தினமலர் விமர்சனம்
போற்றப்பட வேண்டிய பெற்றோர்களின் பெருமையையும், பிள்ளைகளுக்கு புதிதாக வரும் உறவுகளால் அவர்கள் புறக்கணிக்கப்படும் கொடுமையையும் கண்ணீரும், கம்பளையுமாக விவரித்திருக்கும் படம்தான் முத்துக்கு முத்தாக!
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் சகோதர பாசத்தை வலியுறுத்திய இயக்குனர் ராசு.மதுரவன், இதில் தாய் - தந்தை பாசத்தை வலிய உறுத்தி இருக்கிறார். இளவரசு, சரண்யா தம்பதிக்கு நட்ராஜ், விக்ராந்த், ஹரீஷ், வீரசமர் உள்ளிட்ட 5 ஆண் வாரிசுகள். ஐந்து பேரும் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஒன்றென்றால் வரிந்து கட்டிக் கொண்டு வம்புக்கு போகும் அளவுக்கு பாசக்காரர்கள். ஆனால் ஒவ்வொருத்தரும் திருமணம், குழந்தை குட்டி என்று ஆனதும் அந்த பாசம் படும் பாடும், பெற்றவர்களை படுத்தும் பாடும்தான் முத்துக்கு முத்தாக மொத்த படமும்!
பெட்டிக்கடைகளுக்கு முறுக்கு, அதிரசம் சுட்டு மொத்தமாக பேக் செய்து, விற்று பிழைப்பு நடத்தினாலும் அதில் கிடைக்கும் வருமானத்தில் பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வரும் பெற்றோராக இளவரசும், சரண்யாவும் நடிக்கவில்லை... வாழ்ந்திருக்கிறார்கள். அதிலும் கிராமத்து அம்மா கேரக்டர்களுக்கென்றே பிறந்து வந்த சரண்யா, வெள்ளாந்தியாக மூத்த மகன் நடராஜை, மருமகள் சுஜிபாலாவிடம் போட்டுக் கொடுக்கும் இடங்களில் தியேட்டரே அதிர்வதும், சென்டிமெண்ட் சீன்களில் அழுவதும் பார்த்தால் சரண்யாவுக்கு அம்மா கேரக்டருக்கென்றே ஒரு தேசிய விருதை உருவாக்கி தர சிபாரிசிக்கலாம்!
இளவரசு தம்பதிகளின் மகன்களாக வரும் வாத்தியார் நட்ராஜ், மனைவி சுஜிபாலாவிடம் படும் பாடு, வேன் ஓட்டும் விக்ராந்த் காதலி மோனிகாவை கரம் பிடிக்க முடியாமல் பெற்றோரின் விருப்பத்திற்காக அத்தை மகள் ஜானகியை கைபிடித்து படும் பாடு, வீரசமர் நண்பர் ரகுவண்ணனையே தீர்த்துக் கட்டி ஜெயிலுக்கு போகும் காரணம், வீட்டோடு மாப்பிள்ளையாக போன ஒரு பிள்ளை படும் பாடு, ஹரீஷ் - ஓவியாவின் சிட்டி காதல் என 5 பிள்ளைகளுக்குள்ளும், ஐந்து கதையையும், களத்தையும் வைத்து அதை ஒரே படமாக இயக்கியிருக்கும் ராசு.மதுரவனுக்கு ரொம்பவே துணிச்சல்தான். இந்த ியக்குனர் துணிச்சல் இதில் நடித்திருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களிடமும் பிரதிபலித்திருப்பதுதான் படத்தின் பெரும்பலம்! இயக்குனர் இன்னும் சற்றே முயற்சித்திருந்தால் படத்தில் ஆங்காங்கே தெரியும் நாடகத்தன்மையை தவிர்த்திருக்கலாம்! அவ்வாறு இல்லாதது பலவீனம்!
நட்ராஜ், விக்ராந்த், வீரசமர், ஹரீஷ் உள்ளிட்ட ஐவரும் அண்ணன் - தம்பிகளாகவே வாழ்ந்திருக்கின்றனர். ரகுவண்ணன், ஓவியா, மோனிகா, சுஜிபாலா, ஜானகி உள்ளிட்டவர்களும் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து படத்துடன் ரசிகர்களை ஒட்ட வைத்துள்ளனர். அவ்வளவு ஏன்? கிராமத்து டாக்டராக வரும் யோகி தேவராஜில் தொடங்கி, இளவரசு - சரண்யா தம்பதிகள் வரை ஒவ்வொரு பாத்திரமும் முத்துக்கு முத்தாக படத்தின் நல்முத்துக்கள் என்றே சொல்ல வேண்டும்! யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும், கவி பெரியதம்பியின் இசையும் படத்தை நம் பக்கத்து வீட்டு குடும்பம் மாதிரி காட்ட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றன.
மொத்தத்தில் முத்துக்கு முத்தாக, ஒவ்வொரு குடும்பமும், குழந்தையும் பார்க்க வேண்டி சொத்துக்கு சொத்தாக என்றால் மிகையல்ல!