நம்புறோம். அப்படி நம்புறதும் ஒரு வித வியாதி தான்.. ஆனா, அந்த வியாதிக்கு என்ன பெயருன்னு தான் தெரியலை...." என்பது உள்ளிட்ட நக்கல், நையாண்டி மெஸேஜ் "பன்ச்"களும் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகின்றன .
மேலும் "ஷை பிளாடர் யூரின் டிசிஸ்" எனும் தமிழ் சினிமாவிற்கு புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வியாதியும் வித்தியாசம். இது மாதிரி., புதுமைகளிலும், பின்பாதி படத்தின் வித்தியாச, விறுவிறுப்பிலும் அறிமுக இயக்குனர் எழில் துரை, பெரிதாய்கவனம் ஈர்க்கிறார். பாராட்டுக்கள்!
மொத்தத்தில், ஒரு சில லாஜிக், மேஜிக் குறைகள் இருந்தாலும் இழுவை காட்சிகள் நிரம்ப நிறைந்திருந்தாலும், "செஞ்சிட்டாளே என் காதல" - திரைப்படம், பெரிதாக ரசிகனை வச்சு செய்யவில்லை.... என்பது ஆறுதல்!"