Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை,Tharai Thappattai
02 பிப், 2016 - 14:49 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தாரை தப்பட்டை

தினமலர் விமர்சனம்


இளையராஜாவின் இசையில் அவரது ஆயிரமாவது படமாக, பாலாவின் இயக்கத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருக்கும் தஞ்சை பகுதி பரம்பரை இசை மற்றும் நாட்டிய கலைஞர்கள் பற்றிய படம் தான் தாரை தப்பட்டை!


மொட்ட மேளம் எனும் கெட்டிக்கார இசைக் கலைஞர் சாமிபுள்ள ஜி.எம்.குமார், வீம்பும் வித்தையும் நிறைந்த அவரது ஒத்த வாரிசு சன்னாசி - சசிக்குமார். காலத்துக்கு ஏற்ற இசையைத் தரும் அவரை மூதேவி எனச் சொல்லி முறுக்கிக் கொண்டு திரிகிறார் மொட்ட மேளம் ஜி.எம்.குமார். அப்பாவுக்கும், பிள்ளைக்கும் பாலமாகவும் ச(ன்னா)சியின் ட்ரூப்பில் ஒன்னாம் நம்பர் ஆட்டக்காரியாகவும் இருக்கும் சூறாவளி - வரலட்சுமி, சசி மீது மாமா, மாமா என உயிரையே வைத்திருக்கிறார்.


இந்நிலையில், டெபுடி கலெக்டரிடம் கார் டிரைவராக இருக்கும் ஸ்டுடியோ 9 சுரேஷ், 2 ஆண்டுகளாக சூறாவளியின் ஆட்டம் எங்கு நடந்தாலும் பார்த்து சூறாவளியை ஒரு தலையாய் காதலித்து உருகுகிறார். சூறாவளிக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தருவதாக சசி, தன் காதலை தியாகம் செய்து சூறாவளியின் விருப்பம் இன்றி சுரேஷுக்கு அவரை கழுத்தை நீட்ட வைக்கிறார். கஞ்சா குடுக்கியான சுரேஷுக்கு வாக்கப்படும் சூறாவளி - வரலட்சுமி சந்திக்கும் திக், திக் சமாச்சாரங்களும் அதற்கு ச(ன்னா )சி செய்யும் பழிக்கு பழி பரிகாரமும் தான் தாரை தப்பட்டை மொத்தமும்.


சன்னாசியாக சசிக்குமார் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அந்தமானில் சூறாவளியின் காதலை உணர்ந்து அவர் படும் மனத்துயரும், காதலியை விட்டு கொடுத்து படும் துயரும் காண்போர் கண்களில் கண்ணீர் வரவைத்து விடும்.


சூறாவளியாக வரலட்சுமி சரத்குமார் மிரட்டியிருக்கிறார். மாமா ஜி.எம்.குமாருடன் குடித்துவிட்டு அவர் போடும் ஆட்டங்களும், சசியின் இசைக்கு அவர் போடும் குத்தாட்டங்களும், கெட்ட ஆட்டங்களும் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்.


மொட்ட மேளம் சாமி புள்ளையாக ஜி.எம்.குமார், ஹீரோவையும் தாண்டி வாசித்தும், நடித்துமிருக்கிறார். வரலட்சுமி மாதிரியே பிற ஆட்டக்காரிகளும், காயத்தரி ரகுராம் உள்ளிட்டவர்களும் கச்சிதம்.


படம் முழுக்க கஞ்சா குடுக்கியாக, கேவலமான வேலைகள் செய்யும் ஸ்டுடியோ 9 சுரேஷ், தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள புதிய கொடூர வில்லன், செமவில்லத்தனம். நிறைய இடங்களில் சுரேஷையும் தாண்டி இவர் பாத்தித்தில் இயக்குனர் பாலா தெரிகிறார்.


இசைஞானி இளையராஜாவின் இசையில் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே மனிதன்.... எனத் தொடங்கித் தொடரும் ரீ-மிக்ஸ் பாடல்களும் தாரை தப்பட்டை தேவார திருவாசகபாடல்களும் தேவாமிர்தம்.


செழியனின் ஒளிப்பதிவு பிரமாண்டம், பிரமாதம்!


பாலாவின் எழுத்து, இயக்கத்தில், சொத்த வித்து பிள்ளைய காப்பாத்து வாங்க, நீங்க விந்த வித்து சொத்த காப்பாத்த பார்க்கறேள்... , என் சன்னாசிக்காக அம்மனமா ஆடசொன்னாக்கூட ஆடுவேன்...., கரு முட்டை _ டைனேசர் முட்டை ஒப்பீடு... உள்ளிட்ட உவ்வே ரக வசனங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் உருக்கமான படமே "தாரை தப்பட்டை


மொத்தத்தில், முன் பாதி குத்தாட்டமும், பின்பாதி கொலை வெறியுமாக இருக்கும், தாரை தப்பட்டை ஒரு சில விருதுகளை குவிக்கும். வசூலை வாரிக் குவிக்குமா? பாலாவிற்கும், அவரது ரசிகர்களுக்குமே வெளிச்சம்!

