அறிமுக இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடித்திருக்கும் திரைப்படம் கமலி ப்ரம் நடுக்காவேரி. என் ஆளோட செருப்ப காணோம் படத்திற்கு பிறகு ஆனந்தி சோலோ ஹீரோயினாக நடித்திருக்கும் படம். லோகய்யன் ஒளிப்பதி செய்துள்ளார், தீனதயாளன் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் துரைசாமி கூறியதாவது: இப்படம் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வரும் பெண், சமூகத்தில் பெண்கள் மீது வைக்கபடும் வரம்புகளை தாண்டி, கல்வியை பெறுவதும், தன் முழு ஆற்றலை அறிந்து கொள்வதும் தான் கதை. கிராமத்தில் இருந்து வந்து ஐஐடிக்குள் நுழையும் பெண், அவள் வழியில் சந்திக்கும் காதல், சுவராஸ்யங்கள், திருப்பங்கள், நிகழ்வுகள் இப்படித்தான் இந்தப்படம் பயணிக்கும்.
இப்போதும் கிராமபுறங்களில் பெண்கள் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை. பெண்கள் இன்னும் அடக்கி வைக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் முழுமையான ஆற்றல் அவர்களுக்கே தெரிவதில்லை அதனை வெளிக்கொண்டு வரும் படைப்பாக இப்படம் இருக்கும். இது சீரியஸான கருத்து சொல்லும் படமாக இருக்காது. காதல், நகைச்சுவை அனைத்தும் கொண்ட மென்மையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும். வருகிற 19ம் தேதி வெளிவருகிறது என்றார்.