Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

மகேஷிண்டே பிரதிகாரம் (மலையாளம்)

மகேஷிண்டே பிரதிகாரம் (மலையாளம்),Maheshinte prathikaram
  • மகேஷிண்டே பிரதிகாரம் (மலையாளம்)
  • இயக்குனர்:
09 பிப், 2016 - 13:50 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மகேஷிண்டே பிரதிகாரம் (மலையாளம்)

நடிகர்கள் : பஹத் பாசில், அனுஸ்ரீ, அபர்ணா பாலமுரளி, சௌபின் சாஹிர், சுஜித் சங்கர், அலான்சியர் லே

இசை : பிஜிபால்

கதை : ஷியாம் புஷ்கரன்

தயாரிப்பு : ஆஷிக் அபு

டைரக்சன் : திலீஷ் போத்தன்


'மகேஷிண்டே பிரதிகாரம்' என்பதை 'பழிக்கு பழி வாங்கிய மகேஷ்' என்பதாக தமிழில் அர்த்தம் கொள்ளலாம்.


கடந்த இரண்டு வருடங்களாக ஒரு ஹிட் கூட கொடுக்க முடியாமல் தடுமாறும் பஹத் பாசில், இந்த ஜனவரியில் வெளியான தனது முதல் படமான 'மான்சூன் மேங்கோஸ்' படமும் கூட தன்னை கைவிட்ட நிலையில், இந்தப்படத்தின் ரிலீசைத்தான் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். அறிமுக இயக்குனர் திலீஷ் போத்தன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப்படமாவது பஹத் பாசிலுக்கு கொடுத்துள்ளதா..? பார்ப்போம்...


இடுக்கியில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றை நடத்திவரும் பஹத் பாசில், தனது வயதான தந்தையுடன் வசித்து வருகிறார். பள்ளிக்காலத்து தோழி அனுஸ்ரீயுடனான காதல் நன்றாக போய்க்கொண்டு இருந்த சமயத்தில், அனுஸ்ரீயின் தந்தை அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்து வைக்கிறார். இதனால் அப்டியே அப்செட் ஆகி நிற்கிறார் பஹத் பாசில்.


இந்த சமயத்தில் அவரது கடையில் வேலைபார்க்கும் மாமா அலான்சியரை பக்கத்து ஊர்க்காரன் ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து வம்பிழுக்கிறான். தட்டிக்கேட்க போன பஹத் பாசிலை ஊரார் முன்னிலையில் வைத்து அடித்து துவைக்கிறான். இதனால் அவமானப்பட்ட பஹத் பாசில் இரு தினங்கள் அமைதியாக இருந்தாலும் மனதில் ஆத்திரம் பொங்கவே, அடித்தவனை தேடி அவனுடைய ஊருக்கு செல்கிறார். ஆனால் அவனோ முதல் நாள் தான் வேலைக்காக வெளிநாட்டு சென்றுவிட்டான் என்பது தெரிய வருகிறது.


அவனை அடிக்கும் வரை தன் கால்களில் செருப்பே அணிவதில்லை என்கிற வைராக்கியத்துடன் இருக்கும் பஹத் பாசிலின் வாழ்க்கையில் கல்லூரி மாணவி அபர்ணா பாலமுரளி குறுக்கிடுகிறார். போட்டோ எடுத்து தருவதில் ஆரம்பித்த நட்பு, பின்னர் அப்படியே காதாலாக மாறுகிறது. கூடவே தன்னை அடித்தவனின் தங்கை தான் அபர்ணா என்கிற விஷயமும் தெரியவருகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தனது பாட்டியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வருகிறான் அபர்ணாவின் அண்ணன்.


பஹத் பாசில் அவனுடன் நேருக்கு நேர் மோதி தனது பழி வாங்கும் வெறியை தீர்த்துக்கொண்டாரா..? அல்லது காதலுக்காக மோதலை தவிர்த்து எதிரியுடன் சமாதானமாக சென்றாரா..? அல்லது எதிரியுடன் மோதி வெற்றிகண்டு அதனால் இந்த காதலியையும் இழந்தாரா என்பது க்ளைமாக்ஸ்.


