Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

சிவப்பு

சிவப்பு,Sivappu
27 அக், 2015 - 19:30 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சிவப்பு

தினமலர் விமர்சனம்


இலங்கை போர் உச்ச கட்டத்தில் இருந்த போது, இந்தியாவிற்கு அகதிகளாக வந்த மக்கள் இங்குள்ள அரசியல்வாதிகளின் சுய நலத்தல் எப்படியெல்லாம் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர் .....என்பதை "ஒரு சோற்று பதமாக சொல்லி ராஜ்கிரணின் நடிப்பில் உருக்கமாக வந்திருக்கும் படம் தான் "சிவப்பு.


கதைப்படி., தமிழகத்தைச் சார்ந்த பார்லிமென்ட் உறுப்பினர் செல்வாவின் கட்டுமானத் தொழில் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் ராஜ்கிரண். ஒரு அசாதாரண சூழ்நிலையில், தன் பொறுப்பில் இருக்கும் அந்த கட்டுமான தொழில் நிறுவனத்தில், இலங்கை அகதிகள் சிலரை பணியாளராக பயன்படுத்தி வருகிறார்.


அகதிகளில் உள்ள இளம் பெண் ரூபா மஞ்சரிக்கும், ராஜ் கிரணின் வலதுகரமான கட்டிட தொழிலாளி நாயகர் நவீன் சந்திராவுக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது. எதிர்பாராமல் கலவரத்தில் சிக்கும் அந்த காதலை, கல்யாணத்தில் முடித்து வைக்கிறேன் பேர்வழி... என, அந்த அகதிப் பெண்ணையும், அவரது காதலையும், தன் அரசியல் சுய லாபத்திற்காக பலிகடா ஆக்குகிறார் செல்வா! இந்த உண்மை தெரிந்ததும் ராஜ்கிரண், செல்வாவை எப்படி பழி தீர்க்கிறார்? என்பதும், இலங்கை அகதிகளை இந்திய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எவ்வாறு? கிள்ளுக் கீரையாக கருதுகின்றனர் என்பதும் தான் சிவப்பு படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!


கோனார் என்ற கதாபாத்திரத்தில் கட்டிட தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக ராஜ்கிரண் நடிக்கவில்லை, மனிதாபிமானத்தின் கோனார் உரை நூலாகவே வாழ்ந்திருக்கிறார் எனலாம்! இலங்கையில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ளும் ஆசையில் அகதிகளாக ஓடி வரும் அவர்களை இங்கேயும் விரட்டி அடித்தால் அவர்கள் எங்கே போவர்கள்?" என கேட்கும் இடங்களில் தானும் உருகி ஆடியன்ஸையும் உருக்கி விடுகிறார் மனிதர்.


கட்டிட தொழிலாளிகளில் ஒருவராக, ராஜ்கிரணின் வலதுகரமாக, முரட்டு உடம்பும், கனிந்த பார்வையுமாக நாயகர் நவீன் சந்திரா, நாயகி ரூபா மஞ்சரியை மட்டுமல்ல நம்மையும் வசீகரிக்கிறார் .


ரூபா மஞ்சரி அழகிய இலங்கை அகதிப் பெண்ணாக அழுக்கு பாவாடையும், சட்டையுமாக அந்த ஊர் அபலை இளம் பெண்களை நம் கண்முன் நிறுத்தி, காதலையும், கண்ணீரையும் ஒருசேர வர வைத்து இருக்கிறார்!


தம்பி ராமய்யா, மேஸ்திரியாக, மிடுக்கு காட்டுவது காமெடி!, தமிழ்செல்வன் எம்.பியாக செல்வா சத்தமில்லாமல் சாதித்து, சாவது நச் கென்று படமாக்கப்பட்டுள்ளது. போலீஸ் - போஸ் வெங்கட், இன்ஜினியர் ஏ.வெங்கடேஷ், அல்வா வாசு, பூ ராம், சோனா உள்ளிட்டவர்களும் அவர்களது பாத்திரப்படைப்பும் கச்சிதம்!


மது அம்பட்டின் ஒளிப்பதிவு, நம்மையும் படத்தின் பாத்திரங்களில் ஒருவராகவே வாழவைத்து ஒன்றவைத்திருப்பது சிவப்பு படத்தின் பெரும் பலம். என்.ஆர்.ரகுநந்தனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு உள்ளிட்டவைகளும் கூட சிவப்பு படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கின்றன!


சத்ய சிவாவின் எழுத்து, இயக்கத்தில், படத்தின் நீளமும், அடிக்கடி இப்பட அகதி பாத்திரங்கள் பேசும்... குளராதிருங்க.... உள்ளிட்ட, வலிய திணிக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் சொற்களும் சற்றே நம் பொறுமையை சோதித்தாலும்.... இலங்கை அகதிகளை மையமாக வைத்து இதற்கு முன் வந்த படங்களில் இருந்து மாறுபட்ட கதையை உள்ளடக்கி வந்துள்ள, "சிவப்பு - சிறப்பு!


--------------------------------------------------




கல்கி சினி விமர்சனம்




இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் தமிழர்கள் இங்கே நிம்மதியாக வாழ்கிறார்களா? அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக அவர்களை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்? ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயலும் 80 அகதிகள் சென்றார்களா? இல்லையா? என்பதே சிவப்பு படத்தின் கதை.


மிகப் பெரிய அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டும் செல்வா எம்.பி. அவருக்குப் பக்கபலமாக இருந்து கட்டட வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் கோனார் வேடத்தில் ராஜ்கிரண். ராஜ்கிரணிடம் வேலை செய்யும் பாண்டியாக நவின் சந்திரா. யாருக்கும் தெரியாமல் கட்டட வேலை செய்து, ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லும் ரூபா மஞ்சரி. கட்டட மேஸ்தியாக தம்பி ராமைய்யா - இந்த ஐந்து முரண்பட்ட கதாபாத்திரங்களின் மீது அழுத்தமான ஒரு கதையைச் சொல்லியுள்ளார் இயக்குநர் சத்ய சிவா.


ரூபா மஞ்சரியை நவின் சந்திரா விரட்டி விரட்டி வேலை வாங்கும் காட்சியில் 'இலங்கையில் இருந்து சிங்களனுக்குப் பயந்துதான் இங்கே ஓடி வருகிறார்கள். இங்கேயும் விரட்டியடித்தால் அவர்கள் எங்கே போவார்கள்?' என்று ராஜ்கிரண் பேசும்போது திரையதிரக் கைதட்டல்.


ஹெலிகாப்டம் பறந்தால் உடனே ஓடி ஒளிந்து காதைப் பொத்திக் கொள்ளும் ரூபா மஞ்சரி அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார். 'ஈழத்தில் நாங்கள் நிறைய சிவப்பு (ரத்தம்) பார்த்துவிட்டோம். உன்னிடம் சிவப்பு பார்க்க விரும்பவில்லை' என்று ரூபா மஞ்சரி காதலன் நவின் சந்திராவிடம் பேசும்போது உருக்கம்.


படத்தின் முடிவில் 'ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யுங்கள். இப்ப அவர்களை விடடுவிடுங்க. அவங்களை வைத்துப் பிழைப்பு நடத்தாதீர்கள்' என்று ராஜ்கிரண் பேசும் வசனம் சாட்டையடி.


சிவப்பு - சிறப்பு.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

சிவப்பு தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in