ஏக எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகி இருக்கும் பக்க மசாலா திரைப்படம் “பெங்கால் டைகர்”. தெலுங்கு தேசத்தில் ரவி தேஜாவிற்கு என்று ஒரு கம்ர்சியல் அந்தஸ்த்து உண்டு. அதை எந்த அளவிற்கு காப்பாற்றி, நடுநிலை ரசிகனை படம் திருப்திபடுத்தியது என்பதை விரிவாக பார்ப்போம்.
எப்போதும் போல் எதற்கும் கவலைப்படாத ஆகாஷ் கதாபாத்திரத்தில் ரவி தேஜா. மாநில அமைச்சர் ஒருவருடன் இணைந்து நாயகன் ரவி தேஜா நல்ல தொடர்பை ஏற்படுத்தி கொள்கிறான். இவனின் செயல்படுகளால் ஈர்க்கப்படும் மந்திரியின் மகள் (ராஷி கண்ணா) எல்லாரும் எதிர்பார்ப்பது போலவே ஆகாஷின் மீது காதல் கொள்கிறாள். இப்படி காதல் நடந்தால் நிச்சயம் பிரச்சனை வருமே என சாமானிய ரசிக பெருமக்களின் யூகத்திற்கு ஏற்றார் போல் காட்சிகள் நிகழ்கிறது.
தடாலடியாக மந்திரி தனது மகளின் திருமணச் செய்தியை அறிவிக்க விழாவிற்கு ஏற்பாடு செய்கிறார். சிறப்பு விருந்தினராக முதலமைச்சரை அழைக்கிறார். சரியாக அந்த நேரத்தில் நம்ம மாஸ் மகராஜா அனைவருக்கும் ஒரு பெரும் அதிர்ச்சியளிக்கிறார். அப்படி அவர் என்ன செய்தார். நாயகி தமன்னாவின் கதாபாத்திரம் என்ன? ராக்ஷி கண்ணாவின் காதல் நிறைவேறியதா? என்பது தான் படத்தின் மீதி கதை.
முதல் பாதி முழுக்கவே ரவி தேஜா ஒற்றை ஆளாக படத்தை தூக்கி செல்கிறார். அழகாக இடை வேளையும் வருகிறது. அது போலவே தொடங்கும் இரண்டாம் பாதி சற்று நேரத்தில் திக்கு தெரியாமல் செல்கிறது. என்னதான கமர்சியல் படமாக இருந்தாலும் ஒரு குட்டி கடிவாளமாவது போட்டிருக்க வேண்டும் இரண்டாம் பாதிக்கு.
அடுத்ததாக தமன்னா, அழகாக இருக்கிறார் பாடல் காட்சிகளில் இன்னும் அழகாக இருக்கிறார். உடைகள் அணிகலங்கள் என அத்தனையும் நல்ல ரசனை. அவரது கதாபாத்திரமும் வழக்கமான மசாலா படத்தில் வரும் நாயகி பாத்திரம் தான். இந்த கதாபாத்திரத்தை தவிர்த்தும் படம் எடுத்திருக்கலாம் என்ற அளவில் உள்ளது படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம். ராக்ஷி கண்ணா கவர்ச்சியால் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறார்.
முதல் பாதியில் மட்டுமே காமெடி ஒரளவிற்கேனும் எடுபடுகிறது. இரண்டாம் பாதியில் அதுவும் இல்லை கொட்டாவி ரகம் தான். ஏற்கனவே நாம் பார்த்து பழக்கப்பட்ட அதே வகை கதை சொல்லல் தான். காதல், காமெடி, சண்டை, பாடல் என அனைத்தையும் சேர்த்து தன்னால் முடிந்த அளவு செம்மையாக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் சம்பத் நந்தி.
என்ன தான் சொன்னாலும் ரவி தேஜா போல் ஒரு தேர்ந்த பொழுது போக்கு ஆக்ஷன் ஹீரோ இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு மாற்று எல்லை என்பது எதார்த்தம். அவர் இருப்பது படத்திற்கு பெரும் பலம் தான். இரண்டாம் பாதியில் சில பழக்கப்பட்ட காட்சிகள் அடுத்தடுத்து வந்து முதல் பாதி ஏற்படுத்தி வைத்திருந்த ஒரு எதிர்பார்ப்பை குறைத்து விடுகிறது.
படத்தில் வித்தியாசமாகவும் ரசிக்கும் படியும் சண்டை காட்சிகள் அமைத்த ராம் லக்ஷ்மணை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். மொத்தமாக படம் பார்த்து வீடு செல்கையில் காட்சிகளை மறந்து விடுங்கள் இல்லையேல் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் உலக சினிமா ரசிகன் விழித்து கொண்டு ஆயிரம் கேள்விகள் கேட்பான்.
பெங்கால் டைகர் - லாஜிக் இல்லாமல் பாயும்