பஹத் பாசிலிடம் உள்ள ப்ளஸ் பாயிண்ட்டே, நவநாகரீக பட்டணத்து இளைஞனாக நடிக்கும் அதே நேரத்தில் யதார்த்தமான வேட்டி கட்டிய கிராமத்து இளைஞனாகவும் அவரால் மாறமுடியும் என்பது தான். அப்படி சாதாரண ஒரு அமெச்சூர் போட்டோகிராபராக இந்தப்படத்தில் டோட்டலாக உருமாறியுள்ளார் பஹத் பாசில். முதல் காட்சியில் தனது செருப்பை சோப்பு போட்டு தேய்த்து பளிச்சென வெள்ளையாக்கும்போதே அவரது கேரக்டரின் இயல்பை நமக்குள் ஏற்றிவிடுகிறார் பஹத் பாசில்..


படம் முழுவதும் அந்த எட்டாம் நம்பர் செருப்புக்கான முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனுஸ்ரீயின் காதல் முறிந்தாலும் அபர்ணாவுடன் காதல் துளிர்க்கும்போது பஹத் பாசிலின் முகத்தில் படரும் வெட்கம் இருக்கிறதே.. அட..அடா.. அதேசமயம் எதிராளியிடம் அடிவாங்கி வேட்டி அவிழ்ந்து உள்ளாடையுடன் நிற்கும் அவமானத்தையும், பின்னர் பழிக்கு பழியாக அவன் ஊருக்கே சென்று இழுத்து போட்டு துவைக்க முற்படும் அந்த ஆவேசத்தையும் இம்மி பிசகாமல் பிரதிபலித்துள்ளார் பஹத் பாசில்.


கதாநாயகிகளில் ஒருவரான அனுஸ்ரீ, சந்தர்ப்பவாதியாக மாறி காதலை முறித்துக்கொண்டு ரசிகர்களின் சாபத்தை வாங்கி கட்டிக்கொள்கிறார். ஆனால் பின்னர் என்ட்ரி கொடுக்கும் இன்னொரு நாயகி அபர்ணா, தான் வரும் காட்சிகளில் எல்லாம் தனது படு யதார்த்தமான நடிப்பாலும் புன்னகையாலும் கண் அசைவுகளாலும் ரசிகர்களை உற்சாகமூட்டிக்கொண்டே இருக்கிறார்.


அபர்ணாவின் அண்ணனாக வில்லன் கேரக்டரில் செம பிட்டாக பொருந்தியிருக்கிறார் சுஜித் சங்கர்.. பஹத் பாசிலை போட்டு புரட்டி எடுக்கும் காட்சிகளில் நமக்கு கோபத்தை ஏற்படுத்தி, பின்னாளில் அதே பஹத் பாசில் அவரை பதிலுக்கு பதில் புரட்டி எடுக்க தயாராகும்போது 'விடாதே.. அடி..” என நம்மை இருக்கை நுனிக்கு கொண்டுவரவும் வைக்கிறார்.


பஹத்தின் நண்பனாக வரும் சௌபின் சாஹிர், மாமன் பேபியாக வரும் அலான்சியர் லே இருவரும் காமெடி ஏரியாவை கவனித்துக்கொள்கிறார்கள்., பஹத்தின் தந்தையாக நடித்திருப்பவர் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிஜிபாலின் இசை மனதை வருடுகிறது. ஷிஜு காலித்தின் ஒளிப்பதிவு இடுக்கி, கட்டப்பனை பகுதிகளின் இயற்கை அழகை அப்படியே அள்ளி தந்திருக்கிறது.


பஹத் பாசிலுக்கேற்ற கவன ஈர்ப்பு கதையை உருவாக்கியதில் வெற்றி பெற்றுள்ளார் கதாசிரியர் ஷியாம் புஷ்கரன். அதனாலேயே படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனர் திலீஷ் போத்தன் முதல் படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவிட்டார்.. சில நுணுக்கமான காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் கைதட்டலையும் அள்ளுகிறார். பிரபல இயக்குனரான ஆசிக் அபு இந்த கதையை தயாரிக்க முன்வந்ததற்கான காரணத்தை தனது திரைக்கதையால் நியாயாப்படுத்தி இருக்கிறார் திலீஷ் போத்தன்.


ஆக, இந்தப்படத்தின் மூலம் பஹத் பாசில் மீண்டும் கம்பீரமாக எழுந்து நின்றுள்ளார் என்று தைரியமாக சொல்லலாம்.


மொத்தத்தில் அனைவரும் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய படம் தான் இந்த 'மகேஷிண்டே பிரதிகாரம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in