இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வே இல்லாமல் செய்வோம் என, தேர்தலுக்கு முன், தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும் என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளிப்படையாக அறிவிக்கும் அளவுக்கு, நிலைமை மாறியுள்ளது.
இந்நிலையில், இதை எப்படியாவது குழப்ப வேண்டும் என, சிலர் களம் இறங்கியுள்ளனர். அதில் ஒருவர், தன் அறக்கட்டளை வாயிலாக அறிக்கை வெளியிட்டிருக்கும், நடிகர் சூர்யா. அவரின் அறிக்கையில், மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்த, ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில், நீட் நுழைவுத் தேர்வு வாயிலாக தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின் வடு, காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வு ஆபத்தானது என்று, சொல்லப்பட்டுள்ளது.
சூர்யாவின் அறிக்கைக்கு, டுவிட்டர் வாயிலாக, பா.ஜ., கலை இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அரசு பள்ளியில் படித்து, உயர் கல்வி பெறும் மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம் என, குறிப்பிட்டிருக்கும் நடிகர் சூர்யா எந்த அரசு பள்ளியில் படித்தார்? அவர் துவக்கத்தில் இருந்தே, ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும், தனியார் பள்ளியில் படித்தவர். பட்டப்படிப்பை கூட, லயோலா கல்லுாரியில் தான் முடித்தார். அப்படி இருப்பவருக்கு, அரசு பள்ளி மாணவர்களின் நிலை குறித்து என்ன தெரியும்?
சமூக நீதிக்கு எதிரானது என, நீட் தேர்வு பற்றி குறிப்பிடுகிறார். இவர், நிஜத்தை அறிந்து தான் பேசுகிறாரா; இல்லை, மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை அறிக்கையாக வெளியிட்டு விட்டாரா? நீட் தேர்வு வரும் முன், பணம் படைத்தவர்கள் மட்டுமே, மருத்துவ பட்டப்படிப்பு படிக்க முடியும் என்ற சூழல் இருந்தது. 50 லட்சத்தில் இருந்து, 1 கோடி ரூபாய் வரை கட்ட வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே, எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்பு இருந்தது. நீட் தேர்வு வந்த பின்னே, அந்த நிலை மாறியுள்ளது.
கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் அதிகம் பேர், மருத்துவ படிப்பில் சேர்கின்றனர். புள்ளி விபரங்கள் என்னிடம் உள்ளன. நீட் தேர்வால் ஆபத்து என்பதற்கான ஆதாரங்களோடு சூர்யா வரட்டும். கல்வியாளர்கள் மத்தியில், இருவரும் விவாதிக்கலாம். என் வாதம் எடுபட்டால், நீட் தேர்வு குறித்து பேசுவதை, நடிகர் சூர்யா விட்டு விட வேண்டும். தி.மு.க., தான் சொல்ல வேண்டியதை சொல்ல முடியாமல் தடுமாறினால், சூர்யா முட்டுக் கொடுக்க வந்து விடுகிறார். சூர்யா குடும்பத்தினர், இனிமேல், தி.மு.க., கரை வேட்டி கட்டிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
நீட் தேர்வை சினிமா படப்பிடிப்பு நடத்துவது போல, சூர்யா நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்த மாயையில் இருந்து, அவர் விடுபட வேண்டும். நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராக இருக்கும் அரசு பள்ளி மாணவர்கள், சூர்யா வீட்டுக்கு சென்று, நீட் தேர்வு குறித்து வகுப்பு எடுக்கும் சூழல் உருவாகும்; அதற்கு ஏற்பாடு செய்யப்படும். சூர்யாவின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிப்பவர்கள், நீட் தேர்வுக்கு தயார் படுத்தப்படுகின்றனர். அங்கு சென்று நீட் தேர்வு ஆபத்து என, குரல் கொடுப்பாரா சூர்யா? பொய் தகவல்களை கூறி, தமிழக மாணவர்கள் வாழ்க்கையில், சூர்யா விளையாடக்கூடாது. மீறினால், விளைவுகள் கடுமையாக இருக்கும்.
இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.