பிரமிட் சாய்மீரா புரடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் லிட்., நிறுவனத்துக்காக மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரிக்கும் புதிய படம் ஏன் இப்படி மயக்கினாய். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருப்பவர் கிருஷ்ணா. கதாநாயகனாக ரிஷி நடிக்க, வேதா, வைணவி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இசை லட்சுமண் ராமலிங்கா. படத்தில் உள்ள ஆறு பாடல்களில் ஒரு பாடலை நா.முத்துகுமார் எழுத, ஐந்து பாடல்களை கார்த்திக் நேத்தா என்ற 23 வயது இளைஞர் எழுதி இருக்கிறார். இளைஞர்களை குறி வைத்து எடுக்கப் பட்டிருக்கும் ஏன் இப்படி மயக்கினாய் படத்தின் பெரும்பாலான காட்சிகள், டீன் ஏஜ் வயதினரின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கின்றன. இப்படத்தில் 95 சதவீத காட்சிகள் அவுட்டோரிலேயே படமாக்கப் பட்டிருக்கின்றன. படத்தின் கதை குறித்து இயக்குனரிடம் கேட்ட போது, ஒரு ஹீரோ இரண்டு ஹீரோயின் இருப்பதால் இது முக்கோண காதல் கதை என்று நினைக்க வேண்டாம். நிச்சயமாக வித்தியாசமான படம் இது. ஆனால் மூவரையும் சுற்றி நடக்கும் கதைதான். சட்டமும், இந்த சமூகமும் பெண்களுக்கே சாதகமாக இருக்கின்றன. இதற்கு எப்போதோ யாரோ ஒரு ஆண் செய்த தவறு காரணமாக இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த ஆண்களையும் தப்பாக நினைக்காலாமா என்ற கேள்வியை எழுப்புகிற படமாகவும் இது இருக்கும் என்றார்.