நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
படம் : எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : ஜெயம் ரவி, அசின், பிரகாஷ்ராஜ், நதியா, விவேக்
இயக்கம் : ராஜா
தயாரிப்பு : ஜெயம் புரொடக்ஷன்ஸ்
தந்தை மோகன் தயாரிப்பில் அண்ணன் ராஜா இயக்க, தம்பி ரவி நடித்த குடும்ப படம் ஜெயம் வெற்றி பெற்றதை அடுத்து, இதே கூட்டணி, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என, களமிறங்கியது. முதல் படத்தை போலவே இப்படமும் தெலுங்கு ரீமேக் தான். அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி படத்தில், சில மாற்றங்கள் செய்து, இப்படத்தை இயக்கியிருந்தார், ராஜா.
அம்மா, மகன் பாசத்தை மையமாக வைத்து, இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.'பாக்ஸிங்' வீரரான பிரகாஷ்ராஜ், தன் மனைவி நதியா மீதுள்ள அக்கறையால், லட்சியத்தை அடைய முடியாமல் தவிப்பார். இதை உணர்ந்த நதியா, கணவரை பிரிந்து, தன் மகன் ரவியுடன் சென்னையில் வசிப்பார். பாக்ஸிங் வீரராக வளரும் ரவி, தாயின் மரணத்திற்கு பின், மலேஷியாவில் உள்ள தன் தந்தையிடம் செல்வார். அங்கு நடக்கும் ஆக் ஷன், சென்டிமென்ட் தான் படத்தில் கிளைமேக்ஸ்.
'பாக்ஸிங்கை வெச்சுப் படம் எடுத்தா ஓடாது; மலேஷியாவில் எடுத்த படம் ஓடாது' என, சினிமா சென்டிமென்ட் அனைத்தையும், இப்படம் மூக்கில் குத்தி உடைத்தெறிந்தது. படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. தாய், மகன் இடையேயான பாசமும், தந்தை, மகன் இடையேயான முட்டலும், ரசிக்கும்படி இருந்தது. தெலுங்கு பதிப்பில் நடித்த அசின், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 'மலபார்' என்ற செல்ல பெயரும் பெற்றார். விவேக் காமெடி ரசிக்கச் செய்தது. இப்படத்திற்கு முதலில், எம்.குமரன் சன் ஆப் பாக்கியலட்சுமி என, பெயர் சூட்டப்பட்டது.
இப்படத்திற்காக, சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருது பெற்றார், ஸ்ரீகாந்த் தேவா. 'ஐயோ ஐயோ உன் கண்கள், சென்னைச் செந்தமிழ் மறந்தேன், நீயே நீயே நானே...' பாடல்கள் ரசிக்கச் செய்தன.