நடிப்பு : முகேஷ், சித்திக், மாளவிகா மேனன்
டைரக்சன் : டி.ஏ.தௌபீக்
சுமார் 25 வருடங்களுக்கு முன் சித்திக்-லால் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான 'இன் ஹரிஹரன் நகர்' படத்தில் வில்லன்களாக நடித்த இருவரின் கதாபாத்திர பெயர் தான் 'ஜான் ஹோனாய்'. அதையே டைட்டிலாக வைத்து ஒரு காமெடி படமாக தர முயற்சித்துள்ளார்கள்..
விபத்தில் சிக்கிய கோடீஸ்வரர் ஒருவர் அந்த நேரத்தில் தன்னை காப்பாற்றிய இளைஞர் ஒருவருக்கு பிளாங் செக் கொடுத்து பணம் எடுத்துக்கொள்ள சொல்கிறார். இளைஞரின் மற்ற இரண்டு நண்பர்களும் அவருடன் சேர்ந்துகொண்டு, அதில் மூன்று கோடி ரூபாயை நிரப்பி வங்கியில் பணமாகவும் மாற்றிவிடுகின்றனர். இதே நேரத்தில் அந்த கோடீஸ்வரன் ஏற்கனவே ஒரு கடத்தல்காரனுக்கு (சித்திக்) கொடுத்திருந்த மூன்று கோடி ரூபாய் செக்கிற்கு பணமில்லை என சொல்லி விடுகிறார்கள்.
கோபமான கடத்தல்காரன் போலியாக செக் கொடுத்த கோடீஸ்வரரை சுட்டுக்கொன்றுவிட்டு, மூன்று கோடியுடன் துபாய்க்கு தப்பிய மூன்று இளைஞர்களையும் தேடி தனது அடியாட்கள் இருவருடன் துபாய் விரைகிறான். இந்த கடத்தல்காரனை பிடிக்க சி.ஐ.டி அதிகாரி முகேஷும் துபாய்க்கு வருகிறார். கடத்தல்காரன் இளைஞர்களை பிடித்து பணத்தை கைப்பற்ற தந்திரமாக வலைவிரிக்கிறான்.. சி.ஐ.டி முகேஷும் கடத்தல்காரனுக்கு கன்னி வைக்கிறார். இதற்கிடையில் சுட்டுக்கொல்லப்பட்ட கோடீஸ்வரரும் துபாயில் இருக்கிறார். இப்படி சில பல டிவுச்ட்டுகளுடன் ஆளாளுக்கு வலை விரிக்க, யார் வலையில் யார் விழுந்தார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.
இளைஞர்களாக மூன்று புதுமுகங்கள் நடிக்க, கதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார்.. இந்தப்படத்தில் நடித்துள்ள முகேஷ், சித்திக், ஜெகதீஷ், அசோகன் ஆகிய நான்கு பேரும் 199௦ல் வெளியான 'இன் ஹரிஹரன் நகர்' படத்தில் நடித்தவர்கள்.. அதனை தொடர்ந்து '2 ஹரிஹரன் நகர்' (2009) மற்றும் 'இன் கோஸ்ட் ஹவுஸ்' (2010) ஆகிய படங்களிலும் அக்கதையின் தொடர் பாகங்களில் நடித்தவர்கள்.. அவர்கள் நால்வரையும் மீண்டும் ஒன்று சேர்ப்பதற்காகவே இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள்..
அதனால் கதையை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் துபாயை சுற்றிக்காண்பிப்பதில் தான் இயக்குனர் தௌபீக்கின் கவனம் இருக்கிறது. டெரர் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பார்த்து வந்த நடிகர் சித்திக்கை கடத்தல்காரன் என்கிற பெயரில் காமெடி கோமாளி ஆக்கிவிட்டார்கள். முகேஷ் சி.ஐ.டி என்பதாலோ என்னவோ, நாக்கு சீன்கள் மட்டும் வந்துவிட்டு, படம் முழுவதும் தலைமறைவாகவே இருக்கிறார்.
நம் ஊரில் அடிக்கடி பல உப்புமா படங்கள் வெளிவரும் இல்லையா..? மலையாள திரையுலகமும் அதற்கு விதிவிலக்கல்ல என்றாலும் அங்கே உப்புமாக்களின் அளவு குறைவுதான். இதுவும் அப்படி ஒரு உப்புமா தான் என்றாலும் ஓரளவுக்கு ருசியாகத்தான் கிண்டியுள்ளார்கள்.