------------------------------------------------------------

கல்கி சினி விமர்சனம்


'இவர்தான் பாலா' என்று மீண்டும் அடையாளம் காட்டியிருக்கிறது 'தாரை தப்பட்டை'. விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறேன் என்ற போர்வையில் விரசமும் ஆபாசமும் தப்பட்டையில ஓங்கி ஒலிக்கிறது.

மாமனார் நிலையில் இருக்கும் பெரியவருடன் ஒன்றாக மது அருந்துவது, முத்தம் இடுவது போன்ற காட்சிகளை எவராலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. கதாநாயகி தற்போதைய தமிழ் திரைப்பட மரபுகளின்படி குடிகாரியாய் இருக்கிறாள். கதாநாயகன் சுத்தபத்தமாய் இருக்கிறானே என்று சந்தோஷப்படும் தருணத்தில் முழு சீசா மதுவையும் அப்படியே கவிழ்த்துக் கொள்கிறார் கதாநாயகன்!

ஆட்டக் கலைஞர்களின் அவலங்களை முன்பாதி சொல்கிறது. பின்பாதியோ பிணவறைத் தொழிலாளிகள் போன்றோரது விபரீத நிலையை விளக்குகிறது. ஆனால் எதற்கானத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை.

கதாநாயகியின் அம்மாவுக்குத் தன் பெண்ணின் இருப்பிடம் பற்றித் தெரியாத நிலையில், சசிகுமார் டானென்று அந்த இடத்துக்கு எப்படிப் போகிறார் என்பது விளக்கப்படவில்லை. கதாநாயகனின் தந்தையின் மரணத்தை முன்கூட்டியே யூகிக்க முடிகிறது.

உடன்பிறந்த தங்கையுடனேயே ஆட்டத்தின் போது பேசும் தரம் தாழ்ந்த இரட்டை அர்த்த வசனங்கள் நூறு பீப் பாடல்களுக்கு சமம். பிதாமகனில் பட்டையைக் கிளப்பியதால் அதே பாணிக் கலவைப் பாட்டை இதிலும் வைத்திருக்கிறார்கள். சூடான புலவுக்கும், ஊசிப்போன உப்புமாவுக்கும் உள்ள வேறுபாட்டைத்தான் உதாரணம் சொல்ல முடியும்!

இளையராஜாவின் ஆயிரமாவது படமாம்! சில பாடல்கள் ஜொலிக்கின்றன. 'சிங்காரம் கெட்டு' என்ற சி.எஸ். ஜெயராமன் பாடிய அற்புதமான பாடலை கர்ணகடூரமாக ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். இளையராஜா கோபித்துக் கொள்ளக் கூடாது. உங்களது பாடலை இப்படிச் செய்தால் அனுமதிப்பீர்களா? நடன அசைவுகள் ஆபாசத்தின் உச்சம்!

சசிகுமாரின் சண்டைக் காட்சிகள் அவரது உள்ளக் கொந்தளிப்பை வெளிக்காட்டுவது போல உக்கிரமாக இருக்கின்றன. பின்னணி இசை மிகப் பொருத்தம்! ஒளிப்பதிவு துல்லியம். கதை மாந்தர் தேர்வு மிக பாந்தமாக இருக்கிறது.

இப்படி ஆடுறதைக் கத்துக்கிட்டதுக்குப் பதிலாக நீந்தக் கத்துக்கிட்டிருந்தாக் கூட கடலில் குதித்து தப்பிக்கலாம் என்பார் கதாநாயகி. கடல் கொந்தளிக்கிறதுக்கா? என்பார் தோழி. அரங்கில் பலர் புன்னகைக்கிறார்கள். (கதாநாயகியின் பெயர் சூறாவளி)

இப்படி நுணுக்கமான வசனங்கள் ஆங்காங்கே உண்டு! கதாநாயகியின் தலையில் பேன்கள் இருப்பது போன்ற யதார்த்தமான காட்சிகளும் அநேகம். நடனத்தின்போதே ஆடையைச் சரிசெய்து கொள்வதைப் போன்ற நுட்பமான காட்சியமைப்புக்களும் உண்டு.

தாரை தப்பட்டை! விரச ஒலி!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

தாரை தப்பட்டை தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in